tamilnadu

img

சித்தாந்தப் போரின் மாபெரும் ஆயுதம்

மதுரை, ஜூன் 29-  நாதஸ்வர இசையுடன், பலூன்களால் அலங்கரிக்கப்பட்ட நுழைவு வாயிலுடன், இது திருமண விழாவோ என நினைக்கும் வகையில் இருந்தது தீக்கதிர் அலுவலகம்.  ஆனால் திருமண விழா அல்ல; அது தீக்க திர் நாளிதழின் 60 ஆவது ஆண்டு வைர விழா.  தீக்கதிர் நாளிதழின் 60 ஆவது ஆண்டு வைர விழா புதன்கிழமை புதுப்பிக்கப்பட்ட தீக்கதிர் அலுவலக வளாகத்தில் பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு மேலப்பொன்னகரம் டி.எம்.ராமச்சந்திரன் குழுவின் நாதஸ்வரம் வாசிப்பு நிகழ்ச்சி துவங்கியது. பின்னர் நடை பெற்ற விழாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப் பினர் ஜி.ராமகிருஷ்ணன், மூத்த தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் க.கனகராஜ், கே. பாலபாரதி, தீக்கதிர் முதன்மை பொது மேலா ளர் என்.பாண்டி, தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் இராமலிங்கம், பொறுப்பாசிரியர் எஸ்.பி. ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், ஐ.வி.நாகராஜன், கே.ஜி. பாஸ்கரன், தீக்கதிர் நாளிதழ் முன்னாள்  முதன்மை பொது மேலாளர் என்.சீனி வாசன், முன்னாள் ஆசிரியர் வே.பரமேசு வரன், முன்னாள் பொது மேலாளர் எஸ்.ஏ. பெருமாள் மற்றும் செம்மலர் ஆசிரியர் ச.தமிழ்ச்செல்வன், மூத்த துணை ஆசிரியர் தி.வரதராசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இவ்விழாவில், கட்சியின் திண்டுக்கல் மாவட்டக் குழுவின் செயலாளர் ஆர்.சச்சி தானந்தம் தலைமையில் ரூ.2,34,250-ஐ தீக்க திர் சந்தா தொகையாக மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கினர்.

தீக்கதிரின் கேரள நிருபரும் முகவரு மான ஜெயக்குமாருக்கு மார்க்ஸ் சிலை  வழங்கி, நூலாடை அணிவித்து கவுரவிக்கப்  பட்டது. பின்னர், பெரியார் பெருந்தொண்டர் பி.வரதராஜன், தோழர்கள் டி.கே.ரங்கராஜன், ஜி.ராமகிருஷ் ணன், கே.பாலகிருஷ்ணனுக்கு அ.சவுந்தரராசனுக்கு பொன்னாடை அணி வித்தார். இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டச் செயலாளர் கே.அர்ச்சுணன், எஸ்.பாலசுப்பிர மணியன் உள்ளிட்டோர், மறைந்த தோழர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் நினைவாக, விருதுநகர் வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ஜே.ஜே.சீனிவாசன் அளித்த ஸ்மார்ட் தொலைக்காட்சியை தீக்கதிர் ஆசிரியர் குழுவிற்கு வழங்கினர். கட்சித் தலைவர் களுக்கு தீக்கதிர் நாளிதழின் முதன்மை பொது மேலாளர் என்.பாண்டி நூலாடை போர்த்தி கவுரவித்தார். பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன் நன்றி  தெரிவித்தார்.

