tamilnadu

பள்ளி வகுப்பறைகள் சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்

சென்னை,ஜன.29- பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறப்பதும், மூடப்படுவதாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. முதலில் ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரையிலும் பின்னர் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.  இதற்கிடையே கொரோனா பரவல் சற்று குறைந்ததையடுத்து பிப்ரவரி மாதம் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அந்த வகையில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 100 விழுக்காடு மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தமிழகம் முழுவதும் கல்வித்துறை அதிகாரிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகங்களை சுத்தப்படுத்தும் பணிகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக வகுப்பறைகள் மூடியே கிடந்ததால் தூசி படிந்து காணப்பட்டது. அதனை சுத்தம் செய்ததுடன் மாணவர்கள் அமருவதற்கான இருக்கைகளை கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தி வருகிறார்கள். இதற்கு முன்பு கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டபோது சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதனால் வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுமே மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வந்தனர். ஆனால், தற்போது முழு அளவில் 100 விழுக்காடு மாணவர்களுடன் பள்ளிகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தனியார் பள்ளிகளில் மாணவர்களை அழைத்து வருவதற்கு கூடுதல் வாகன வசதிகளை மேற்கொள்ளும் பணிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

வாரத்தில் 3 நாட்கள் மட்டும் பள்ளிகள் செயல்பட்ட நேரத்தில் குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டுமே தனியார் பள்ளிகள் வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வந்ததால் குறைவான வாகனங்களே செயல்பட்டு வந்தன. ஆனால் தற்போது அனைத்து வழித்தடங்களிலும் தேவையான வாகன வசதிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அதற்கு தேவையான வாகன வசதிகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர். அரசு பள்ளிகளை பொறுத்தவரை அங்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் மாநகர பஸ்களில் பயணம் செய்தே பள்ளிக்கு செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என அரசு பள்ளி ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் மூலம் மாணவர்கள் பஸ்களில் தொங்கிக் கொண்டு பயணிப்பது தவிர்க்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். முழு அளவில் பள்ளிகள் திறக்கப்படுவதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் அனைத்து மாணவர்களும் மீண்டும் பள்ளிகளுக்கு செல்வதற்கு மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். பள்ளிகளுக்கு மீண்டும் செல்வதற்காக மாணவர்கள் தங்களுக்கு தேவையான பென்சில், பேனா, நோட்டு புத்தகம் உள்ளிட்ட பொருட்களையும் வாங்கி வருகிறார்கள். இதனால் ஸ்டேசனரி கடைகளில் விற்பனை சூடு பிடித்துள்ளது. இதே போல பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்து செல்லும் புத்தகை பை கடைகளிலும் விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது. பள்ளிகளில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்கள். இதையடுத்து பள்ளிக்கூடங்களில் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு முழு அளவில் பள்ளிகள் திறக்கப்படுவதால் வருகிற 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் பள்ளிக்கூடங்கள் மீண்டும் களை கட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.