(கோவி.பால.முருகு)
மதம்பிடிக்குது மதியிழக்குது
மனிதநேய உறவிலே
பதமிழக்குது பண்பழிக்குது
படையெடுக்குது வாழ்விலே!
கானழிக்குது கடலழிக்குது
கருத்தழிக்குது நாட்டிலே
வீணழிக்குது விளைவழிக்குது
விடமளிக்குது நாக்கிலே!
வளமழிக்குது வயிறெரிக்குது
வாழுமக்கள் நிலையிலே
நிலமழிக்குது நீரழிக்குது
நிலவும்பொருள் அழிவிலே!
மதிகெடுக்குது மாண்பிழக்குது
மதம்கெடுக்குது மனதிலே!
சதிபடிக்குது சனிபிடிக்குது
சான்றழிக்குது ஏட்டிலே!
குணங்கெடுக்குது குறிவைக்குது
குடிகெடுக்குது உறவிலே!
தினம்நடக்குது தீங்கெடுக்குது
திறனழியுது கேட்டிலே!