tamilnadu

பணமாக்கல் திட்டத்தில் எவ்வளவு பணம் வரும் என்பது தெரியாது

புதுதில்லி,டிச.22- பணமாக்கல் திட்டத்தின் கீழ்  நான்கு ஆண்டுகளில் 400 ரயில் நிலையங்கள் தனியார்கள் கைகளில் ஒப்படைக்கப்படும் என்றும் ஆனால் எவ்வளவு பணமாகும் என்பது தெரியாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ரயில்வே அமைச்சர் அதிர்ச்சியான பதிலை அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு (எண் 1707) பதில் அளித்துள்ள ஒன்றிய அரசின் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், 4 ஆண்டுகளில் 400 ரயில்வே நிலையங்கள் “தேசிய பணமாக்கல்” திட்டத்தின் கீழ் தனியார் வசம் “மறு மேம்பாடுக்காக” ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 இதனால் அரசுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கக் கூடும் என்ற கேள்விக்கு “மறு மேம்பாடு  வாயிலாக எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை இப்போது மதிப்பிட இயலாது” என்று பதில் அளித்துள்ளார்.  திட்டத்திற்கு பெயர் “பணமாக்கல்”.  ஆனால் எவ்வளவு பணம் “ஆகும்” என்று தெரியாது என்ற அமைச்சர் பதில் வியப்பாக இருக்கிறது. ஆனால் இத்திட்டத்தால் லாபம் அடையப்போகும் தனியார்கள் நன்கு அறிவார்கள். அவர்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்று.