tamilnadu

img

பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிப்பதை உறுதிப்படுத்துக!

சென்னை,அக்.10- அரியலூர், ஓசூர், மயிலாடு துறை, காஞ்சிபுரம், சிவகாசி, கோவில்பட்டி என்று பல்வேறு இடங்களில் நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்துக்கள் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது,  “பட்டாசு விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக ரூ.10 லட்சம் உயர்த்தி வழங்க வேண்டும். தீபாவளி நெருங்கும் நிலையில் பட்டாசு விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும்” என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலை வர் நாகை மாலி.“தமிழ்நாட்டில் சமீப காலமாக  மயிலாடு துறை, அரியலூர், ஓசூர், காஞ்சி புரம் பரவலாக  பட்டாசு ஆலை களில் விபத்து நிகழ்ந்து வருகிறது. இதற்கு பிரதான காரணம், ஆலைகளை நடத்தி வரும் உரிமையாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதில்லை. தொழி லாளர் துறையின் ஆய்வாளர்க ளும் முறையாக தங்களது ஆய்வு  பணிகளை செய்வது கிடையாது என்று குற்றம் சாட்டினார். பட்டாசு ஆலைகளில் ஏழை-எளிய தொழிலாளர்களின் உயிர்  பலி சர்வசாதாரணமாக மாறி விட்டது. இதுபோன்ற நிகழ்வு களை கட்டுக்குள் கொண்டுவர அரசுத்துறையும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். ஓ.பன்னீர்செல்வம், தொடர் கதையாகி விட்ட பட்டாசு ஆளை  விபத்துகளை தடுக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும், அனுப வம் இல்லாத தொழிலாளர்கள் பணியாற்றும் போது பட்டாசு  ஆலையில் விபத்து ஏற்படுகிறது” என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,“ நமது மாநிலத்தில் மொத்தம் 1,482 பட்டாசு  ஆலைகள் இருக்கிறது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் 1085 ஆலைகள் உள்ளது. மாநிலம் முழுமைக்கும் 6,639 சில்லறை பட்டாசு விற்பனை கடைகள் இருக்கின்றன. இதற்கு முன்பு சிவகாசியில் மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்த னர். இப்போது, அந்த நிலை மாறிவிட்டது. தமிழ்நாட்டில் இருக்கும் 38 மாவட்டங்களின் உற்பத்தி நடக்கிறது. ஆலை களை நடத்துவதற்கு உரிமம் வாங்கியிருக்கிறார்கள். தற்போது கிருஷ்ணகிரி அரியலூர் ஆகிய இடங்களில் பட்டாசு விபத்துகள் நடந்துள்ளன.  அந்த பகுதிகளில் அனுபவம் உள்ள நபர்கள் வேலையில் ஈடு படவில்லை. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், அரியலூர் ஆலைக்கு விருதுநகரில் இருந்து 6 நபர்களை அழைத்து சென்று பயிற்சி கொடுத்து வேலை வாங்கியிருக்கிறார்கள். பட்டாசு ஆலையில் வேலை  செய்வது என்பது, தீ குச்சிகளை அடுக்கி வைத்துவிட்டு போவது  அல்ல. மருந்துகள் உரசிக் கொண்டு எளிதில் தீ பிடித்துக் கொள்ளும். தொழிலாளர்களின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்துக்கள் நடந்துள்ளது. இந்த தொழிலை நம்பி சுமார் 7 லட்சம் தொழிலாளர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அதனால்தான் அரசு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செயல்படவில்லை. விருதுநகர், அரியலூர், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வறட்சியான மாவட்டங்கள். எனவே, தான் தொழிலாளர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து இந்த வேலைக்கு வருகிறார்கள். இந்த கூலித் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டியுள்ளது. பொது மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. எனவே, தான் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். இந்த பணி தொடர்ந்து நடக்கும். எதிர்காலத்தில் இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.