tamilnadu

img

நீதித்துறையை காவிமயமாக்கத் துடிக்கும் மோடி அரசு! - அ.மாரிமுத்து

“நீதிபதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படாததால், மக்களால் அவர்களை மாற்ற முடிவதில்லை” என்றும், எனினும் “தற்போதுள்ள அமைப்பு இப்படியே தொடரும் என்று நினைப்பது தவறாகும்” என்றும் கிரண் ரிஜிஜூ உச்சநீதிமன்றத்தை பகிரங்கமாக மிரட்டியுள்ளார். 99-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்ட தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து விட்டதற்காக, “அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளையும், மக்களின் ஆணையையும் புறக்கணிப்பவர்கள் மட்டுமே இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேலானவர்கள் என்று நினைக்கிறார்கள்’’ என்றும் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் அமைப்பு தேர்வு செய்வதற்கு நரேந்திர மோடி அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நாங்களே நீதிபதிகளை நியமிப்போம் என்று கூறி வருகிறது. ஆனால், உச்ச நீதிமன்றம் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பதால், மோடி அரசுக்கு ஆத்திரம் வருகிறது. அந்த ஆத்திரத்தை ரிஜிஜூ ஒவ்வொரு நாளும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். அதைத்தான் இப்போதும் செய்திருக்கிறார்.

99வது அரசியல் சட்டத்திருத்தம்

நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, 2014-ஆம் ஆண்டு பொறுப்பேற்றதும் நீதிபதிகள் நியமனத்தில் மாற்றங்களைக் கொண்டுவர முயன்றது. இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் 99-ஆவது திருத்தத்தை (99th Constitutional Amendment Act) மேற்கொண்டு, தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை (National Judicial Appointments Commission- 2014) அமைத்தது. நாடாளுமன்றமும் இதற்கு ஒப்புதல் அளித்தது. உயா் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனம், பணியிடமாற்றம், பதவி உயா்வு உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக தேசிய நீதிபதிகள் நியமன ஆணையமே இனி முடிவெடுக்கும் எனவும் அறிவித்தது. ஆனால், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவற்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையமானது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக உள்ளதாகக் கூறி அந்த ஆணையத்தைக் கலைத்தும், 99-ஆவது அரசியலமைப்புத் சட்டத் திருத்தம் செல்லாது எனவும் 2015 அக்டோபா் 16-ஆம் தேதி தீா்ப்பளித்தது.9 நீதிபதிகளைக் கொண்ட அமா்வு வழங்கிய தீா்ப்பின் அடிப்படையில் 1993-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலீஜியம் அமைப்பே நீதிபதிகளைத் தேர்வு செய்யும் என்றும் அறிவித்தது. 

இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, கொலீஜியம் குறித்து அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை என்பதும், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீா்ப்புகளின் மூலமாகவே கொலீஜியம் அமைக்கப்பட்டது என்பதும் உண்மைதான். உச்சநீதிமன்ற நீதிபதிகளைக் குடியரசுத் தலைவரே நியமிப்பார் என அரசியலமைப்புச் சட்டத்தின் 124(2)-ஆவது பிரிவு குறிப்பிடுகிறது. அவ்வாறு நியமிக்கும்போது மற்ற உச்ச நீதிமன்ற, உயா் நீதிமன்ற நீதிபதிகளின் ஆலோசனையையும் குடியரசுத் தலைவா் பெறுவார் என அது கூறுகிறது. இதேபோல உயா் நீதிமன்ற நீதிபதிகளை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் ஆளுநா் ஆகியோரைக் கலந்தாலோசித்து குடியரசுத் தலைவா் நியமிப்பார் என அரசியலமைப்புச் சட்டத்தின் 217-ஆவது பிரிவு தெரிவிக்கிறது. இவற்றிலிருந்தே உச்ச நீதிமன்றம் தங்களுக்கான அதிகாரத்தை எடுத்துக் கொண்டு கொலீஜியம் என்ற அமைப்பை உருவாக்கியதாக கூறப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக, அரசியலமைப்புச் சட்டத்தின் 50-ஆவது பிரிவு, நிர்வாகத் (அரசின்) தலையீடு இல்லாமல் நீதித்துறை சுதந்திரமாகச் செயல்படுவதை உறுதி செய்ய வலியுறுத்துகிறது. இதுதொடர்பான பல்வேறு விதிகளும் அரசியலமைப்புச் சட்டத்திலேயே இருக்கின்றன. நீதிபதிகள் ஆட்சியாளர்களைச் சாராமல் நடுநிலைத்தன்மையுடன் செயல்பட்டு நீதி வழங்க வேண்டும் என்பதே இந்த சட்டப்பிரிவுகளின் நோக்கம். இதனையும் உச்ச நீதிமன்றம் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, கொலீஜியத்தை உருவாக்கியது.