போர்வாளாக விளங்கும் தீக்கதிர்

விழாவில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது: “தீக்கதிர் 60 ஆம் ஆண்டு வைர விழா என்ற வர லாற்று சிறப்புமிக்க விழா. தீக்கதிர் எனும் சிலையை  இங்குள்ள தோழர்கள் அனைவரும் வடித்தெடுக் கின்றனர். தீக்கதிர் வைர விழா எப்படி இருக்க  வேண்டும், என்னவெல்லாம் செய்ய வேண்டுமென  கூறினார் நம்மை விட்டு திடீரென மறைந்த தோழர்  எம்.என்.எஸ்.வெங்கட்டராமன். இந்நேரத்தில் நான் எம்.என்.எஸ்-ஐ குறிப்பிடுவது முக்கியமானது.  இன்று தீக்கதிர் வளாகம் புதிய பொலிவுடன் திகழ்கிறது. கே.முத்தையா வளாகத்தை திறப்பதற்கு  எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு நான் பெருமைப்படு கிறேன். 1971 -இல் நமது தீக்கதிர் நாளிதழ் மதுரை வடக்குச் சித்திரை வீதியில் செயல்பட்டது. நான் அப்போது அண்ணாமலை பல்கலை.யில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற விருந்ததால், தீக்கதிருக்கு பிழைதிருத்துபவர், உதவி ஆசிரியர்கள் தேவைப்பட்டனர். அங்கு நான்  சென்றேன். ஒன்றரை மாதம் பணிபுரிந்தேன். இன்றைக்கு தீக்கதிர் 4 பதிப்பாக... எண்ம பதிப்புடன்  சேர்த்து 5 பதிப்புகளாக வெளி வந்து கொண்டிருக்கிறது. தற்போது தமிழகத்தில் அரசியல் கட்சிகளில் பத்திரிகை நடத்துவது ஒன்று திமுக (முரசொலி), இன்னொன்று அதிமுக (நமது அம்மா). இதில் திமுக ஆளுங்கட்சி; அதிமுக எதிர்க்கட்சி. ஆனால் அரசியல் கட்சிகளில் ஒன்றான நாமும் தீக்கதிர் பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கிறோம். நாம் ஆளுங்கட்சியும் அல்ல; எதிர்க்கட்சியும் அல்ல. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு வலுவான கட்டமைப்பை கொண்டிருக்கிறது. ஒரு குழந்தை பிரசவிப்பது போன்று பல வலிகளை தாங்கிக் கொண்டுதான், ஒவ்வொரு நாளும் தீக்கதிர் நாளிதழ் வெளியாகிறது. பேப்பர், பேப்பர் விலை உயர்வு போன்ற பிரச்சனைகளும் உள்ளன. ஆனால் தீக்கதிர் விலையையும் நாம் அதிகரிக்க முடியாது. திருப்பூரில் 3500 பத்திரிகை விற்பனையாகிறது. திருப்பூரைப் போன்று இன்னும் பல மாவட்டங்களில் விநியோகத்தை அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

தீக்கதிர் திருவனந்தபுரம் செய்தியாளர் ஜெயக்குமார் கேரள அரசிடமிருந்து 2, 3 மடங்கு  அதிக விளம்பரங்களை நமக்கு வாங்கிக் கொடுத்து மகத்தான பணிகளை செய்து வருகிறார். பலமுறை  கேட்டும், கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில்  கால் பக்கம் விளம்பரம்கூட நமக்கு தரவில்லை.  அரசியலில் பல திருப்புமுனைகள் ஏற்படுகிற போது, தீக்கதிர் நாளிதழ் மூலமாகத்தான் மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதற்கான செயல்களை ஆற்றுகிறது. சாதியக் கொடுமைகள், பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராடும் எந்தவொரு  மனிதனுக்கும் குரல் கொடுக்கிற பத்திரிகையாக தீக்கதிர் விளங்கிறது. வெகுஜன மக்கள், தோழர்கள்  இணைந்துதான் இந்தப் பணியை செய்து கொண்டிருக்கிறோம். யார் ஒருவர் போராடினாலும் அவருக்கு, தீக்கதிர் ஒரு போர்வாளாக விளங்குகிறது.

