மயிலாடுதுறை, ஜூலை 17 - தேசிய அளவிலான போல் வால்ட் போட்டியில் தங்கம் வென்ற குத்தாலத்தை சேர்ந்த விளையாட்டு வீராங்கனைக்கு இந்திய மாணவர் சங்கம் பாராட்டுகளை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி (இன்டர்-ஸ்டேட் அத்லெட்டிக் நேஷனல் சாம்பியன்ஷிப் 2022) ஜூன் 10 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடை பெற்றது. இதில் போல் வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த போட்டி யாளர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம், சேத்திரபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவனின் மகள் பரணிகா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் 4.05 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையை படைத்துள் ளார்.
இதற்கு முன்னர் 2018 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கயாத்தி என்ற வீராங்கனை 4 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனை யாக இருந்து வந்த நிலையில், பரணிகா புதிய சாத னையை படைத்துள்ளார். தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ள விளையாட்டு வீராங்கனை பரணிகாவுக்கு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குத்தாலம் பழைய கூடலூரில் உள்ள தனியார் (ஜி.எஸ்.கே.) மெட்ரிக் பள்ளியில் படித்தபோதே ஓட்டப்பந்தயம், தூரம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பரணிகா பெற்றுள்ளார். பின்னர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம், நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரி யில் எம்.காம் பயின்றுகொண்டே போல் வால்ட் கோச் மில்பர் என்பவரிடம் பயிற்சி பெற்று, தற்போது பரணிகா இந்தச் சாதனையை படைத்துள்ளார். இவர் விளையாட்டுத்துறையில் படைத்த சாதனைகள் காரணமாக ரயில்வே துறையின் சென்னை மண்டலத்தில் எழுத்தர் பணி கிடைத்து அங்கு பணியாற்றி வருகிறார். ஆசிய அளவில் நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்று தங்கப் பதக்கம் வெல்வதே தன்னுடைய ஆசை என்றும், அதற்கான தீவிர பயிற்சி மேற்கொண்டு உள்ளதாகவும் பரணிகா கூறினார்.
மேலும், பரணிகா சென்னையில் ஜூன் 10 இல் நடைபெற்ற போல் வால்ட் போட்டியின் போது, போட்டிக்கு பயன்படுத்திய போல் பிளக்ஸி பிளிட்டி குறைந்த காரணத்தால், 4.05 மீட்டர் தூரத்தைவிட அதிக உயரம் தாண்ட முடியாமல் போனதாகவும், தங்களைப் போன்றோருக்கு விளையாட்டு ஆர்வலர்கள் உதவி செய்தால் இன்னும் மேன்மேலும் பல சாதனைகள் படைக்க உறுதுணையாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனிடையே இந்திய மாணவர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக்குழு பரணிகாவின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ள தோடு, அவருக்கு உறுதுணையாக இருப்போம் என்றும் மேலும் பல சாதனைகள் படைக்க உதவப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.