அதன்படி முதலில் மூன்று நீதிபதிகளைக் கொண்டதாக இருந்த கொலீஜியம், பின்னர் 1998-இல் 5 நீதிபதிகளைக் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டது. (தற்போது 6 நீதிபதிகளை உள்ளடக்கியதாக உள்ளது) இந்த கொலீஜியம் அமைப்பே 30 ஆண்டுகளாக நீதிபதிகளை தேர்வுசெய்து, ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்து வருகிறது. அப்பரிந்துரையை ஒன்றிய சட்ட அமைச்சகம் ஆராய்ந்து, ஆட்சேபணை இருந்தால், கொலீஜியத்துக்கே திருப்பி அனுப்பும். ஒன்றிய அரசுக்கு ஆட்சேபணை இல்லாத பட்சத்தில், ஒன்றிய அரசு அளிக்கும் ஒப்புதலின் அடிப்படையில், கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களை குடியரசுத் தலைவா் நீதிபதிகளாக நியமித்து உத்தரவிடுவார். இந்த நடைமுறையே தற்போது வரை தொடா்ந்து வருகிறது. கொலீஜியம் மூலமான நீதிபதிகள் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது முக்கியமான விமர்சனமாக உள்ளது. இதற்கு தீர்வுகாண, சுதந்திரமான நீதித்துறை ஆணையம் என்பதை அமைக்க வேண்டும் என, நீண்டகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அகில இந்திய வழக்கறிஞர் சங்கமும் வலியுறுத்தி வருகிறது. அதைச் செய்ய மோடி அரசு தயாராக இல்லை.  மாறாக, குறுக்கு வழியில் நீதித்துறையின் அதிகாரங்களை மீறுவதற்கும், நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதற்குமான வேலைகளில் மோடி அரசு இறங்கியது. நாங்கள்தான் நீதிபதிகளை நியமிப்போம்; இல்லாவிட்டால் கொலீஜியம் பரிந்துரைக்கும் பெயர்களை கிடப்பில் போட்டு, நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்களை காலியாகவே விடுவோம்; வழங்குகள் தேங்கி, மக்கள் அவதிப்பட்டாலும் பரவாயில்லை என்ற நிலையை எடுத்தது.

கொலீஜியமும் ஒருகட்டத்தில், “சிபாரிசு செய்தவர்களை நியமிக்குமாறு ‘கொலீஜியம்’ மீண்டும் வலியுறுத்திவிட்டால் 3 அல்லது 4 வாரங்களுக்குள் ஒப்புதல் அளித்தாக வேண்டும்” என்று 2021 ஏப்ரல் 20-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பிக்க வேண்டிய நிலைக்குச் சென்றது. இது மோதல் போக்கை தீவிரமான கட்டத்திற்கு கொண்டு சென்றது. மோடி அரசும், கொலீஜியத்தின் முக்கியமான பரிந்துரைகளை கிடப்பில் போட்டு, தன்பங்கிற்கு வேலையைக் காட்டியது. இதுதொடர்பாக விமர்சனங்கள் மேலெழுந்த நிலையில், கொலீஜியம் முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, கடந்த 2022 நவம்பர் 2-ஆம் தேதி மெதுவாக பேச்சை ஆரம்பித்தார். டிசம்பரில் மழைக்காலக் கூட்டத்தொடரின்போது நாடாளுமன்றத்திலேயே இதுபற்றி அவர் குறிப்பிட்டார்.

