மூணாறு மற்றும் ஊட்டியைக் காட்டிலும் அதிகம் சுற்றுலா பயணிகளை கவர்கிற ஊர் வால்பாறை. இயற்கையை விரும்பும், ரசிக்கும் பயணிகளுக்கான சொர்க்கம் என்று சொல்லலாம். ஆளரவமற்ற அமைதியான பள்ளத்தாக்குகள், புல்வெளிகள், அருவிகள், நதிகள் என இயற்கை அழகு இங்கு கொட்டிக்கிடக்கிறது. கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் மிக உச்சியில் இருக்கிறது வால்பாறையின் மலைப்பகுதி. வருடத்தின் பெரும்பகுதி நாட்கள் இங்கு மழை பெய்கிறது. மழையில் கொட்டுகிறதெல்லாம் கீழேதானே வரும்? அருவிகளாகவும், ஓடைகளாகவும் பெருகி கொட்டுகிற அந்த மழைத்தண்ணீர் வீணாகிவிடக்கூடாது என்ற திட்டமிடலில் விளைவு அடிவாரத்தில் இருக்கிற ஆழியாறு அணை. தரைப்பரப்பில் இருந்து சுமார் 3500 அடி உயரத்தில் இருக்கிறது வால்பாறை. ஏழாவது சொர்க்கம் என்று இதற்கு செல்லப்பெயரும் உண்டு. மனதை மயக்கும் பல்வேறு திறன் வாய்க்கப் பெற்றிருக்கிறது.
மலைச் சரிவுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கிற இந்த நகரத்தின் எல்லை அதிகபட்சம் 2 கி.மீட்டர் சுற்றளவிற்குள் முடிந்துவிடுகிறது, என்றாலும் சிரிதும் பெரிதுமாக 54 எஸ்டேட்டுகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது வால்பாறை. இங்கு வசிப்பவர்களில் 100க்கு 90சதவீதம் பேர் தோட்டத்தொழிலாளர்களே. ஆழியாறு அணை, பூங்கா, மங்கிபால்ஸ் (குரங்கு அருவி) இவை இரண்டும் வால்பாறை மலை அடிவாரத்தில் இருக்கின்றன. சோலையாறு அணை, சின்னக்கள்ளாறு அணை, நீரார் அணை, பாலாஜி கோவில், அக்காமலை, கிராஸ்கில்ஸ் தேசிய பூங்கா நல்லமுடிக்காட்சி முனை ஆகியவை அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள். ஜூன் மாதம் துவங்கி கிட்டத்தட்ட செப்டம்பர், அக்டோபர் வரை இங்கு மழை வெளுத்துக்கட்டும் வெளியே தலைகாட்ட முடியாது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை மிக அதிக குளிர்காலம். ஜனவரி முதல் மே இறுதிவரை பிரமாதமான சீசன் காலம் ஆகும். குளிரும் அதிகம் இருக்காது. நல்ல கொண்டாட்ட காலம் ஆகும்.