அகிலத்தின்
“ஆக்ஸிஜன் சிலிண்டர்”
அமேசான் காடுகள் !
அவற்றில்
பன்னாட்டு
பகாசூர நிறுவனங்கள்
காவு கொண்டதோ
360 சதுர கிலோமீட்டர்கள்!
மனித வாசமற்ற
பனித்துருவங்களில் கூட
நானோ நச்சு
நெகிழித் துகள் படிவு!
“நந்ததேவி”
பனிச்சிகரம்
வெப்ப வீரியத்தால்
பதினான்கு கிலோமீட்டர்
வெடித்துச் சிதறல்!
இமயத்தின்
துணை ஆறுகளின்
வெள்ளப் பெருக்கால்
ஜலசமாதி ஆயின
நூற்றுஅறுபது
மனித உயிர்கள்!
வரலாறு காணாத
பனிப்பொழிவால்
அமெரிக்க
டெக்சாஸ் மாகாணத்தில்
பனி உறைவு!
தண்ணீர் குழாய்கள்
வெடித்துச் சிதறல்!
மின்சாரம் தண்ணீர் இன்றி
நடுங்கியது மாநிலம்!
இந்தப்
பருவநிலை மாற்ற
கருச்சிதைவுக்கு
யார் காரணம்?
இயற்கை அன்னையின்
பச்சை இரத்தம் பருக
“கார்பன் மாஸ்”
காட்டேரிகளை ஏவிவிட்ட
மனிதகுலமே காரணம்!
தொழில் புரட்சியால்
உற்பத்திப் பொருட்கள்
மலைபோல் குவிப்பு!
சந்தைத் தேடலில்
அடிமையான நாடுகளின்
கச்சாப் பொருட்கள்
அடிமாட்டு விலைக்கு
அங்கீகரிப்பு!
சுவாசிப்பது
சுதந்திரக் காற்றுதான்...
அடிமைப்பட்ட நாடுகளை
வளர்ச்சி அடைந்த நாடுகள்
பன்னாட்டு நிறுவனங்கள்
சர்வதேச நிதி மூலதனத்தால்
சுரண்டிக் கொழுப்பதோ
நிற்கவில்லை!
வளரும் நாடுகளின்
வளர்ச்சியைத் தடுக்க
மக்கள் ஆதரவோடு
பொம்மை அரசுகளின்
அராஜகம்!
தொழில் புரட்சி (1750)
துவங்கிய காலம் முதல்
அமெரிக்கா துப்பிய
“கார்பன் மாஸ்”
நாலு லட்சம் மெட்ரிக் டன்!
சீனா 3.5மெ.டன்
இந்தியா2.34மெ.டன்!
2030க்குள் இந்தியா
கார்பன் மாஸை
50விழுக்காடு
குறைக்கும் என்று
“கிளாஸ்கோ” மாநாட்டில்
வாய்ச்சொல் வீரம்
பேசியது போல் அல்லாமல்
உலக நாடுகள்
ஒன்றிணைந்து
“கார்பன் மாஸ் “அற்ற
புத்துலகை
சிருஷ்டிக்க வேண்டும்!
ஒற்றைக் குரலால்
ஒடுங்கி ஒலிக்காமல்
ஒட்டுமொத்த உலகமே
முரட்டு முரசம் கொண்டு
முழங்க வேண்டும்!
இல்லையெனில்...
தனக்கான சவக்குழியை
மனிதன் தானே
தோண்டிக் கொள்ள
நேரிடும்!
பாதுகாப்போம்!
பாதுகாப்போம்!!
பருவநிலை மாற்ற
அழிவில் இருந்து
அகிலத்தைப்
பாதுகாப்போம்!