கிரண் ரிஜிஜூவும் ஜகதீப் தன்கரும்

“கொலீஜியம் முறை திருப்திகரமாக இல்லை என மக்கள் கருதுகின்றனர்; அரசமைப்புச் சட்டக் கூறுகளின்படி, நீதிபதிகளை நியமிப்பது அரசின் பணியே ஆகும். உலகம் முழுவதும் அரசுதான் நீதிபதிகளை நியமித்து வருகிறது” என்று கூறிய ரிஜிஜூ, கொலீஜியம் அமைப்புக்கு ஒரு முடிவு கட்டும் வகையில், “நீதிபதிகள்  நியமனங்களுக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதிபதிகளின் காலியிடங்கள் மற்றும் நியமனங்கள் இப்படியே தொடரும்” என்றும் ஆணவத்துடன் கூறினார்.  குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரும், 2022 டிசம்பர் 7-ஆம் தேதி மாநிலங்களவையில் பேசுகையில், “முறையான சட்டப்பூர்வ அரசியலமைப்பு (தேசிய நீதித்துறை நியமன ஆணைய -National Judicial Appointments Commission - NJAC) உத்தரவை நீதித்துறை ரத்து செய்தது ஜனநாயக வரலாற்றில் இதுவரை நடந்திராத சம்பவம்” என்றார்.  “கொலீஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள், தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக பரிந்துரைக்கின்றனர். இதேபோல், தங்களுக்குத் தெரிந்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்க பரிந்துரைக்கின்றனர். இது, அடிப்படையிலேயே குறைபாடு உள்ள நடைமுறை. பதவிக்குத் தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் மட்டுமே பரிந்துரைகள் இருப்பதில்லை. உலகம் முழுவதும் அரசுதான் நீதிபதிகளை நியமிக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்கின்றனர். கொலீஜியம் முறை ஏற்புடையது அல்ல” என்று கிரண் ரிஜிஜூ ஒருபடி மேலே சென்றார். நீதிபதிகள் நியமன விவகாரத்தில், ஒன்றிய அரசுக்கு எதிராக மும்பை வழக்கறிஞர்கள் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு 2022 நவம்பர் 29 அன்று உச்ச நீதிமன்றத்தில் எஸ்.கே. கவுல், ஏ.எஸ். ஓகா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கிரண் ரிஜிஜூ-வின் பேச்சு நீதிபதிகளின் கவனத்திற்கு சென்றது. 

வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம்

அப்போது, “பொதுவாக நீதித்துறை தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் விமர்சன அறிக்கைகளை நாங்கள் புறக்கணித்து விடுகிறோம். ஆனால், உயர்பொறுப்பில் இருப்பவர் (ஒன்றிய சட்ட அமைச்சர்) விமர்சனம் செய்துள்ளார். இது நடந்திருக்கக் கூடாது” என்று நீதிபதி எஸ்.கே. கவுல்,  ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட ரமணியிடம் தனது அதிருப்தியைத் தெரிவித்தார். “ஒன்றிய அரசு கொண்டுவந்த தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே, கொலீஜியம் பரிந்துரைகளை ஒன்றிய அரசு கிடப்பில் வைத்திருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. எதுவானாலும், காலதாமதம் செய்வதற்கு அது ஒரு காரணமாக இருக்கக்கூடாது. உச்ச நீதிமன்ற - உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் தொடர்பாக கொலீஜியம் அளித்த பெயர்களில் சிலவற்றுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கிறது. இதனால், பணிமூப்பு அடிபடுகிறது. கொலீஜியம் சிபாரிசு அளித்து விட்டால், அந்த விவகாரம் முடிந்து விட்டதாக கருத வேண்டுமே தவிர, ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு நீதித்துறை பணிகளை பாதிக்கும் வகையில் செயல்படக்கூடாது. ஆனால், கொலீஜியம் பரிந்துரைகளில் ஒன்றிய அரசு ஏறி உட்கார்ந்து கொள்கிறது. மேலும் கொலீஜியம் அமைப்பை அச்சுறுத்துகிறது. நீதிபதிகள் நியமிக்கப்படாவிட்டால், நாட்டில் நீதி அமைப்பு எவ்வாறு செயல்படும்? பல பரிந்துரைகள் கடந்த நான்கு மாதங்களாக நிலுவையில் உள்ளன. சில பெயர்கள் ஒன்றரை ஆண்டாக நிலுவையில் உள்ளன. உச்சநீதிமன்ற கொலீஜியம் அமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளில் ஒருவர் மரணமடைந்து விட்டார். நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்ட சில வழக்கறிஞர்கள், தங்கள் சம்மதத்தை விலக்கிக் கொண்டுவிட்டனர். கடந்த 2 மாதங்களாக நீதித்துறை பணிகள் அனைத்தும் முடங்கி விட்டன.

