இந்திய நாட்டின் ஜனநாயக கட்டமைப்பில், ஒன்றிய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்களைப் போலவே உள்ளாட்சிகளும் பிரிக்க முடியாத அங்கம் ஆகும். நிர்வாகத்திற்கான ஏற்பாடுகளாக மட்டும் பார்க்காமல், மக்கள் பங்கேற்பினை உறுதி செய்து, அதிகாரத்தைப் பரவலாக்கக் கூடிய ஜனநாயகத்தின் சல்லிவேர்களாகப் பார்க்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 73 மற்றும் 74 வது திருத்தங்கள், ஊரக உள்ளாட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளை சட்டப்படி உறுதி செய்தன. அதன் அடிப்படையில்தான் உள்ளாட்சித் தேர்தல்கள் நடந்து வருகின்றன.
ஜனநாயகத்தின் அங்கம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்தமட்டில், மேற்சொன்ன சட்டத் திருத்தங்கள் வருவதற்கு முன்பே அதிகாரப் பரவலின் அவசியத்தை உணர்ந்து மேற்குவங்கத்திலும், கேரளத்திலும் பல முன்னுதாரண நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் செயல்பாடு குறித்த குழுவிடம், கட்சியின் செறிவான அனுபவங்களை முன்நிறுத்தி வாதிட்ட தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட், “நாட்டின் ‘வளர்ச்சியையும்’, ‘ஒழுங்கமைப்பையும்’ நிர்வகிக்கும் ஏற்பாட்டின் பிரிக்க முடியாத அங்கமே பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள். அவற்றை தனியாக பார்க்க முடியாது” என்று குறிப்பிட்டார். மேற்சொன்ன அரசமைப்புச் சட்ட திருத்தங்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. உள்ளாட்சியின் பிரதிநிதி கள் அதிகாரப் பரவலின் முக்கியமான பகுதிகளாக அமைந்தார்கள். அதிகார வர்க்கத்திற்கும், மக்களுக்கும் இணைப்பை ஏற்படுத்தினார்கள்.
சீரழிக்கப்பட்ட உள்ளாட்சிகள்
ஆனால், கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்தது என்ன? அதிமுக வின் அரசாங்கம் உள்ளாட்சிகளைச் சீரழிப்பதை படிப்படியாக மேற்கொண்டது. மாநிலத்தின் அதிகாரங்கள் படிப்படியாக காவு கொடுக்கப்பட்டதைப் போலவே, ஊராட்சிகளின் அடித்தளமும் சிதைக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடந்திருக்க வேண்டும். ஆனால் சுமார் 3 ஆண்டுகளுக்கு தேர்தல் நடத்தாமல் இழுத்தடிக்கப் பட்டது. நீதிமன்றம் தலையிட்டு குட்டுவைத்த பிறகும் கூட, ஊரக உள்ளாட்சி களுக்கு மட்டும் தேர்தல் நடத்தினார்கள். அதுவும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடத்தப்படவில்லை. தேர்தல்கள் நடத்தப்படவில்லை; எனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. அதிகாரிகளுக்கோ, மக்களுக்கு பதிலளிக்கும் அவசியம் எதுவுமில்லை. ஆளும் கட்சி பிரதிநிதிகளும், அதிகாரிகளும் கைகோர்த்துக்கொண்டார்கள். அன்றாட நிர்வாகம் முடைநாற்றமெடுத்தது. அமைச்சர், தன் விருப்பத்திற்கேற்றபடி ஒப்பந்தங்களை சூறையாடினார். நெருக்கமான உறவினர்கள் மற்றும் பினாமி நிறுவனங்களை ஏற்படுத்தி, பொதுப்பணம் சூறையாடப்பட்டது. இந்த முறையற்ற கூத்தினை வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களாக பொதுமக்கள் மாற்றப்பட்டார்கள்.
அடுக்கடுக்கான ஊழல்கள்
கடந்த சில மாதங்களுக்கு முன், சில நாட்கள் பெய்த மழைக்கே சென்னை தத்தளித்ததைப் பார்த்தோம். அதுவும், பல ஆயிரம் கோடிகள் செலவு செய்து கட்டப்பட்ட ‘ஸ்மார்ட் சிட்டி’தான் தண்ணீரில் தத்தளித்தது. முதலமைச்சர் பல இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின், முறையற்ற வகையில் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று அறிவித்தார். ஆற்று மணலை பயன்படுத்துவதாக சொல்லி கணக்கு எழுதப்பட்ட பல்வேறு திட்டங்களில் எம்-சாண்ட் பயன்படுத்திய ஊழல் முறைகேட்டை அறப்போர் இயக்கம் அம்பலப்படுத்தியது. இதன் மூலம் மட்டும் ரூ.1000 கோடி ஊழல் நடந்திருப்பதை சுட்டிக்காட்டி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனால் அன்றைய அதிமுக அரசாங்கம், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிமன்றத்தின் கண்களை மறைத்திட முயற்சித்தது. உள்ளாட்சிகளில் எல்.இ.டி விளக்கு மாற்றுவது என்ற ஒரு திட்டம் செயல்படுத்தப் பட்டது. மாநிலம் முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளில் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டன. அந்த திட்டத்திலும் கூட ரூ.600 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றது. கொரோனா காலத்தில் பிளீச்சிங் பவுடர், கிருமி நாசினி வாங்குவதில் மட்டும் ரூ.1000 கோடி முறைகேடு என்று பூதம் கிளம்பியது.
