சுறுசுறுப்பு ஏற்றம் தூக்கிக் கொடுக்கும்
சோம்பல் உயர்வைத் தொடர்ந்து தடுக்கும்
அருவருப்பு உள்ளம் அமைதி கெடுக்கும்
அடங்கா ஆசை அனைத்தும் கெடுக்கும்
மெய்மை மனத்துள் விளக்கே இருக்கும்
மேவும் பண்பில் அமுதம் சுரக்கும்
பொய்மை நெஞ்சம் தீயை வளர்க்கும்
புன்மைச் செயலில் முள்ளே துளிர்க்கும்.
கல்வி அறிவைக் கொடுக்கும் வள்ளல்
கடமை மனத்தின் எழுச்சித் துள்ளல்
கல்லா மனமோ உலகத்து எள்ளல்
களவின் குழந்தை தீரா அல்லல்.
இன்சொல் நாவின் கனிகள் தோட்டம்
இழிசொல் எட்டிக் காய்கள் கூட்டம்
மென்சொல் பணிவுத் தாயின் தேட்டம்
மிடுக்குச் சொல்லோ துணிவின் நீட்டம்.
பொறுமை, தேனைச் சுரக்கும் பூவே
புகழை ஊட்டும் வள்ளுவர் பாவே
பெருமை குலைக்கும் நெஞ்சம் தீயே
பிழையே வாழ்க்கை என்பார் நோயே!
அறிந்தால் இவற்றை வாழ்க்கை இனிக்கும்
அறியா வாழ்க்கை கசக்கும் புளிக்கும்
அறிவாய் தம்பி உலகம் மதிக்கும்
அன்புத் தங்காய் இதுவே உனக்கும்!