tamilnadu

img

மதவாதத்தை வீழ்த்தி கிராமங்கள் தோறும் செங்கொடி பறக்கச் செய்வோம் - கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு மதுரையில் மார்ச் 30ம்தேதி 31 ஏப்ரல் 1-ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. மாநாட்டின் ஒரு பகுதியாக புதனன்று மதுரையில் செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:-
23-ஆவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கும் வரவேற்புக்குழுத் தலைவர் சு.வெங்கடேசன், செயலாளர் மா.கணேசன், பொருளாளர் ராஜேந்திரன், வரவேற்புக்குழுத் துணைத் தலைவர் சி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட வரவேற்புக்குழுவினருக்கு புரட்சிகரமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்றைக்கு சிறு சிறு பிரச்சனைகளைக் கூட பாஜக அரசியலாக்கி மதச்சாயம், காவிச்சாயம் பூசி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் 162 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த கிறிஸ்தவ பள்ளியில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதை மதச்சாயம் பூசி அரசியலாக்கியது. சிபிஐ விசாரிக்க வேண்டும். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என நிர்ப்பந்தம் செய்கிறது. இதே போல் மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற தற்கொலை சம்பவத்தை  மதச்சாயம் பூசி அரசியலாக்குகிறது. இந்தச் சம்பவங்களுக்கு காரணமாக "மதமாற்றம்" என்ற இல்லாத பூதத்தை காட்டுகிறது.
கோவில் திருவிழாக்கள் நடந்தால் அங்கு காவிக்கொடியை கட்டி பாஜக அரசியல் நடத்துகிறது. மதவெறி அரசியலுக்கு வித்திடும் பாஜக-ஆர்எஸ்எஸ் முயற்சியை முறியடிக்க கோவில் திருவிழாக்களின் போது மதச்சார்பின்மையை வலியுறுத்துவதோடு, கலை-பண்பாட்டுத்தளத்தில் நின்று திருவிழாக்களில் பங்கேற்பது குறித்து பரிசீலிக்கிறோம்.
சிலர் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு குறித்து கேள்வியெழுப்புகிறார்கள். இவர்கள் ஏன் கோவிலுக்குச் செல்கிறார்கள் என்று? நாங்கள் கோவிலுக்குள் சென்று எந்த பூஜைகளையும் செய்யப்போவதில்லை. கோவிலுக்கு வெளியே மதச்சார்பின்மையையும், மக்கள் ஒற்றுமையையும் வலியுறுத்தும் பணியை மட்டுமே செய்வோம்.
உதாரணத்திற்கு சிதம்பரத்தில் உள்ள தில்லை நடராஜர் கோவில் விழாவில் பட்டம் கட்டுவது முஸ்லிம்கள் தான்.  கோவில் திருவிழாக்களை இந்துக்களும்-முஸ்லிம்களும் இணைந்தே கொண்டாடுகின்றனர். இவர்களைப் பிரிக்கும் வேலையைத் தான் காவிக்கொடி மூலம் பாஜக செய்ய முயற்சிக்கிறது. இதைத் தடுத்து ஒற்றுமை காப்பது தான் எங்கள் பணி.
கர்நாடகத்தில் ஹிஜாப் அணிந்து வந்தால் பத்தாம் வகுப்பு மாணவிகள் பொதுத்தேர்வு என அனுமதிக்க மாட்டார்கள் எனக் கூறியதால் 21 ஆயிரம் மாணவிகள் தேர்வு எழுத முடியவில்லை. பாஜகவின் மதவெறி அரசியலுக்கு நீதிமன்றமும் துணை போகிறது. முஸ்லிம்களை கல்வி கற்க விடாமல் தடுக்கிறது.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்திற்கு எதிராக 24 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். பட்டியலின மக்களும், பழங்குடி மக்களும் அர்ச்சகராவதை இவர்கள் விரும்பவில்லை. கர்நாடகத்தில் ஹிஜாப்பு தடைக்கு நீதிமன்றம் வக்கலாத்து வாங்கியது போல், அர்ச்சகராகும் பணிக்கு நீதிமன்றம் தடை விதித்து வக்காலத்து வாங்கினால் நீதிமன்றத்தையே குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
விவசாயம், சிறு-குறுதொழில் நிறுவனங்கள் பாஜக ஆட்சியில் முடக்கப்பட்டுவிட்டது. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். இதற்குக் காரணம் சிறு-குறு தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான மூலப் பொருட்கள் அதானி-அம்பானி போன்ற கார்ப்பரேட்களின் கையில் உள்ளது.
இன்றைக்கு அரசுப்பணிக்கு ஆள் சேர்ப்பது என்பது இல்லாமல் போய்விட்டது. மதிப்பூதியம், தொகுப்பூதியம், ஒப்பந்தத் தொழிலாளர்களாக அனைவரும் மாற்றப்பட்டுவிட்டனர். ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் பெறும் ஒப்பந்த, மதிப்பூதிய,  தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு இந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் ஒரு அமைச்சர் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி குறித்து அவர் பேசியதைத் தொடர்ந்து இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் நடவடிக்கை பாராட்டுக்குரியது. அதே  நேரத்தில் அந்த அமைச்சர் செய்தது வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி குற்றம்.
அதிமுக அரசு அப்புறப்படுத்தப்பட்டு திமுக  ஆட்சிப்பொறுப்பிற்கு வந்துள்ளது. ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் தவறிழைக்க மாட்டார்கள். இதற்கு திமுக அரசு முன் உதாரணமாக விளங்க வேண்டும்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் பிரிவான பாஜக-வின் மதவாத அரசியலை முறியடிக்கும். அவர்கள் சிங்கமாக இருந்தாலும்  அவர்களது குகைகளிலேயே வந்து சந்திக்கும் துணிவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளது.
வரும் காலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னெப்போதையும் விட வீரியமாக செயல்படும். கிராமங்கள் தோறும் செங்கொடி பட்டொளி வீசி பறக்கும். இடதுசாரி ஒற்றுமையை பலப்படுத்துவோம். மதவெறி அரசியலை முறியடிக்க திமுக-வுடன் இணைந்து போராடுவோம். அதே நேரத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என்றார்.