இதுபோன்று நீதிபதிகள் நியமனத்தைக் கிடப்பில் போட்டு, ஒன்றிய அரசு எல்லை மீறிச் செல்கிறது. மேலிடத்தில் இருப்பவர்கள் (ஒன்றிய அரசின் ஆட்சியாளர்கள்), தாங்கள் நினைப்பதை செய்வோம் என்று நினைத்தால், நாங்களும் (உச்சநீதிமன்றம்) நாங்கள் நினைப்பதை செய்வோம். எனவே, நீதித்துறை தனது பங்குக்கு முடிவு எடுக்கும் நிலைக்கு எங்களைத் தள்ளி விடாதீர்கள். சட்டத்தை பின்பற்றுங்கள். நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை என்பது இந்த நாட்டின் சட்டம். அதற்கு அனைத்துத் தரப்பினரும் கட்டுப்பட வேண்டும். சட்டங்கள் இருக்கும்வரை அவற்றை பின்பற்றியே ஆகவேண்டும். இங்கு அட்டர்னி ஜெனரலும், சொலிசிட்டர் ஜெனரலும் வந்து இருக்கிறார்கள். அவர்கள் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட வேண்டும். ஒப்புதல் அளிப்பதற்கு உச்சநீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடுவை பின்பற்றுமாறு ஒன்றிய அரசுக்கு அறிவுரை கூற வேண்டும்” என்றும் காட்டமாக குறிப்பிட்டனர். குறிப்பான பிரச்சனைகளில் போதுமான சட்டங்கள் இல்லாதபோது, உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளே சட்டமாக கருதப்பட்டு, பின்பற்றப்படும். இதைத்தான் கொலீஜியம் விஷயத்தில், “கொலீஜியம் இந்த நாட்டின் சட்டம்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

கொலீஜியம் குறைபாடு: ஒப்புக் கொண்ட தலைமை நீதிபதி

இந்த விவகாரத்தில் தலையிட்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், தில்லியில் பார் அசோசியேசன் நடத்திய ‘நவம்பர் 26 அன்று அரசியமைப்பு நாள் விழா’வில் பேசுகையில், “நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித்துறையும் ஒன்றிய அரசும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கக் கூடாது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வலியுறுத்தினார். “ஜனநாயகத்தில் எந்த ஒரு அமைப்பும் முழுமையானது அல்ல; அதற்கு கொலீஜியமும் விதிவிலக்கல்ல!” என்பதையும் அவர் ஒப்புக்கொள்ளத் தவறவில்லை. “நான் உள்பட கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து நீதிபதிகளும் அரசியல் சாசனத்தை நிலைநாட்ட விசுவாசமான வீரர்களைப் போன்று செயலாற்றுகிறோம். ஆனால் இதில் குறைபாடுகள் உள்ளதாக கூறப்படும்போது, நாம் அந்த அமைப்புக்கு உட்பட்டே அதற்கும் தீர்வுகாண வேண்டியுள்ளது. கொலீஜியம் நடைமுறை விவகாரத்தில் ஒன்றிய அரசும், உச்சநீதிமன்றமும் ஒருவர் மீது ஒருவர் குறைகூறிக் கொண்டிருக்கக் கூடாது. இரு தரப்புக்கும் இடையே சமநிலை தேவை. கொலீஜியம் மூலமாக ஒன்றிய அரசுக்கு பரிந்துரைகளை அனுப்புவதற்கு முன், பல்வேறு கட்டங்களாக பரிசீலனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒன்றிய அரசுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இடையே அரசியலமைப்பு சார்ந்த அரசாட்சி நடைமுறை தொடரவேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டார். இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் பங்கேற்றிருந்தார். 

