சென்னை,பிப்.22- சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுப்ப தற்கு தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் சிறப்பு உட்கூறு திட்டத்தை செல வழிக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எம்.சின்னதுரை கலந்து கொண்டு பேசியது வருமாறு. பாடம் புகட்டுவார்கள்! இயற்கைப் பேரிடர் இரண்டு முறை தாக்கியும் தேசியப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. சரக்கு மற்றும் சேவை வரி உரிய பங்கீடு தராதது, கடன் வாங்கும் வரம்புகளில் கடுமையான நிபந்தனைகளை விதித்து மாநிலங்களை தவிக்க வைத்துள்ளது. மின்துறை நிபந்தனை உள்ளிட்டு ஒன்றிய அரசின் பாரபட்சமான நடவடிக்கைகள் காரணமாக தமிழகம் கடும் நிதி நெருக்கடிகளுக்கு உள்ளாகி இருக்கிறது என நிதிநிலை அறிக்கை தெளிவாக கூறுகிறது. ஒன்றிய அரசின் இந்த தமிழக விரோதப் போக்கிற்கு தமிழ்நாடு மக்கள் தக்க நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள் என்பது நிச்சயம்.
சிபிஎம் பாராட்டு!
மாநில அரசுகளின் வருமானம் குறைந்து - செலவினங்கள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஏழை-எளிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையிலும், இளைஞர்களுக்கு ஒரு வளமான வாழ்க்கையை உருவாக்கும் நோக்கிலும் சவால்கள் நிறைந்த சூழலில் சாதகமான முறையில் நிதிநிலை அறிக்கையை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனதார பாராட்டுகிறோம். வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழைக் குடும்பங்களின் 5 லட்சம் குடும்பங்களுக்கு அரசின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைத்து அவர்களை முன்னேற்றுவதற்கான திட்டங்கள், 8 லட்சம் குடிசைகள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு மாற்றாக ரூ. 3.5 லட்சம் மதிப்பிட்டில் கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டம் பாராட்டத்தக்கது.
கட்டுமானப் பொருட்கள்...
மணல், கம்பி, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதால் ரூ. 6 லட்சம் ஒதுக்கீடு செய்ய அரசு முன்வர வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழுதடைந்த தொகுப்பு வீடுகளை புனரமைப்பதற்கு பதிலாக அதே இடத்தில் புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும்.
சிறப்பான முன்னெடுப்பு
முதன்முறையாக கொண்டு வந்துள்ள ‘மாபெரும் தமிழ்க் கனவு’ திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் மொழியிலிருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளிலிருந்து தமிழ் மொழிக்கும் புத்தகங்களை மொழி மாற்றம் செய்வதும், அதற்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது ஆகியவை அறிவைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சிகள் சிறப்பான முன்னெடுப்புகள். பழங்குடியினர் மொழி வளர்ப்பை பாதுகாக்கவும், தமிழ் மொழியை மேம்படுத்தவும் எடுக்கப்பட்டுள்ள முயற்சிகள் சிறப்பு சேர்க்கிறது. அரசின் நிதி வருவாயை அதிகரிப்பதற்கு கிரானைட், மணல், தாதுப்பொருட்கள் உள்ளிட்டு கனிம வளங்களை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். இதன் மூலம் வழி வருவாய் அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள்
மிகவும் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ள இந்த நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர், ஆசிரியரின் மிக முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு, சுமார் 100 மாதங்களாக நிலுவையில் இருக்கும் போக்குவரத்து ஓய்வூதியர்களின் அகவிலைப்படி, எம்.ஆர்.பி செவிலியர்களின் கோரிக்கைகள் உள்ளிட்டவை பற்றிய அறிவிப்பு இல்லை. இவைகளை நிறைவேற்ற வேண்டுகிறோம். அதேபோல, அரசுத்துறைகளிலும், நிறுவனங்களிலும் பத்தாண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தம் முறை, தொகுதிப்பூதியம் - காலமுறை ஊதிய முறை, தினக்கூலி முறையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஆஷா, சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் , இடைநிலை ஆசிரியர்கள், தூய்மைக் காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், நீண்ட காலம் பணிபுரியும் நூலகர்கள், மக்கள் நலப் பணியாளர்கள், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், சுகாதார பணியாளர்கள், டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்கள் உள்ளிட்டு அரசின் பல்துறை ஊழியர்களும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். சிறு-குறு தொழில் குறித்து புதிய முன்மொழிவுகள் பல இருந்தபோதும், மின்சார நிலைக் கட்டணம் குறைப்பு உள்ளிட்ட சிறு-குறு உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கும் செவி சாய்த்திருக்க வேண்டும். கரும்புக்கு ரூ.4000, நெல்லுக்கு ரூ. 3000 தருக! உரம் உள்ளிட்டு விவசாய இடு பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4000 வழங்க வேண்டும். நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ. 3000 வழங்க வேண்டும். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர், தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கிடவும், கரும்பு அரவை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மூடப்பட்ட தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறைந்தபட்ச ஊதியம் ரூ.26ஆயிரம் வழங்குக!