தேவையில்லாத, அவசியமில்லாத செய்தி களை நாம் போடுவதில்லை. தில்லியில் உள்ள என்னுடைய பேராசிரியர் நண்பர் ஒருவர், நான் தின மும் தீக்கதிர் எண்மப் பதிப்பை பார்த்துவிடுவேன். என்னால் தீக்கதிரில் வரும் செய்திகளைப் படிக்காமல் இருக்க முடியாது என்கிறார்.  தீக்கதிர் நாளிதழ் விற்பனை லாப நோக்கமோ, விற்பனை நோக்கமோ அல்ல. இது மக்களிடம் கருத்துக்களை கொண்டு போய்ச் சேர்க்கும் கூர்வாளாகும். இன்றைய காலத்துடன் ஒப்பிடுகையில், தீக்கதிரை நாம் இன்னும் போதுமான அளவுக்கு வலுப்படுத்த வேண்டும். பாஜக அண்ணாமலை வருகிற தேர்தலில், பாஜக 24 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறும் என்கிறார். அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே  ஒற்றைத் தலைமையா? இரட்டைத் தலைமையா? என்ற சண்டை நடந்து கொண்டிருக்கிறது. ஒற்றை தலைமை அல்லது இரட்டைத் தலைமையால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை.

ஒன்றிய பாஜக அரசு, நாட்டின் பன்முகத் தன்மையை, மதச்சார்பின்மையை அழித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இந்தியை திணிக்கிறது. தொழிலாளர் சட்டத்தில் உரிமை களைப் பறிக்கும் பல நாசகர திட்டங்களை கொண்டு  வருகிறது. இந்நிலை தொடர்ந்தால், இந்தியாவில் யாருக்கும் நிரந்தரப் பணி என்பது இருக்காது. விவசாயம் தவிடு பொடியாகிறது. தமிழகத்திற்கான நிதியை ஒன்றிய அரசு கொடுப்பதில்லை. மாநில உரிமைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஜனநாயகத்திற்கு விரோதமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசால், இலங்கை போன்ற மோசமான நிலை இந்தியாவுக்கு வராது என சொல்ல முடியாது. மக்களுக்கு விரோதமாகச் செயல்படும் பாஜக எனும் பிசாசை நாம் எதிர்க்கிறோம். தமிழகத்தில் திமுக ஆட்சி கொண்டு வருகிற பல நல்ல திட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. தற்காலிக ஆசிரியர் நியமன திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என சிபிஎம் கேட்டுக் கொள்கிறது. பாஜகவை முறியடிக்க திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளோடு இணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

வைரம் பாய்ந்த மரமாய்...

அ.சவுந்தரராசன் பேசியதாவது: 55 ஆண்டுகளுக்கு முன்பு தீக்கதிர் மூலமாகத்தான் நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தேன். கட்சிக்கு நான் வருவதற்கு முதல்  காரணம் தீக்கதிர்தான். நடேசன் தெருவில் இயங்கிய  தீக்கதிர் அலுவலகத்தில் எந்தவொரு அடிப்படை வசதிகளும் இல்லை. நான் கல்லூரியில் படிக்கும்  போது, தீக்கதிரின் அப்போதைய ஆசிரியர் கே. முத்தையாவிடம் வந்து பேச்சுப் போட்டிகளுக்கு சில  குறிப்புகள் தரச் சொல்லிக் கேட்பேன். தோழர் கே. முத்தையா, இதை இப்படி பேசு என சொல்லி அனுப்பு வார். நானும் கல்லூரி நடந்த போட்டியில் பேசினேன்.  ஆனால், அதற்காக துறைத்தலைவர், நீ பேசியது சரி தான். இனிமேல் இப்படி பேசாதே என்று கூறினார். திருத்தல்வாதம் மார்க்சிய சித்தாந்தத்துக்கு எதிரானது. நவீன தாராளமய - பாசிசத்தை எதிர்த்து  தீக்கதிர் நாளிதழ் போராடிக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு 59 ஆண்டுகளை நிறைவு செய்து வைரம்  பாய்ந்த மரமாய் தீக்கதிர் உள்ளது. கட்சியின் முழுநேர ஊழியர் ஓய்வெடுக்க வேண்டு மென்று நினைத்தால், அவர் ஓய்வெடுத்துக் கொள்ள லாம்.

