tamilnadu

img

கிருஷ்ணாவும் குட்டி நாய்களும்

அமுதா செல்வி

கிருஷ்ணாவுக்கு நாய்களை அவ்வளவு பிடிக்கும். “கிருஷ்ணா எப்பத்தான் வருவான்?” தெரு நாய்கள் ஒவ்வொன்றும் காத்திருக்கும். கிருஷ்ணா எல்லா நாயிடமும் பேசுவான். “சாப்பிட்டாயா?” என்று விசாரிப்பான். அதுவும் “வவ்... வவ்” என்று பதில் சொல்லும். சிரித்துக்கொண்டே நகர்வான். அம்மாவுக்கு கோபம் வரும். “நாய் பின்னாடி திரியாதே. கடி வாங்கப் போற” அம்மா சத்தம் போடுவார். கிருஷ்ணா கொஞ்சிப் பேசி சமாளிப்பான். கிருஷ்ணாவுக்கு என்ன பிடிக்கும் என்று அம்மாவுக்கு நல்லாத் தெரியும். பார்த்துப் பார்த்து வாங்கித் தருவார். கிருஷ்ணாவுக்கு நொறுக்குத் தீனி பிடிக்கும். அதை சும்மா “சர்ர்... புர்ர்ன்னு” காலி பண்ணுவான். முருக்கை “கரக் மொறுக்”ன்னு நொறுக்குவான். நாய்களுக்கும் தருவான். நாய் சாப்பிடுமா? சாப்பிடாதா? அதுக்குப் பிடிக்குமா? பிடிக்காதா? யோசிக்கவே மாட்டான். ஒரு நாள் கிருஷ்ணா சேவு பாக்கெட்டுடன் தெருவில் நடந்தான். “கரக் மொறுக்” ன்னு கடித்துக் கொண்டே சென்றான். எதிரில் ஒரு குட்டி நாய் வந்தது. துள்ளிக் குதித்து வட்டமடித்தது. கிருஷ்ணாவுக்கு சிரிப்பு சிரிப்பா வந்தது. சேவை எடுத்தான். குட்டி நாய் முன்னால் வைத்தான். அது உருண்டு புரண்டது.

கிருஷ்ணாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. குட்டி நாய் சேவை உத்துப் பார்த்தது. சாப்பிடு என்றான். மோந்து பார்த்தது. நிமிர்ந்து பார்த்தது. திரும்பவும் மோந்து பார்த்தது. ‘’ம்ம்ம்... சாப்பிடு.” அது “வவ் வவ்” என்றது. அவன் “ஹா... ஹா...” என்று சிரிச்சான்.  குட்டி நாய்க்கு மகிழ்ச்சி. குட்டிக்கரணம் போட்டது. அவனும் குட்டிக்கரணம் போட்டான். கிருஷ்ணா ஒரு சேவை எடுத்தான். வாயில் வைத்தான். “கரக்... மொறுக்...” குட்டி நாயும் அதேபோல செய்தது. சேவை அள்ளி வைத்தான். அது வாலை ஆட்டியது. சேர்த்து இடுப்பையும் ஆட்டியது. அவனும் அப்படியே ஆட்டினான். “கரக் மொறுக்” சேவு சாப்பிட்டான். “கிருக் கிருக்” குட்டி நாயும் சாப்பிட்டது. சேவு பாக்கெட் காலி. நாய்கள் மீது கிருஷ்ணாவுக்கு எவ்வளவு அன்பு என்று எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். குளிரில் நடுங்கும் தெரு நாய்களைப் பார்க்கவே பாவமாக இருக்கும். தெரு நாய்களை வீட்டு நாய்களாக மாற்றுவது எப்படி? என யோசித்தான். சாலிஹா அக்கா உதவிக்கு வந்தார். சாலிஹா அக்கா ஒரு கால்நடை மருத்துவர். “முதலில் நாய்களுக்கு தடுப்பூசி போட வேண்டும்” என்றார். நாய்களை பல கோணத்தில் போட்டோ எடுத்தார். தனது நண்பர்களுக்கு அனுப்பினார். அதில் “இந்தப் பப்பி வெயிட்டிங் பார் அடாப்சன்” என்ற செய்தியும் இருக்கும். நாய்களுக்கு தடுப்பூசி போட்டார்கள். சில நாட்களிலேயே அந்த தெருவின் நாய்களுக்கெல்லாம் நல்ல வீடு கிடைத்தது. தெரு நாய்கள் வீட்டு நாய்களாக மாறிவிட்டன.