tamilnadu

மன்னார் வளைகுடா அதிசயம் புத்தகம் வெளியீடு

சென்னை,மார்ச் 17- தமிழக அரசின்  2022-23 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெள்ளியன்று (மார்ச் 18) தாக்கல் செய்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான  திமுக அரசு  பதவியேற்ற பின்னர் முழுமையாக தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கை  இது என்பதால் புது அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திமுக தனது தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் சில அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம் பெறக்கூடும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாகவும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் உள்ளது. வேளாண் நிதிநிலை அறிக்கை  நிதி நிலை அறிக்கையை தொடர்ந்து, சனிக்கிழமை  (மார்ச் 19) வேளாண்மை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.

இதை அத்துறைக்கான அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இதில் விவசாயிகளுக்கு பல்வேறு அறிவிப்புகள் மற்றும் சலுகைகளும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதி நிலை அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே விரிவாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம்  ஆலோசனை நடத்தினார். நிதி மற்றும் வேளாண்மை துறை அமைச்சர்களும் வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் தனித் தனியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினர். பிறகு, அமைச்சரவை கூட்டத்திலும் நிதி நிலை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசித்தார். இந்த முறையும் காகிதம் இல்லாத நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக சட்டமன்ற உறுப்பினர்களின் இருக்கைகள் முன்பாக டேப்லேட் வைக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை நிகழ்வுகளை  அனைவரும் பார்க்கும் வகையில்  பெரிய திரையில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காகிதம் இல்லாத நிதிநிலை அறிக்கை இது என்பதால் சட்டப் பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கு நிதி நிலை அறிக்கையின் நகல் இந்தாண்டும் வழங்கப்படாது.

இடம் மாற்றமும்-சிரமமும் கடந்த சட்டப்பேரவை கூட்டம் கோவிட் 19 தொற்று காரணமாக சமூக இடைவெளிவிட்டு உறுப்பினர்கள் அமரும் வகையில் கலைவானர் அரங்கில் நடைபெற்றது. தற்போது நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் கூட்டம் நடைபெறுகிறது.  சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் இருக்கையிலும் கையடக்க கணினி(டேப் லேட்) பொருத்தப்பட்டுள்ளது.  இதனால் ஏற்பட்ட இட நெருக்கடியை சமாளிக்க பேரவைத் தலைவரின் இடது புறத்தில் கடைசி இரண்டு வரிசைகள்  பத்திரிகையாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 15 பத்திரிகையாளர்கள் மட்டுமே அமர முடியும். கீழ் தளத்தில் செய்தியாளர்களுக்கு பல்லாண்டு காலமாக ஒதுக்கப்பட்டு வந்த இருக்கைகள் அனைத்தும் இடம் மாற்றம் செய்து முற்றிலுமாக மேல் தளத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

காலம் காலமாக அச்சு ஊடகங்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. அவற்றுடன் அகில இந்திய வானொலி, பொதிகை தொலைக்காட்சி, பிடிஐ, ஏஎன்ஐ செய்தி நிறுவனங்களுக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. தற்போது அவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், சில பத்திரிகைகளுக்கு அவையின் மேல் தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவையின் நிகழ்வுகளை நேரில் பார்த்து செய்திகளை தங்களது அலுவலகங்களுக்கு அனுப்பும் பத்திரிகையாளர்கள் பலருக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்று பல பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே பத்திரிகையாளர்கள் சந்திக்கும் இந்த பிரச்சனைக்கு பேரவைத்தலைவர் உரிய தீர்வை காணவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.