சென்னை, ஏப். 15 - ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள கல்வி மீது மாநில அரசுகளை கலந்தலோசிக்காமல் ஒன்றிய அரசு சட்டங்களை கொண்டு வருகிறது. கல்வி ரகசியப்பட்டியலில் உள்ளதுபோல் இருக்கிறது. கல்வி துறையில் ஒன்றிய அரசு என்ன செய்கிறது என்றே மாநிலங்களுக்கு தெரிவதில்லை என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமர்சித்துள்ளார். அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு “இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வை யில் கல்வியும் ஜனநாயகமும்” என்ற தலைப்பில் வியாழனன்று (ஏப்.14) எழும்பூரில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. பொதுப் பள்ளிக்கான மாநில மேடை சார்பில் நடை பெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார். அப்போது, சமூகநீதி, சமத்துவத்தை மாணவர்க ளின் உள்ளத்தில் உருவாக்க வேண்டும். படிக்கும் போதே மாணவர்கள் சமுதாய உணர்வை பெற வேண்டும் என்பதுதான் உண்மையான கல்வி. கல்வி ஒத்திசைவுப் பட்டியலுக்கு சென்ற பிறகு மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் தேசிய கல்விக் கொள்கையை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது என்றார்.
இந்தியா பல்வேறு தேசிய இனங்களை கொண்டது. ஒருமைப்பாட்டு உணர்ச்சிகளை உருவாக்குவது வேறு. ஆனால் ஒரே உணவு, உடை, மொழி, படிப்பு என ஒற்றைத் தன்மை கொண்டதாக மாற்ற முயற்சிக்கின்றனர். வேறு பாடுகள் உணர்ந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை அரசியலமைப்பு சட்டத்தில் அம்பேத்கர் பல்வேறு வடிவங்களில் குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கும் குழு செயல்பட தொடங்கியுள்ளது. ஓராண்டிற்குள் கல்விக் கொள்கை வடிவமைக்கப்படும். மத்திய பல்கலைக் கழகங்களைத் தொடர்ந்து மாநில பல்கலைக் கழகங்களுக்கும் நுழைவுத்தேர்வை விரிவுபடுத்த உள்ளது. அதை தடுக்க அரசு தேவை யான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” என்றார். கருத்தரங்கில் பேசிய பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அம்பேத்கர் வடிவமைத்துக் கொடுத்த அரசியலமைப்புச் சட்டத்தில் சிலர் கிறுக்கிக் கொண்டுள்ளனர். தேசிய கல்விக் கொள்ளை அபத்தம் மிகுந்ததாக உள்ளது” என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வட மாநிலத்தவர்கள் தமிழ்நாடு பள்ளி களில் படித்தது போன்ற போலி சான்றிதழ் தயாரித்து பணியில் சேர்ந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டிஇடி) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான அவசியம் இல்லை. தற்போது வரை 1.5 லட்சம் பேர் விண்ண ப்பித்துள்ளனர் என்றார். இந்த நிகழ்வுக்கு பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் தலைவர் பி.இரத்தினசபாபதி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாணவர்-பெற்றோர் நலச்சங்கத்தின் தலைவர் செ.அருமை நாதன் வரவேற்றார். பேரா.அனில் சடகோபால், முனைவர் வே.வசந்திதேவி, பேரா.ஜவகர்நேசன், பேரா.ஆர்.ராமானுஜம், மேடையின் பொதுச் செய லாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட் டோர் பேசினர்.