tamilnadu

ஜூலை 21 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்

ஜூலை 21 முதல் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர்

ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவிப்பு

புதுதில்லி, ஜூன் 4 - நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர், ஜூலை 21 அன்று தொடங்கும் என்று  ஒன்றிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். ‘ஆபரேசன் சிந்தூர்’ தொடர்பாக, நாடாளுமன்ற சிறப்பு அமர்வைக் கூட்டி விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.   காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்பட, இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள 16 கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு, பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக கடிதம் ஒன்றையும் செவ்வாயன்று எழுதியிருந்தனர். இந்நிலையிலேயே, மழைக்காலக் கூட்டத் தொடருக்கான அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. சுமார் 3 மாத இடைவெளிக்குப் பிறகு  தொடங்கும் மழைக்காலக் கூட்டத் தொடர்,  ஜூலை 21 அன்று முற்பகல் 11 மணியள வில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத் தொடரின் போது, விதிகளின் கீழ், அனைத்துப் பிரச்சனைகளையும் விவாதிக்கலாம் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்துள்ளார். இதனால், பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேசன் சிந்தூர் ஆகியவை இந்த அமர்வின் முக்கிய விவாதப் புள்ளிகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானமும் மழைக்காலக் கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஜனவரி 31 அன்று நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது.  தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடைபெற்று, ஏப்ரல் 4-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.