ஆனால், தீக்கதிர் ஊழியர்கள் ஓய்வெடுக்க நினைத்தாலும், அவர்களால் ஓய்வெடுக்க முடியாது.  ஒவ்வொரு நாளும் பல சிரமங்களுக்கு இடையே  நாம் செய்தி பிரசுரித்து, பேப்பர் கட்டுகளை அனுப்பி  வைத்துவிட்டு பெருமூச்சு விடுவோம். மறுநாள் காலை  6 மணிக்கே ஒருவர் போன் போட்டு, எப்படி நீங்கள்  இந்த தலைப்பை போடலாம்? என கேட்பார். அதற்  கும் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். முதலாளித்துவப் பத்திரிகைகள் அறிவை விற்கின்றன; ஆனால் தீக்கதிர் நாளிதழில் அறிவு  விதைக்கப்படுகிறது. இந்த வளர்ச்சிக்கு ஊழியர் களின் அர்ப்பணிப்பு தான் முக்கியம். மற்ற பத்திரிகை களில் கிடைக்காதது இங்குதான் (தீக்கதிரில்) கிடைக்கும். தீக்கதிர் வெறும் விற்பனைக்கு அல்ல;  மிகச்சிறந்த சித்தாந்த போராளிகளை உருவாக்கு வதற்கு. இந்த சித்தாந்தத்தை வெகுஜன மக்களுக்கு ஊட்ட வேண்டிய பணி தீக்கதிருக்கு உண்டு. சித்  தாந்தப் போருக்கான ஆயுதம்தான் தீக்கதிர்.  பாஜக நடத்தும் பல நாசகர செயல்களை நாம்  அவ்வளவு எளிதாக எதிர்கொள்ள முடியாது. அதை  தீக்கதிர் நாளிதழ் வழியாகத்தான் எதிர்கொள்ள முடி யும். நிதி நெருக்கடியை காரணம் காட்டி, ஊழி யர்களை நாம் இழந்துவிடக் கூடாது. இங்கு (தீக்கதிரில்) நூலகங்கள், ஊழியர்கள் உட்பட மேலும் பல முன்னேற்ற செயல்பாடுகள் அதி கம் தேவைப்படுகிறது. கட்டிடத்தை பொலிவுள்ள தாக மாற்றுவது என்பது வேறு: ஆனால் பத்திரிகை யை வலுவுள்ளதாக மாற்ற வேண்டும். வைர விழா  பணிக்காக உழைத்த தீக்கதிர் குடும்பத்தை நான்  வாழ்த்துகிறேன்.

