tamilnadu

img

மறைமுக வரிவிதிப்பு கொடூரமானது: நிதியமைச்சர்

சென்னை,மார்ச் 28- மறைமுகமாக விரிவிதிப்பது கொடூரமானது என்று மாநில நிதி யமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை மீதான உறுப்பினர்க ளின் விவாதங்களுக்கு செவ்வாயன்று (மார்ச் 28) அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசினார். அப்போது,“ சில துறைகளுக்கு மானி யம் குறைக்கப்பட்டதாக எதிர்க் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். அது உண்மையல்ல. ஒன்றிய அரசு நிதியை தவிர்த்து மாநில அரசே வழங்கு வதால் அப்படி தெரிந்தது. உண்மை யில் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சென்ற ஆண்டைக் காட்டிலும் ரூ. 70 கோடி கூடுதலாகத்தான் ஒதுக்கப் பட்டுள்ளது” என்றார். ஊரக வளர்ச்சித்துறையில் ரூ.3000 கோடி நகரப்புற மேம்பாட்டிற்கு மாற்றப்பட்டது. அதனால்தான் நிதி ஒதுக்கீடு குறைவாக தெரிகிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் 10  விழுக்காடு கூடுதலாகும். மின்சாரத் துறையில் ஒவ்வொரு ஆண்டும் உதய் மின் திட்டத்திற்கு ஒட்டுமொத்த இழப்பு தொகையும் செலுத்த வேண்டியது அரசின் கடமை. ஒருபுறம்  இழப்பு குறைந்துள்ளது. மறுபுறத்தில், மானியம் அதிகரித்திருக்கிறது என்றும் அவர் கூறினார். தமிழ் நாட்டில் தொழில் துவங்க  வரும் நிறுவனங்களுக்கு பத்திரம்  மற்றும் பதிவு செலவில் 50 விழுக்காட்டி லிருந்து 100 விழுக்காடு வரைக்கும் விதி விலக்கு கொடுக்கிறோம். இதனால் முதலீட்டுக்கு பாதிப்பு வர வில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சிறு-குறு தொழிலுக்கு ஊக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம். சின்னதுரை பேசும்போது சிறு, குறு, நடுத்தர தொழில்கள் ஒன்றிய அரசின் கொள்கைகளால் மிகவும் நலி வடைந்துள்ள சூழலில் அதற்கான நிதி  ஒதுக்கீடு உயர்த்தப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பாக தொழில் முனைவோரின்  மின் கட்டண  உயர்வு, நிலைக் கட்டணம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்று பேசினார். அதை சுட்டிக் காட்டிய அமைச்சர்,“ ஏற்கனவே  நிலைக்கட்டணம் 25 விழுக்காட்டி லிருந்து 15 விழுக்காடாக குறைக்கப் பட்டது. அதனால் அரசு ரூ.169.60 கோடி கூடுதல் மானியம் வழங்கு கிறது. அந்த தொழில்களை ஊக்கப் படுத்தும் வகையில் அரசு அந்த பொறுப்பை ஏற்றுள்ளது. அந்த தொகைக்கூட சிறுகுறு தொழில் முனைவோரிடம் கொடுத்து மின்வாரியத்திற்கு செலுத்துகிறது. மொத்தமாக அந்த துறைக்கு சென்ற  ஆண்டு ரூ.911 கோடி ஒதுக்கப்பட்டது. இந்து ஆண்டு ரூ.1,600 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இந்தாண்டு 66 விழுக்காடு கூடுதலாக ஒதுக்கியிருக்கிறோம்” என்றும் கூறினார்.

மதுரையில் ஜிஎஸ்டி கவுன்சில்

ஒன்றிய அரசு நடத்தும் ஜிஎஸ்டி  கவுன்சில் கூட்டத்தில் ஒவ்வொரு முறையும் நமது மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை கேட்டுப் பெற்றிருக்கிறோம். பல  வகையான சீர்திருத்தங்கள் கொண்டு  வந்திருக்கிறோம். இந்த கவுன்சிலின் அடுத்தக் கூட்டம் மதுரை யில் நடக்கிறது. அதில் கூடுதலாக சீர்திருத்தங்களை முன்வைப்போம் என்றும் தெரிவித்தார். உலக பொருளாதாரம் நமது நாட்டிற்கு சாதகமாக இருந்தாலும் ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பணவீக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.  இந்த பணவீக்கம் சமூக நீதிக்கு எதிரானது. இதனால் சீர்திருத்தம் செய்யவேண்டியது கட்டாயமாகியது. உதாரணத்திற்கு, மின் கட்டணத்தை உயர்த்தும்போது ஏழைக்கும், பணக்காரர்களுக்கும் ஒரே மாதிரியாக  உயர்த்த வேண்டியுள்ளது. மாநிலங்கள் அனைத்தும் வளர்ச்சி பெற்றால்தான் நாடு வளர்ச்சியடையும் என்று கூறிய அமைச்சர் மறைமுக வரி வசூலிப்பது மிக கொடூரமானது என்றார்.