டி.ஒய். சந்திரசூட்டின் கருத்தையே, உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்கூரும் ஒருமுறை பிரதிபலித்திருந்தார். “கொலீஜியம் சரியான நடைமுறை அல்ல என்று தினமும் யாராவது கூறுவதை செய்திகளில் படிக்கிறோம். கொலீஜியம் முறை மிகச் சரியானது என்று யாரும் கூற முடியாது; அதேசமயம், அந்த முறையை மேம்படுத்த முடியும். அவ்வாறான முயற்சிகளுக்கு எதிராக யாரும் விவாதிக்கமாட்டாா்கள் என எண்ணுகிறேன். கொலீஜியம் முறைக்கு மாற்றாக தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணையத்தை உருவாக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 2014-இல் இயற்றியது. நீதித் துறையின் சுதந்திரத்தை சமரசம் செய்யும் வகையில் இருந்ததால், அச்சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், அதேபோன்ற வேறொரு சட்டத்தை கொண்டுவருவதற்கு வேறு வாய்ப்புகளோ அல்லது வழிகளோ இல்லை என்று அா்த்தமில்லை. எனவே, அனைத்து வழிகளிலும் முயற்சிக்கலாம். மாற்றுத் தீர்வைக் குறிப்பிடாமல், கொலீஜியம் முறையை வெறுமனே விமர்சிப்பது எந்தப் பலனையும் தராது. கூட்டாட்சித் தன்மையைப் பாதுகாப்பதோ அல்லது நாட்டின் அடிப்படை உரிமைகள் அல்லது மதச்சார்பற்ற தன்மையை பாதுகாப்பதாயினும், இவை இறுதியில் ஒரு சுதந்திரமான நீதித்துறையால் மட்டுமே கவனிக்கப்படக் கூடிய அம்சங்களாகும். அங்குதான் நீதித்துறை மற்றும் ஊடகங்களின் பங்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்திருந்தார்.

ஜகதீப் தன்கரின் தவறான வியாக்யானம்

ஆனால், நீதிபதிகள் நியமனத்திற்கான சுதந்திரமான அமைப்பை உருவாக்குவதற்கு, புதிய சட்டம் கொண்டு வருவது பற்றி பேசுவதற்குப் பதிலாக, மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், 2023 ஜனவரி 11 அன்று புதிய விவகாரத்திற்குள் புகுந்தார். “இந்திய அரசியலமைப்பின் அடிப்படையையே மாற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது” என்று கொக்கரித்தார். “இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதியையும் திருத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருந்தாலும், அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றவோ அல்லது அழிக்கவோ இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது” என்று கடந்த 1973-ஆம் ஆண்டு, கேசவானந்த பாரதி வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு ஒன்றை அளித்திருந்தது. இந்த வரலாற்றுத் தீர்ப்பை தன்கர் விமர்சித்தார். 

“இந்த தீர்ப்பு ஒரு தவறான முன்னுதாரணம். அரசியலமைப்பைத் திருத்தும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை யாரேனும் கேள்வி எழுப்பினால், நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் எனச் சொல்வது கடினமாகப் போய்விடும்” என்று அவர் கூறினார். அப்போது ஜகதீப் தன்கருக்குப் பதிலளித்த, ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சரும், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞருமான  ப. சிதம்பரம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில்தான் சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிற்கு நேரடியாகவே ஒரு கடிதத்தை எழுதினார். அதில், “நீதிபதிகள் நியமனத்துக்கான தேர்வில் பொறுப்பேற்றல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் விதமாக உச்ச நீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்றங்களின் கொலீஜியங்களில், முறையே ஒன்றிய, மாநில அரசுகளின் பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்ய வேண்டும்” என்று கூறி, புதிய சர்ச்சையை ஆரம்பித்தார். வழக்கம்போல இதுவும் விமர்சனங்களுக்கு உள்ளானது. மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான கபில்சிபல் இதுதொடர்பாக விரிவாகவே தனது கருத்தை வெளியிட்டார்.

