சென்னை, ஜன. 18 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பெருமைகளை பறை சாற்றும் வகையில் குடியரசு அணிவகுப்பில் ஊர்தி கள் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தின் முக்கியமான சுதந்திரப் போராட்ட தலைவர்களான வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார், தேசியக்கவி பாரதியார் ஆகியோரின் படங்கள் இடம்பெறும் வகையில் தமிழக அரசு முடிவு செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்பியிருந்தது. இதுவரை நான்கு சுற்று ஒத்திகைகள் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்கள் இடம்பெற்ற அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதியில்லை என்று ஒன்றிய அரசின் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஒன்றிய பாஜக அரசின் இச்செயல் தமிழக விடுதலைப் போராட்ட வீரர்களையும், ஒட்டுமொத்த தமிழகத்தையும், தமிழக மக்களையும் அவமதிக்கும் செயலாகும். ஒன்றிய பாஜக அரசின் இந்நடவடிக்கையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தமிழ் மாநில குழு வன்மையாக கண்டிக்கிறது. ஆண் வாரிசு இல்லாத நாட்டை ஆங்கிலேய அரசே எடுத்துக்கொள்ளும் என்று கூறியபோது அதற்கு எதிராக போராடிய வீரமங்கையான இவர் கல்வி, விளையாட்டு, சிலம்பம், வாள்வீச்சு, ஈட்டி எறிதல், அம்பு விடுதல், குதிரை ஏற்றம், யானை ஏற்றம் என அனைத்து திறன்களையும் கற்றுத் தேர்ந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பிரெஞ்சு, ஆங்கிலம், உருது மொழிகளையும் கற்றறிந்தார். விஜயதசமி அன்று சிவகங்கை அரண்மனைக்குள் இருக்கும் ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். வேலு நாச்சியாரும் அவரது மகளிர் படையும் ஆயுதங்களை ஆடைக்குள் மறைத்துக் கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக அரண்மனைக்குள் புகுந்து, திடீர் தாக்குதல் நடத்தினர். கோட்டையைக் கைப்பற்றினர் சரித்திரப் புகழ்வாய்ந்த இந்த வெற்றி கிடைத்தபோது இந்த வீரமங்கைக்கு 50 வயது. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றிலேயே ஆங்கிலேயரை வென்று முடிசூடிய ஒரே ராணி இவர்தான்! ஆங்கிலேயேரின் கொடி இறக்கப்பட்டு அனுமன் கொடி ஏற்றப்பட்டது. சிவகங்கை அரசியாகப் பதவியேற்றார். கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் அன்னிய துணிகளை பகிஷ்கரிக்க வேண்டு மென்று போராடியவர் ஒவ்வொரு எழுத்தும் பாடலும் கவிதையும் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கம்பீரமாக ஒலித்தது பாரதியின் குரல். தமிழகத்தின் பாரம்பரிய மிக்க இந்த தியாகத்தின் வரலாறு மறைக்கப்பட வேண்டும் என்பதற் காகவே தமிழகத்தில் அலங்கார ஊர்தியை குடியரசு தினவிழாவில் அனுமதிக்க ஒன்றிய அரசு மறுத்துள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல. தமிழ கத்தின் அலங்கார ஊர்தியையும் அணிவகுப்பில் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.