tamilnadu

img

நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லையாம்!

மதுரை,ஜூன் 21-   நீட்  விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தார். இதுகுறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அனுப்பிய கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காணாமல் போவது கடிதமல்ல;நிர்வாக நேர்மை என்று உள்துறை அமைச்சகத்தின் நடவடிக்கையை சு.வெங்கடேசன் எம்.பி., விமர்சித்துள்ளார். இதுகுறித்து சு.வெங்க டேசன் எம்.பி.,வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு  மாநில பொதுப் பள்ளிக்கான மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு அனுப்பிய கோரிக்கை விண்ணப்பத்தை இணைத்து நான் குடியரசுத் தலை வருக்கு 19.01.2023 அன்று கடிதம் எழுதியிருந்தேன். அதில் தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதா 15 மாதங்களாக ஒப்புதல் தரப்படாமல் தாமதம் ஆவ தையும், இதனால் லட்சக்கணக்கான தமிழ்நாடு பெற்றோர், மாணவர்கள் மன உளைச்சலுக்கும் வேதனைக் கும் ஆளாகி இருப்பதை சுட்டிக் காட்டி இருந்தேன். (கடித எண் H97/GOI/MP/Madurai/19.01.2023). 

இதற்கு குடியரசுத் தலைவர் அலுவல கத்தில் இருந்து பதில் வந்தது. அதில் எனது கடிதம் உள்துறை அமைச்சகத்திற்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டு இருந்தது. ( கடித எண் CII - 11001/1/2022- CA -II dated 02.03.2023). பொதுப்பள்ளிக்கான மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந் திர பாபு உள் துறை அமைச்சகத்திடம் இருந்து பெற்றுள்ள தகவல் உரிமைச் சட்ட பதில் (RTI reply) அதிர்ச்சி அளிக்கிறது.  “24.12.2022 தேதியிட்ட கோரிக்கை விண்ணப்பத்தை இணைத்து 19.01.2023 அன்று  வெங்கடேசன் அளித்த கடிதம், தங்களின் கடிதத்தில் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இருந்து எங்கள் அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டிருப்பது போல எங்களுக்கு அது வரப் பெறவில்லை.” ( பார்வை: A/43020/01/2023- RTI - 897 dated 17.05.2023). என்று உள்துறை அமைச்சகம் பதில் அளித்துள்ளது. இந்த நாட்டின் நிர்வாக தலைமையகமான குடியரசுத்தலைவர் மாளிகை நாடாளுமன்ற உறுப்பினரின் கடிதத்தை மேல் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளதாக சொல்கிறது. ஆனால் உள்துறை அமைச்ச கமோ அப்படியொரு கடிதம் வரவில்லை என்று சொல்கிறது. தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலம் குறித்த மிக முக்கியமான பிரச்சனை யில் ஒன்றிய அரசுசார் நிர்வாகம் எவ்வளவு அலட்சியப்போக்கோடு நடந்து கொள்கிறது என்பதற்கு இது சிறந்த உதாரணம். காணாமல் போனது கடிதமல்ல, நிர்வாகத்தின் நேர்மை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இன்று குடியரசுத் தலைவருக்கு மீண்டும் ஒரு கடிதம் எழுதியுள்ளேன். உடனடியாக தலையிட்டு 21 மாதங்களாக நிலுவையில் உள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் தர ஆவன செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.  இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.