செங்கல்பட்டு, மார். 13- இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பாம்பு பிடிக்க அனுமதி வழங்காமல் வனத்துறை காலதாமதம் செய்துவருவதாக இருளர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருளர் பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் பூர்வீகமாக வேட்டையாடுவது, பாம்பு பிடிப்பது, மீன் பிடிப்பது போன்ற தொழில் செய்துவந்தனர். பாம்புகளை அதிகம் பிடித்து வந்தனர். பல்லுயிர் பெருக்கம் காரணமாக வன உயிரின சட்டத்தால் பாம்பு பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இருளர் பழங்குடி இன மக்களின் வாழ்வாதாரம் மேம்பட செங்கல்பட்டு மாவ்டம் திருப்போரூர் வட்டத்திற்குட்பட்ட நெம்மேலி பகுதியில் செயல்பட்டுவரும் முதலை பண்ணையில் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது.
அதன் மூலம் சுமார் 350 இருளர் இனத்தவர்கள் அனுமதி சான்று பெற்று ஆண்டுதோறும் பாம்பு பிடித்து கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கி வருகின்றனர். சங்கத்திற்கு கொண்டு வரப்படும பாம்புகள் பராமரிக்கப்பட்டு அதிலிருந்து எடுக்கப்படும் விஷத்தை அரசின் உதவியுடன் ஆராய்ச்சி மையத்திற்கு வழங்கி வருகின்றனர். பாம்புகளை பிடிக்க கூட்டுறவு சங்கம் மூலம் ஆகஸ்ட் முதல் மார்ச் மாதம் வரை அரசின் சார்பில் வனத்துறை மூலம் அனுமதி கடிதம் வழங்கப்படும். கடந்த 4 ஆண்டுகளாகவே வனத்துறை அனுமதி கடிதம் வழங்குவதை காலதாமதம் செய்துவருவதாக கூறப்படுகின்றது. இந்த ஆண்டுக்கான அனுமதி கடிதம் இதுவரையில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை சங்கத்தினர் முன்வைக்கின்றனர். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை பாம்புகளின் இனவிருத்தி காலமென்பதால் அந்த ஆறு மாதத்துக்கு பாம்பு பிடிப்பது இல்லை. இதனால் பல்வேறு கூலி தொழிலை நோக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் அரசு வழங்க வேண்டிய அனுமதி கடிதத்தை இதுவரை வழங்கப்படாமல் இருப்பதாகவும் அம்மக்கள் தெரிவித்தனர். கடந்த 4 ஆண்டுகளாக மார்ச் மாத இறுதி நாட்களில் அனுமதி கடிதம் வழங்குவதால் 5 ஆயிரம் பாம்புகள் பிடிக்கப்பட வேண்டிய இடத்தில் இரண்டாயிரம் பாம்புகள் மட்டுமே பிடிக்க முடிவதாகவும் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். பிடிக்கப்படும் பாம்பு 25 நாட்களுக்கு பராமரிக்கப்பட்டு நான்கு முறை அதிலிருந்து விஷம் எடுக்கப்படுகிறது. மீண்டும் அந்தப் பாம்பு அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையின் மூலமாக விடப்படுகிறது.
குறிப்பாக நல்ல பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை விரியன் ஆகிய விஷம் நிறைந்த பாம்புகளில் மட்டும் பிடித்து விஷம் எடுத்து வருகின்றனர். தற்போது வனத்துறை அனுமதி கடிதம் கிடைக்காததால் 350 குடும்பத்தின் வாழ்வாதாரம் கேள்விக்குறியான நிலையில் உள்ளது அரசு உடனடியாக இருளர் பழங்குடி இன மக்களின் கூட்டுறவு சங்கத்திற்கு பாம்பு பிடிக்க அனுமதி கடிதம் வழங்க வேண்டும், சங்கத்திற்கு நிரந்தர கட்டிடம் வேண்டும் என கோரிக்கையும் முன்வைக்கின்றனர் இதுகுறித்து கூட்டுறவு சங்க உறுப்பினர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது கடந்த 40 ஆண்டுகளாக 350க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள் இந்த கூட்டுறவு சங்கத்தின் மூலம பாம்புகளை படித்து வாழ்க்கை நடத்திவருகின்றோம். கடந்த 4 வருடங்களாக பாம்பு படிக்கும் அனுமதி கடிதம் கால தாமதமாக வழங்குவதால் அதிக அளவிலான பாம்புகளை படிக்க முடிவதில்லை இதனால் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்ற றோம். தனியார் இடத்தில் மாதம் 25 அயிரம் வாடகை கொடுத்து முதலைபன்னையில் சங்கத்தை நடத்திவருகின்றோம். அரசு காலதாமதமின்றி அனுமதி கடிதத்தை வழங்க வேண்டும். மேலும் அரசு எங்களுக்கு சொந்தமாக இடம் வழங்கிட வேண்டும் என்றார். க.பார்த்திபன்