நீதித்துறையை  காவிமயமாக்க முயற்சி

“நாட்டிலுள்ள அனைத்துத் துறைகளையும், ஒன்றிய பாஜக அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு போய் விட்டது. எல்லா துறைகளிலும் அவர்களுடைய சித்தாந்தம் கொண்ட ஆட்கள்தான் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் நீதித் துறையைக் கைப்பற்றி, அதிலும் பாஜக-வினருக்கு தேவையான ஆட்களை நியமித்தால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்தானதாக அமைந்துவிடும். ஆளும் பாஜக-வின் (இந்துத்துவா) சித்தாந்தத்தை கொண்டவர்கள்தான் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களாக இருக்கிறார்கள். மாநிலங்களில் ஆளுநர்களாக இருக்கிறார்கள். அதேபோல அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ என அனைத்திலும் இவர்கள்தான் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் பாஜக புகழ் பாடி வருகிறார்கள். இந்த வரிசையிலேயே நீதிபதிகளையும் விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள். தற்போதைய அவர்களது அரசாங்கம் பெரும்பான்மையுடன் இருப்பதால் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சூழல் உள்ளது. தற்போது இருக்கும் கொலீஜியம் முறை குறித்து, மாற்றுக் கருத்து இருக்கிறது. கொலீஜியம் முறை சட்டத்திற்கு உட்பட்டதுதான். அதேநேரம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல. கொலீஜியத்தில் இடம்பெற்றிருப்பவர்கள் தங்களுக்கு தெரிந்த நெருக்கமானவர்களை நீதிபதிகளாக நியமித்துள்ளதாக அவர்கள் மீது விமர்சனங்கள் உள்ளன. ஆனால், ஒன்றிய அரசு நேரடியாக நீதிபதிகளை நியமிப்பதை விட, கொலீஜியம் முறை சிறந்தது. எனவே, நீதித்துறையை கைப்பற்றுவதற்கு ஒன்றிய அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் ஜனநாயகத்தின் கடைசி கோட்டை நீதிமன்றம்தான். அதுவும் கைப்பற்றப்பட்டுவிட்டால் ஜனநாயகத்தில் மக்களுக்கு நம்பிக்கையில்லாமல் போய்விடும் என்று கபில் சிபல் குறிப்பிட்டார்.

சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவோ, கொலீஜியத்தை வில்லனாகக் காட்டி, தங்களின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளும் திட்டத்தை தொடர்ந்து வெளிச்சத்திலேயே வைத்திருக்க விரும்பினார். அதனடிப்படையில் தில்லி உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.எஸ். சோதியின் வீடியோ ஒன்றை ஜனவரி 22 அன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.  “சட்டம் இயற்ற நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் இருக்கிறது. உச்சநீதிமன்றத்திற்கு இல்லை. அரசியல் சட்டத்தை உச்சநீதிமன்றம் திருத்த முடியுமா? நாடாளுமன்றம்தான் திருத்த முடியும். இப்பிரச்சனையில், முதல்முறையாக அரசியல் சட்டத்தை உச்ச நீதிமன்றம் புறந்தள்ளி விட்டது. அத்துடன், ‘நீதிபதிகளை நாங்களே நியமிப்போம், இதில் ஒன்றிய அரசுக்கு பங்கு இல்லை’ என கூறத்தொடங்கி இருக்கிறது” என்று ஆர்.எஸ். சோதி வைத்திருந்த விமர்சனத்தை கிரண் ரிஜிஜூ வழிமொழிந்தார்.

மிரட்டலை ஆயுதமாக்கி வரும் சட்டஅமைச்சர்

மறுநாளே, “நீதிபதிகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படாததால், மக்களால் அவர்களை மாற்ற முடிவதில்லை” என்று அடுத்த தாக்குதலையும் அவர் தொடுத்தார்.  தில்லி தீஸ் ஹசாரி நீதிமன்றங்கள் வளாகத்தில், பார் கவுன்சில் ஏற்பாடு செய்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய கிரண் ரிஜிஜு,  “1947 முதல் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, தற்போதுள்ள அமைப்பு தொடரும்; அது ஒருபோதும் கேள்விக்கு உள்ளாக்கப்படாது என்று நினைப்பது தவறாகும். மாறிவரும் சூழ்நிலையே தேவைக்கான ஆணையைப் பிறப்பிக்கிறது. அதனால்தான் அரசியலமைப்புச் சட்டத்தை நூறு முறைக்கு மேல் திருத்த வேண்டியிருந்தது” என்று கூறினார். கிரண் ரிஜிஜூவின் பேச்சுக்கள் அனைத்தும், உள்ளார்ந்த அடிப்படையில் அவை, நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும்; அதற்காக கொலீஜியம் அமைப்பை எதிர்க்கிறோம் என்பதல்ல; மாறாக, நீதித்துறையையும் காவிமயமாக்க வேண்டும்; சங்-பரிவாரத்திற்கு நெருக்கமானவர்களை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலானதாகும். பாஜக தலைவர்களுக்கு எதிராக தீர்ப்புகள் வழங்கிய அகில் குரேஷி, கே.எம். ஜோசப், எஸ். முரளிதர் உள்ளிட்ட நீதிபதிகளுக்கு நேர்ந்த கதி அனைவரும் அறிந்ததே!.