சென்னை, பிப்.11- உயர் மருத்துவப் படிப்புத் தொடர்பான பிரச்சனையில் ஒன்றிய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக உயர் மருத்துவப் படிப்பில் சேர்க்கைக் கான கலந்தாய்வை மேற்கொண்டது எப்படி? என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பி யுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்து வர்களுக்கான இடஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதல் கொடுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தர விட்டுள்ளது. தற்போது வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசிடம் உரிய விளக்கம் கேட்டுள்ள நிலையில், ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பொது சுகாதாரத்துறையின் (பொது) பிரிவு அவசர அவசரமாக 8.2.2022 அன்று 100 விழுக்காடு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும் தானே கலந்தாய்வு நடத்துவதற்கான ஆணையைப் பிறப்பித்துள்ளது. இந்த ஆணையில் அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. இது உச்ச நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா? ஓர் அரசே அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை புறக் கணிப்பது என்பது பொது சுகாதார அமைப்பிற்கு எதிரான சமூக அநீதியாகும். பொது சுகாதாரத் துறையை வார்த்து எடுத்துள்ள தமிழகம் மற்றும் கேரளாவின் முன்மாதிரியைப் பின்பற்றுவதை விடுத்து தகுதி, திறமை (மெரிட்) என்ற ஒற்றை மாயபிம்பத்தை வைத்துக் கொண்டு அரசு மருத்துவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளில் ஒன்றிய அரசு புறக்கணிப்பது என்பது பொது சுகாதாரத் துறையின் வீழ்ச்சியிலேயே முடியும். எனவே, ஒன்றிய அரசு இந்த முடிவை உடனடி யாக திரும்பப் பெற வேண்டும். உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் அரசு மருத்துவர்களுக் கான இடஒதுக்கீட்டையும், அந்தந்த மாநிலத்திற்கான ஒதுக்கீடும் நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும். சலோனிகுமாரி என்ற ஒரு பெண்மணி தொடர்ந்த வழக்கைத் தவறாகப் பயன்படுத்தி மருத்து வக் கல்லூரிக்கான இடஒதுக்கீடுத் தொடர்பான வழக்கை பல்லாண்டுகள் தள்ளித் தள்ளி வாய்தா வாங்கிய ஒன்றிய பாஜக அரசு, உயர் மருத்துவப் படிப்புத் தொடர்பான பிரச்சனையில் ஒன்றிய அரசை உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக உயர் மருத்துவப் படிப்பில் சேர்க்கைக்கான கலந்தாய்வை (8.2.2022) மேற்கொண்டது எப்படி? இது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு அல்லவா! சமூக நீதிக்கான முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் அவசரமாகக் கவனம் செலுத்தி ஆவன செய்யக் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.