தத்துவார்த்த -  செய்திப் பத்திரிகை

டி.கே.ரங்கராஜன் பேசியதாவது: தீக்கதிர் நாளிதழ் ஜனசக்தி இருக்கும் போதே வெளிவந்தது. ஆனால் ரகசியமாக... அப்பு தான் முதலில் இதை தொடங்கினார். பின்னர் அவர்  நக்சலைட்டாக மாறிவிட்டார். தமிழகத்தில் பிரிவினை  முழக்கம் எழுந்தது. அது சரியா? தவறா? என்றால்,  தவறு என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கருத்து. நாம் தத்துவார்த்த போராட்டம் நடத்த வேண்டும். அதே சமயம் செய்தி பத்திரிகையாகவும் இருக்க  வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லை என்பதில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விஞ்ஞான பார்வை  உண்டு. தீக்கதிர் நாளிதழ் தத்துவார்த்த பத்திரிகை யாகவும், செய்திப் பத்திரிகையாகவும் இருக்க வேண்டும். டிஜிட்டல் பொருளாதார சூழலில், பலவகையில் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. உற்பத்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட அனைத்தும் வளர்ந்து கொண்டிருக்கிற இந்தக் காலத்தில், நாம் நம்மை மென்மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். புதிய புதிய யுக்திகளை கண்டுபிடித்து தீக்கதிர்  நாளிதழை வலுப்படுத்த வேண்டும். எங்களைவிட அதிக தியாகம் செய்யக் கூடியவர்கள்தான் தீக்கதிர்  ஊழியர்கள். சோசலிசக் கருத்துகளின் மூலம் பல இளைஞர்களை பணியில் அமர்த்த வேண்டும். மகத்தான தலைவர்கள் பி.ராமமூர்த்தி, எம்.ஆர். வெங்கட்டராமன், ஏ.பாலசுப்பிரமணியம், ஏ.நல்ல சிவன், கே.முத்தையா, என்.வரதராஜன், ஏ.அப்துல் வகாப், ஆர்.ராமராஜ் உள்ளிட்ட தலைவர்கள் அடித்  தளமிட்டு வளர்த்தெடுத்த தீக்கதிரை எட்டுத்திக்கும் பரப்புவோம்.

நமக்கு கிடைத்த இடம் இது

ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: சிபிஐ, சிபிஎம் என பிரிவதற்கு முன்பே  தீக்கதிர் துவங்கிவிட்டது. பி.ராமமூர்த்தி ஏ.எஸ். அய்யங்காரிடம் தீக்கதிர் அலுவலகத்திற்காக இந்த  இடத்தை வாங்கினார். இந்த இடத்தை வாங்குவதற்கு ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் காமராஜர் அவரிடம் பேசியுள்ளார். அப்போது நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால் இந்த இடத்தை  அவர் வாங்கவில்லை. ஜெர்மனியில் உள்ள ஒரு அச்ச கத்தில் இருந்த இயந்திரத்தை பி.ராமமூர்த்தி விலைக்கு பேசி வாங்கிட ஏற்பாடு செய்தார்.  தீக்கதிரின் வரலாற்றை சுருக்கமாக தொகுத்து, ஒரு பிரசுரமாக வெளியிட வேண்டுமென நான் தோழர் வி.பரமேசுவரனைக் கேட்டுக் கொள்கிறேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் பல நிறுவனங்கள்  ஊழியர்களுக்கு விடுமுறை கொடுத்து அனுப்பி விட்டன. ஆனால், கட்சியின் மாநிலக்குழு உதவியுடன்  நமது தீக்கதிர் நாளிதழின் நான்கு பதிப்பு ஊழி யர்களும் தொடர்ந்து பணியாற்றினர். ஒன்றிய அரசின் பொய் வழக்கை ஏற்று, டீஸ்டா  செதல்வாத், ஸ்ரீகுமார் மீது உச்சநீதிமன்றம் வழக்குத்  தொடுத்துள்ளது. நீதி கேட்டு வழக்கு தொடுப்ப வர்கள் மீதே வழக்கு போடுவது என்பது விடுதலைக்கு  பிந்தைய 75 ஆண்டில் எந்த நீதிமன்றத்திலும் இல்லை. அப்படியானால் இந்த வழக்கை ஏற்றுக் கொண்டு விசாரணைக்கு அழைத்த நீதிபதி மீது வழக்கு போடுவார்களா? ஒன்றிய அரசின் இந்த அராஜக செயலை கண்டித்து எந்தப் பத்திரிகையும் கட்டுரை, தலை யங்கம் எழுதவில்லை. ஆனால் தீக்கதிர் நாளிதழ் மட்டும்தான் எழுதியது. இந்த வைர விழா ஓராண்டுக்கு நடைபெற உள்ளது. இச்சமயத்தில் தீக்கதிர் விற்பனையை அதிகப்படுத்த நாம் அனைவரும் உழைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

