சென்னை, ஆக. 19 - தமிழ்நாட்டின் 50-ஆவது தலைமைச் செயலாளராக நா. முருகானந்தம் பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தின் புதிய தலைமைச் செய லாளராக நா. முருகானந்தம் திங்கள்கிழமை (ஆக.19) காலை நியமிக்கப்பட்டார். பணி நியமனம் செய்யப்பட்ட சில நிமிடங்களி லேயே தலைமைச் செயலகம் வந்த அவர், தமிழகத்தின் புதிய தலைமைச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்திலுள்ள அறையில் திங்களன்று கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளையும் அவர் தொடங்கினார். 1991-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அணியைச் சேர்ந்த முருகானந்தம் பல்வேறு துறைகளில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர். 2001-04 வரை கோவை ஆட்சி யராக பணியாற்றிய முருகானந்தம். கடந்த அதிமுக ஆட்சியில் தொழில்துறை முதன்மைச் செயலாளராக பொறுப்பு வகித்தார். மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது நிதித்துறை செயலராக இருந்த அவர், கடந்த ஆண்டு மே மாதம் முதலமைச்சரின் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையிலேயே தற்போது அவர் புதிய தலைமைச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 2021-ஆம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மூத்த ஐஏஎஸ் அதிகாரி வெ. இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்தாண்டு ஜூன் மாதம் ஓய்வுபெற்ற நிலையில், சிவ் தாஸ் மீனா புதிய தலைமைச் செயலாளரானார். இந்நிலையில், சிவ்தாஸ் மீனாவின் பதவிக்காலமும் அக்டோபர் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், அவர் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.