மதுரை, ஏப். 1 - மூன்று நாட்கள் நடைபெற்ற மாநில மாநாட்டின் நிறைவாக வெள்ளிக்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலை உயர்வு, டோல் கேட் கட்டண உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து ஏப்ரல் 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கோயில் நிலங்களில் 15 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும், பயன்பாடற்ற நீர்நிலைப் புறம்போக்குகளில் வசிப்பவர்களுக்கு அந்த இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும். இது சாத்தியம் இல்லை எனில் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு உரிய மாற்று இடத்தை அரசு வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி மே 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனுக் கொடுக்கும் போராட்டம் நடத்தப்படும். இம்மாநாட்டில் தமிழக மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் உள்பட 60 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே எங்களது நோக்கம். மதச்சார்பற்ற அணிக்கு வேறு யார் வந்தாலும் இணையலாம். அதே நேரத்தில் தமிழகத்தில் இடதுசாரி அணியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஈடுபடும். இடதுசாரி ஜனநாயக அணியை பலப்படுத்துவது என்பது எங்கள் பணி. அதேசமயம் பாஜக அணியை வீழ்த்துவதில், திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளுடன் இணைந்து போராடுவோம். கோவிலில் விழாக்களை நடத்துவது எங்களது வேலையல்ல.
ஆர்.எஸ்.எஸ். கொடியுடன் சென்று கோவில்களை தன்வயப்படுத்துவோரிடம் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். கோயில் திருவிழா காலங்களில் கோவிலுக்கு வெளியே கலை நிகழ்வுகள் மூலம் மதச்சார்பின்மையையும், மக்கள் ஒற்றுமையையும் வலியுறுத்துவதே எங்கள் நோக்கம். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். இந்த பேட்டியின்போது மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.