tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஜுலை 9 - விளாப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம்

புதுக்கோட்டை, ஜுன் 20-  புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டம், விளாப்பட்டி வருவாய் கிராமத்தில்  ஜுலை 9 (புதன்கிழமை) அன்று காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமையில் “மக்கள் தொடர்பு முகாம்” நடைபெறவுள்ளது. இம்முகாமை முன்னிட்டு ஜுன் 27 முதல், பொதுமக்களிடமிருந்து முன்மனுக்கள்  மருதம்பட்டி கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், அலுவலகக் கட்டிடத்தில் பெறவுள்ளதால் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.'

சிறுமிக்கு  பாலியல் வன்கொடுமை:  ஜேசிபி ஆபரேட்டர் கைது

தஞ்சாவூர், ஜுன் 20-  புதுக்கோட்டை மாவட்டம், அரியாணிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (19). ஜேசிபி ஆபரேட்டரான இவர், பணி காரணமாக, தஞ்சாவூர் அருகே ஒரு கிராமப்பகுதிக்கு வந்தபோது, 16 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி  விக்னேஷ் நெருங்கிப் பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், மனஉளைச்சலுக்கு உள்ளான அந்த சிறுமி, தனக்கு நடந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தார். சிறுமியின் பெற்றோர் தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தனர்.  இதன்பேரில், காவல்துறையினர் விக்னேஷைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், விக்னேஷ் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உண்மை என்று தெரிய வந்தது. இதையடுத்து தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பேராவூரணி அரசுப் பள்ளி  மாணவிகளுக்கு உதவி

தஞ்சாவூர், ஜுன் 20-  பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1997 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை என்ற பெயரில் இணைந்து சமூக சேவைகளை செய்து வருகின்றனர்.  இந்நிலையில், அறக்கட்டளையின் சார்பில், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் பெற்றோரை இழந்த 20 மாணவிகளுக்கு, ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான புத்தாடைகள் நோட்டு புத்தகங்கள் பேனா ஆகியவற்றை அறக்கட்டளை தலைவர் நீலகண்டன், செயலாளர் மகாராஜா, பொருளாளர் செந்தில்குமார் மற்றும் உறுப்பினர்கள் வழங்கினர். உதவி வழங்கிய அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) எம்.காளீஸ்வரி, உதவி தலைமை ஆசிரியர்கள் பி.லெட்சுமி, டி.புவனேஸ்வரி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.