tamilnadu

img

தொழிலாளர் விரோத சட்டங்கள்- பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதை ஒன்றிய அரசு கைவிடுக!

 திருநெல்வேலி, அக் 15- திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ராஜேந்திரநகர் முதல் தெருவில் கட்டப்பட்டுள்ள சரோஜ் நினைவகம் திறப்பு விழா மற்றும் காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் (ஏஐஐஇஏ) திருநெல்வேலி கோட்ட 30 ஆவது மாநாடு அக்டோபர் 15 ஞாயிறன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சங்க கோட்ட தலைவர் செ.முத்துகுமாரசாமி தலைமை தாங்கினார். கோட்ட பொதுச்செயலாளர் பொன்னையா வரவேற்றார். சங்க பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் மிஸ்ரா புதிய கட்டடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இன்சூரன்ஸ் ஊழியர் சங்க முன்னாள் தலைவர் அமானுல்லாகான், இணைச் செயலாளர் கிரிஜா, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயலாளர் ஸ்ரீராம், மூத்த தலைவர் வீ.பழனி உட்பட பலர் வாழ்த்திப் பேசினர்.  மாநாட்டில், பொதுத்துறை நிறுவனங்களை ஒன்றிய அரசு தனியார்மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்,எல்ஐசியில் 1-8- 2022ஆம் தேதி முதல் வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை துவக்கிட வேண்டும். மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கான புதிய பணி நியமனங்களை எல்ஐசி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். அனைத்து வகையான அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். ஆயுள் காப்பீடு பிரிவு மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரியை ஒன்றிய அரசு நீக்கிட வேண்டும். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சிகளை கைவிட வேண்டும், சிறுபான்மை மக்கள், பட்டியலின, பழங்குடி மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறை தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளித்திட வேண்டும். விவசாய பொருட்கள் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும். எல்ஐசியின் வளர்ச்சிக்கு மிகப்பெரும் பங்களிப்பு செலுத்தி வரும் முகவர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை காலதாமதமின்றி நிறைவேற்ற வேண்டும், தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டங்களை கைவிட்டு அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் என நிர்ணயம் செய்திட வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குடும்ப ஓய்வூதியம் 30 சதவீதம் உயர்வு, விடுப்பு சலுகைகளில் முன்னேற்றம், மருத்துவக் காப்பீட்டில் முன்னேற்றம் உள்ளிட்ட ஊழியர்களின் நலன்களை பெற்றுத் தந்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதிய நிர்வாகிகள்

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க திருநெல்வேலி கோட்ட தலைவராக செ. முத்துக்குமாரசாமி, பொதுச் செயலாளராக பொன்னையா, பொருளாளராக கிருஷ்ணன் மற்றும் துணைத்தலைவர்கள், இணைச் செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் காப்பீட்டு கழக ஊழியர் சங்க கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தமிழ்நாடு, கேரளா கோட்டத்தின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.