தனியார்மய சுரண்டல்
மேலே குறிப்பிட்ட ஊழல் முறைகேடுகள், உள்ளாட்சிகளின் மீது நடத்தப்படும் தாக்குதலின் ஒரு பகுதி மட்டுமே ஆகும். இதே காலகட்டத்தில், பல்வேறு திட்டங்களில் ஒப்பந்த பணி முறை தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அத்துக்கூலிக்கு தொழிலாளர்களைச் சுரண்டுவது பல மடங்கு அதிகரித்தது. குடிநீர் விநியோகத்திலும், துப்புரவு பணியிலும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைக்கப்பட்டார்கள். அவர்கள் ஒப்பந்த அடிப்படையிலும், குறைந்த கூலியிலும் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி பல மடங்கு லாபம் குவித்தார்கள். மக்களின் தேவைகள் புறந்தள்ளப்பட்டு, பணம் குவிப்பதற்கு வசதியாக திட்டங்களை செயல்படுத்தினார்கள். நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடக்க விருக்கும் பின்னணியில் மேலே சொன்ன நிலைமைகளை நினைத்துப்பார்த்து முடி வெடுக்க வேண்டியது அவசியம். நமது வாக்கு, உள்ளாட்சிகளில் ஜனநாயகத்தை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.
நகரமா, நரகமா?
மோடி அரசாங்கம் அமலாக்கும் கொள்கை களின் காரணமாக நமது ஊரக வாழ்க்கை தொடர்ந்து நெருக்கடிக்கு ஆளாகிறது. நகரப்பகுதிகளை நோக்கி மக்கள் அணியணி யாக படையெடுக்கிறார்கள். நகரங்களிலோ வாழ்நிலை படு மோசமாகிறது. குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில் இந்த நிலை மேலும் வேதனை யாகியது. குப்பைகள் மலைபோல் குவிந்தன, சாக்கடை வடிகால் வசதிகள் சீரழிந்தன, வாழ்விடங்கள் நரகமாகின. குண்டும் குழியுமான சாலைகள் வாகன ஓட்டிகளின் அன்றாட வாழ்க்கையை வேதனைக்குள்ளாக்கின. உள்ளாட்சி அமைப்பினை மீட்பதுதான் இந்த தேர்தலின் முக்கியமான மிக முக்கியமான முழக்கம். அதன் முதல் படி, தேர்தல்களை நடத்து வது. அதிமுக அரசாங்கம் உள்நோக்கத்துடன் தட்டிக் கழித்துவந்த கடமையை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றியது. கடந்த 8 மாதங்களில், முதலில் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கும், தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.
- தங்களுடைய பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கவுள்ள வாக்காளர்கள், தேர்தல்கள் தொடர்ந்து நடப்பதை உறுதி செய்யும் விதமாக வாக்களிக்க வேண்டும்.
- அடுக்கடுக்காக வெளிவந்திருக்கும் ஊழல் முறைகேடுகளின் மீது முழுமையான, நேர்மையான விசாரணையை உறுதி செய்யும் விதத்தில் வாக்களிக்க வேண்டும்.
- ஒன்றிய அரசின், ஒற்றை ஆட்சிப் போக்கிற்கு எதிராக, முழுமையான ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிக்கும் விதத்தில் வாக்களித்திட வேண்டும்.
- அத்துக்கூலிக்கு தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் தனியார்மய கொள்ளையை கண்டிக்கும் விதத்தில் வாக்களித்திட வேண்டும்.
- குடிநீர், வடிகால், சாலை வசதிகளை உறுதி செய்யும் விதத்தில் வாக்களித்திடவேண்டும்.
- அதிமுக – பாஜகவின் அராஜக கூட்டணி ஏற்படுத்தியிருக்கும் மோசமான விளைவு களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்.
- தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தின் சாதகமான விளைவுகளை பாதுகாக்கும் விதத்தில் வாக்களித்திட வேண்டும்.
- அப்பழுக்கில்லாத மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களையும், கூட்டணிக் கட்சியினரையும் தேர்வு செய்யும் விதத்தில் வாக்களித்திட வேண்டும்.
மாநிலத்தின் நிதிநிலையை ஒட்டச் சுரண்டி நெருக்கடியில் தள்ளியது அதிமுக அரசாங்கம், ஒன்றிய அரசாங்கமோ தமிழ்நாட்டுக்கு எதிராக ஓரவஞ்சனையுடன் இயங்கி வருகிறது. இப்படிப் பட்ட சூழலை எதிர்கொண்டு, மாநில உரிமை களைப் பாதுகாத்து, ஜனநாயக உரிமைகளை உயர்த்திப் பிடிக்கும் கடமையை திமுக தலைமையிலான அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள் ளது. திமுக அரசாங்கத்தின் மக்கள் நல நடவடிக் கைகளுக்கு ஆதரவாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, உழைக்கும் மக்களின் குரலை சமரசமில்லாமல் முன்னெடுக்கிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் தமிழக மக்களின் வாக்குகள் இந்த நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்ப்பதாக அமைந்திட வேண்டும் என்று தமிழக மக்களை உரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன்.