சென்னை,மார்ச் 1- தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றக் கொண்ட பின்பு மு.க.ஸ்டாலின் கொண்டாடும் முதல் பிறந்த நாள் இது என்பது குறிப்பிடத் தக்கது. தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்ச் 1 அன்று 69-வது பிறந்தநாள். இதையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள வீட்டில் தனது தந்தையும் மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி யின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன் உள்ளிட்ட குடும்பத்தினர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல் சகோதரிகள் செல்வி, கனிமொழி எம்.பி. சகோதரர் மு.க.தமிழரசு ஆகியோரும் குடும்பத்துடன் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர். அதன் பிறகு காலை 7.30 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோர் நினைவிடங்களுக்கு சென்று மலர் வளையம் வைத்தும், அவர் எழுதிய ‘உங்களில் ஒருவன்’ புத்தகத்தை வைத்து வணங்கினார். சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்ற முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், கீழ்ப்பாக்கத்தில் உள்ள மறைந்த பேராசிரியர் அன்பழகனின் வீட்டுக்கு சென்று அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கினார். கோபாலபுரம் வீட்டில் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். திமுக பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.பி.க்கள். ஆ.ராசா, தயாநிதிமாறன், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.