அத்தியாவசியப் பொருட்கள் அனைத்திற்கும் ஒன்றிய அரசு மிக மோசமான முறையில் ஜி.எஸ்.டி. வரி விதித்துள்ளதால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளன. ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை களை தடுப்பதற்கு உறுதியான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சாதி ஆணவப் படுகொலை களை தடுப்பதற்கு தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். சிறப்பு உட்கூறு நிதி திட்டத்தை செலவழிக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும்.
காலிப் பணியிடங்களை நிரப்புக!
ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் படிப்பை முடித்து வேலை தேடி வருகின்றனர். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் தமிழகத்தில் புதிய தொழில் வளர்ச்சியை உருவாக்க வேண்டும். அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணி யிடங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆதிதிராவிட மாணவர்களின் பெரும்பாலான விடுதிகள் பழுதடைந்த நிலையில் உள்ளன. மிகவும் மோசமான விடுதிகளை அகற்றி விட்டு புதிய விடுதி கள் கட்டித் தர வேண்டும்.
பாதிக்கப்படும் பல்கலைக்கழகம்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளதால் பல்கலை ஆசிரியர்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை மீட்டெடுக்க வேண்டும். மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு 2 மாதங்களாக வழங்கப்படா மலிருக்கும் சம்பள பாக்கியை உடன் வழங்க வேண்டும். சென்னை வெள்ளத்தின் போது தமிழ்நாடு கட்டுமான மற்றும் உடலுழைப்பு நலவாரியத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள 70 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் அழிந்து போயுள்ளன. இந்த தரவுகளை மீட்க வேண்டும். இல்லையேல் தொழிலாளர்களிடம் விண்ணப்பம் வாங்கி அரசே பதிவு செய்ய வேண்டும். காவிரி - வைகை - குண்டாறு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் திட்டம் இதுவரை நிறைவேறவில்லை. இந்த திட்டம் தற்போது எந்த நிலையில் உள்ளது. நில எடுப்பு பணிகள் எல்லாம் முடிந்து விட்டதா? திட்டம் எப்போது நிறைவேற்றப்படும்? சிறு, குறு விவசாயிகள் வெகுமக்கள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நீண்ட நிலுவை தவறிய பண்ணை சாரா கடனுக்கு ஒன்பது விழுக்காடு வசூலிக்கப்படும் வட்டித் தொகையை ஆறு விழுக்காடாக குறைக்க வேண்டும். தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை பட்ஜெட்டில் அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. இந்த சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும்.
தொகுதி கோரிக்கைகள்
கந்தர்வக்கோட்டை தொகுதியில் அரசு தொழிற் பயிற்சி மையம் அறிவிப்பு செய்த முதலமைச்சருக்கு தொகுதி மக்களின் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். கந்தர்வக்கோட்டை தொகுதி மிகவும் பின்தங்கிய தொகுதியாகும். இங்கு கீரனூரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும், சிப்காட் தொழிற்பேட்டை யும், காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் அமைத்து தந்து உதவிட வேண்டுகிறேன். கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் சட்டமன்ற தொகுதியின் தலைநகராக இருப்பது கந்தர்வக்கோட்டை தான். ஆனால், கந்தர்வக்கோட்டை இன்றைக்கும் ஊராட்சி மன்றமாகவே இருக்கிறது. ஏறக்குறைய 40 கிராமங்களின் மக்கள் கந்தர்வக்கோட்டைக்கு வந்து செல்கின்றனர். எனவே இதை பேரூராட்சியாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
‘டிஎன்டி’ ஒற்றைச் சான்று வழங்குக!
தமிழகத்தில் சீர்மரபினர் அதிகமாக வாழும் பகுதிகளில் கந்தர்வக்கோட்டை தொகுதியும் ஒன்றாகும். இவர்களுக்கு வழங்கப்படும் டி.என்.டி மற்றும் டி.என்.சி. என இரட்டை சான்றிதழ் முறையை ஒழித்து 1979க்கு முன்பு போலவே ஒரே டி.என்.டி. ஒற்றைச் சான்றிதழ் வழங்க இம்மக்கள் நீண்ட காலமாக போராடி வருகிறார்கள். கல்வி மற்றும் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைவதற்கு முதலமைச்சர் தலையிட்டு டி.என்.டி. சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.