சென்னை,ஜன.7- தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ஆம் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜன.7) காலை 9.30 மணிக்கு தொடங்கியதும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ். இளங்கோவன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்தார். அப்போது, 2004 முதல் 2014 வரை இந்திய நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் பொறுப்பு வகித்தார். சிறப்பான திட்டங்களை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தந்தவர். ஒன்றிய நிதி அமைச்சராகவும், மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும் ஒன்றிய நிதிக்குழுத் தலைவராகவும் திறம்பட பணியாற்றியவர் என்றார். ஈவிகேஎஸ், இளங்கோவன் குறித்து கூறுகையில், பாரம்பரிய அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் இளங்கோவன். ஒன்றிய அமைச்சராகவும் நன்கு பணியாற்றியவர். அன்புடன் பழகும் பண்பாளர். திறம்பட பணியாற்றும் வல்லமை படைத்தவர் என்பதால் அனைத்து தரப்பு மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவர் என்றும் தெரிவித்தார். இவர்களின் மறைவால் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட அனைவருக்கும் பேரவையின் சார்பில் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது என்றார். இதையடுத்து, உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, மேல்மலையனூர் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் தமிழ் மொழி ராஜதத்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.