சென்னை,ஏப்.26- முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அன்றைய தினம் சென்னை ஓமந்தூரார் அரசி னர் தோட்ட வளாகத்தில் அவரது சிலை திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். சட்டசபையில் செவ்வாயன்று(ஏப்.26) கேள்வி நேரம் முடிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-ஆவது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது, “தமிழ்நாட்டில் 1957 முதல் 2016 வரை நின்ற தேர்தலில் எல்லாம் வென்ற தலைவர் கலைஞர். 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். 1984 ஆம் ஆண்டு சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்த கருணாநிதி, ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, 19 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர்” என்றார்.
கருணாநிதி ஆட்சிக்காலத்தில்தான் தமிழ் மொழிக்கு செம்மொழித் தகுதி, ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடு உயர்வு, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம், மகளிருக்கும் சொத்திலே பங்குண்டு என்ற சட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கான சமூகநீதி உரிமைகள், இலவச மின்சாரம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியங்களை உருவாக்கினார். நமக்கு நாமே, அண்ணா மறுமலர்ச்சித் திட்டங்கள் என்று பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டதை முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டார். தலைவர்களோடு தலைவர்களாக வாழ்ந்த தலைவர்தான் கலைஞர், தமிழ கத்தில் மட்டுமல்ல; பரந்து விரிந்த இந்த இந்திய அரசியலுக்கே வழிகாட்டியாக இருந்தவர். இதனால்தான், நாடாளுமன்ற வர லாற்றிலேயே முதன்முறையாக நாடாளு மன்ற உறுப்பினராக இல்லாத தலைவர் கலைஞரின் மறைவிற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முழுவதுமாக ஒத்தி வைக்கப்பட்டன. எல்லைகளைத் தாண்டி எல்லோரையும் வசப்படுத்தியவர் தலைவர் கலைஞர் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவாரூரில் முத்துவேலர்-அஞ்சுகம் அம்மையாருக்கு மகனாகப் பிறந்த கலைஞரின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் நாள், அரசு விழாவாக இனி கொண்டாடப் படும். அன்றைய தினம், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கலைஞரின் கலைமிகு சிலை நிறுவப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பை வரவேற்றுப் பேசிய ஆளும் கட்சி, தோழமைக் கட்சி தலைவர்கள்,“பெரியார், அம்பேத்கர், காரல்மார்க்ஸ் ஆகியோரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய சமத்துவத் தலைவர், பன்முகங்களை கொண்டவர், அரசியலில் மட்டுமின்றி பண்பாட்டுத் தளத்திலும் ஆளுமை செலுத்தியவர் என்றும் அவருக்கு மிகப்பெரிய அருங்காட்சியம் அமைக்க வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தனர்.