நாளிதழை புதுமையாக்குவோம்

கே.கனகராஜ் வாழ்த்துரையாற்றுகையில், “நான் மதுரையில்தான்  படித்தேன். தூத்துக்குடியில் ஸ்பிக் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த போது,  அங்கு பசுங்கிளி என்பவர், தீக்கதிர்  பேப்பரை மறைத்து வைத்து தொழிற்சாலைக்கு  எடுத்து வருவார். அப்போது தான் நான்  படித்தேன். ஒரு நாளிதழை எடுப்பதற்கும்  வாசிப்பதற்கும் ஒரு ஈர்ப்பு தேவைப்படுகிறது. தீக்கதிர் தன்னை ஒரு நடுநிலைப்  பத்திரிகை என கூறவில்லை. ஆனால் உழைக்கும் மக்களின் பத்திரிகை எனத்  தெரிவித்திருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில், தற்போது ஒரு செய்தியை பார்க்க,  படிக்க, கேட்கவும் முடியும். பத்திரிகை தொழில்நுட்பத்தையும் தகவல் தொடர்பை யும் நாம் மேம்படுத்துவது இன்றைய காலத்திற்கு மிக அவசியம். நாம் தற்போது கட்டி டத்தையும் பொருட்களையும் புதுப்பித்துள்ளோம். தீக்கதிர் நாளிதழை புதுமையுடன் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

உண்மைக்கு வண்ணம் தேவையில்லை

கே.பாலபாரதி வாழ்த்துரையில், “நான் கிராமத்தில் சத்துணவில் பணியாற்றிய போது, தீக்கதிர் நாளிதழ் ஒவ்வொரு நாளும் எனக்கு அரசியலை கற்றுக் கொடுத்தது. இளம் வயதில் பதிந்த அந்த உணர்வுதான், இன்றைக்கு என்னை இந்த விழாவில் பங்கேற்க வைத்தது. உழைக்கும் பெண்கள், ஊழியர்கள், தோழர்கள் அனை வருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதலாளித்துவப் பத்திரிகையில், ஒரு செய்தியை வெட்டி, வேறு ஒன்றை ஒட்டி,  பொய்யை கலர் கலராக சித்தரித்து வெளியிடுவார்கள். உண்மைக்கும் எளிமைக்கும் வண்ணம் தேவையில்லை. தமிழகத்தில் முதலமைச்சர் உட்பட பலரும் முதலில் படிப்பது தீக்கதிர் நாளிதழைத்தான். மக்களுக்காக நடத்தும் தீக்கதிரை நாம் மேலும் வளர்க்க வேண்டும். தீக்கதிர் ஊழி யர்களுக்கு எனது புரட்சிகர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து வெகு ஜன மக்களிடமும் தீக்கதிரை கொண்டு செல்ல உறுதியேற்போம்” என்றார்.

பத்திரிகை நடத்துவதுதான் கஷ்டம்

என்.சீனிவாசன் வாழ்த்திப் பேசுகையில், ஒருமுறை கலைஞரிடம் ஒருவர், அரசியல் கட்சி நடத்துவது கஷ்டமா? பத்திரிகை நடத்துவது கஷ்டமா?  எனக் கேட்டதற்கு, கலைஞரின் பதில்: “பத்திரிகை நடத்துவதுதான் கஷ்டம்” என்றார். நாம்  தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். விற்பனையை அதிகப்படுத்தி தீக்கதிரைப் பலப்படுத்த வேண்டும். அதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

அதிக ‘மரங்களை’ வளர்ப்போம்

எஸ்.ஏ.பெருமாள் வாழத்துரையாற்றுகையில், “நான் 1994 இல் தீக்கதி ருக்கு வந்தபோது, இங்கு 4 பெரியவர்கள் மட்டும்தான் இருந்தார்கள். அவர்களில் கிரியும் ஒருவர். இவர்கள் நான்கு பேரும் என்னை அழைத்தார்கள். அதில்,  தோழர் ராமராஜ் என்னிடம் “நாங்கள் தென்னை மரத்தை நட்டு வைத்திருக்கிறோம். நீ  தேங்காய் பறிக்க வந்தீயா?” என்று கேட்டார். இப்போது சென்னை, கோவை, திருச்சி பதிப்புகள் நிலைநிறுத்தப்பட்டுவிட்டன. தீக்கதிர் வளர்ச்சி என்பது ஊழியர்கள் கையில்தான் உள்ளது. அதனால் இன்னும் அதிக  மரங்களை வளர்ப்போம் என சபதமேற்போம்” என்றார்.

