மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பி இருந்த கேள்விக்கு ஒன்றிய சுகாதார அமைச்சர் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்துவது பற்றி நான் நாடாளுமன்றத்தில் விதி எண் 377 ன் கீழ் எழுப்பி இருந்தேன். ஒன்றிய அரசின் சுகாதாரம் & குடும்ப நல அமைச்சக செயலாளருக்கு 20.01.2022 அன்று கடிதமும் எழுதி இருந்தேன்.
தற்போது ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் குமார் அவர்களிடமிருந்தும், ஒன்றிய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல செயலாளர் ராஜேஷ் பூசன் அவர்களிடமிருந்தும் கடிதங்கள் வந்துள்ளன.
அவ்விரண்டு கடிதங்களில் தரப்பட்டுள்ள பதில்கள் இவை.
* டிசம்பர் 2018 இல் ரூ.1264 கோடி மதிப்பீட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்திற்கான ஒப்புதல் தரப்பட்டது.
* ஜெய்கா (ஜப்பான் சர்வதேச நிறுவன முகமை) கடனுக்கான ஆயத்த ஆய்வுப் பணிக் குழுவினர் பிப்ரவரி 2020 இல் மதுரைக்கு வந்தனர்.
* 150 படுக்கை கொண்ட தொற்று நோய்ப் பிரிவு ஒன்றை துவக்குவது என்ற புதிய முடிவின் காரணமாக திட்ட மதிப்பீடு ரூ.1264 கோடியில் இருந்து ரூ.1977.8 கோடியாக உயர்த்தப்பட்டது.
* ஜெய்காவுடன் கடனுக்கான ஒப்பந்தம் 26.03.2021 அன்று கையெழுத்தானது.
* மொத்த நிதித் தேவையான ரூ.1977.8 0 கோடிகளில் ஜெய்கா கடன் ரூ.1627.7 கோடிகளாக இருக்கும். மீதம் பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.
* அக்டோபர் 2026 க்குள்ளாக எய்ம்ஸ் பணிகள் முடிக்கப்படுமென்றும் ஒப்பந்தம் தெரிவிக்கிறது.
* வளாகச் சுற்றுச் சுவர் உள்ளிட்ட முன் முதலீட்டு பணிகளில் 92 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.
* திட்டப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு நிர்வாக இயக்குநர், துணை இயக்குநர் (நிர்வாகம்), கண்காணிப்பு பொறியாளர், நிர்வாக அலுவலர் உள்ளிட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* திட்ட மேலாண்மை ஆலோசகரை முடிவு செய்வதற்கான உலகளாவிய டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது.
* நடப்பு ஆண்டிலேயே தற்காலிக வளாகம், தமிழக அரசின் ஆலோசனை அடிப்படையில், இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டு "எய்ம்ஸ்" எம்.பி.பி.எஸ் படிப்பு துவங்கப்படும்.
* கூடுதல் செலவு மதிப்பீடுக்கான நிர்வாக ஓப்புதல் நடைமுறை முடிவடைகிற தருவாயில் உள்ளது.
எய்ம்ஸ் என்பது மதுரை மற்றும் தென் மாவட்ட மக்களின் நீண்ட நாளைய கனவு. இதன் பணிகள் விரைவு படுத்தப்பட வேண்டும். நிர்வாக ரீதியான முடிவுகள் தாமதமின்றி மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் மதுரை எய்ம்ஸ் பற்றி ஏதாவது ஒருவகையில் ஒன்றிய அரசின் கவனத்தை ஈர்த்து வருகிறோம். பணிகள் மேலும் தாமதமாகாமல் இருக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.