வளர்ச்சிக்கு வித்திடும் விழா

வி.பரமேசுவரன் வாழ்த்துரையாற்றுகையில், “நமது ஆசிரியர் தீக்கதிர்  வைர விழா பற்றி கட்டுரை எழுதியிருக்கிறார். தீக்கதிர் துவக்க காலத்தில்  இவ்வளவு வசதிகள் கிடையாது. அலுவலகத்திற்கும், மாநிலக் குழுவிற்கும் ஒரே ஒரு போன்தான் இருக்கும். தோழர் கிரி பொது மேலாளராக இருந்தபோது, நிதி நெருக்கடி ஏற்பட்டது. அச்சமயம் அவர், ‘நாம் தீக்கதிரை வாரப் பத்திரிகையாக பிரசுரிப்போம்’ என்றார்.  அதற்கு “தீக்கதிர் ஊழியர்கள், நாங்கள் எங்களது சம்பளத்தை குறைத்துக் கொள்கிறோம்”  என்றனர். அப்போது தோழர் ஏ.பாலசுப்ரமணியம் ஊழியர்களை மிகவும் பாராட்டினார். பின்னர் கட்சி நிதி வசூலித்து சமாளித்தது. அண்மையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில், விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன், ‘பீனிக்ஸ் பறவை போல் மக்கள் மீண்டும் எழுந்து வருவார்கள்’ என ஒரு கட்டுரை எழுதினார். அதுபோல் இந்த வைர விழா தீக்கதிர்  வளர்ச்சிக்கு மேலும் வித்திடும்” என்றார்.

தீக்கதிரில் முதல் கார்ட்டூன்

தி.வரதராசன் வாழ்த்துரையாற்றுகையில், “1969 ஆம் ஆண்டு வைகை டேம்-இல்  அரசியல் தத்துவார்த்த ஸ்தாபன வகுப்பு நடந்தது. அப்போது ஆண்டிபட்டியில்  தோழர் கே.முத்தையாவிடம், தீக்கதிருக்கு நான் கார்ட்டூன் வரைந்து தரட்டுமா? எனக்  கேட்டேன். அவர் சரிஎன்றார். அப்போது என்னிடம் பிரஷ், மை இல்லை. தோழர் அப்துல்  வஹாப் ரூ.25 கொடுத்தார். அதில் பிரஷ், மை வாங்கி கார்ட்டூன் வரைந்தேன். இந்தியாவில் இடதுசாரி பத்திரிகையில் முதன்முறையாக கார்ட்டூன் வந்தது தீக்கதிர் பத்திரிகையில்தான். தோழர் ஏ.பாலசுப்ரமணியம் என்னிடம், ‘நாயனார் தேசாபிமானிக்கு கார்ட்டூன் வரைந்து  தரக் கேட்டார்’ என்றார். நான் வரைந்து, கருத்தை பென்சிலில் தமிழில் எழுதி அனுப்பு வேன். அவர்கள் மலையாளத்தில் மாற்றிக் கொள்வார்கள் என்றார்.

ச.தமிழ்ச்செல்வன் வாழ்த்துரையாற்றுகையில், “தீக்கதிரும் செம்மல ரும்தான் என்னை வளர்த்தது. இளம் தலைமுறையிடம் தீக்கதிரை கொண்டு  செல்ல வேண்டும். அந்தப் பணி நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதை  இன்னும் சிறப்பாக செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

தொகுப்பு: ஆர்.நித்யா