தமிழ் மட்டுமே தெரிந்தால் தமிழ்நாட்டை தாண்டி செல்ல முடியாது என்று மெட்ரிக் பள்ளிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அறிவியலுக்கு புறம்பான கருத்தை தெரிவித்திருந்தார். இது “தொழில் லாபம்” கருதிய கருத்து. முதல் போட்டவர்கள் அதைக் காப்பாற்ற முற்படுவது இயற்கை தான். ஆனால் அந்தக் கருத்தை ஓர் அறிவியல் உண்மை போல முன்வைப்பது முறையல்ல. நான் தமிழ் மட்டுமே படித்தவன். தமிழ்நாட்டு எல்லையை 35 ஆண்டுகளுக்கு முன்பு தாண்டினேன். எனது பணி என்னை இந்தியாவின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் கொண்டு சென்றது. நமது நாட்டில் நான் கால் வைக்காத மாவட்டங்கள் பத்து இருபது கூட இருக்காது. எத்தனை மொழிகள்... எத்தனை இடங்கள்... உலகின் எல்லா கண்டங்களிலும் உள்ள ஏராளமான நாடுகளுக்கு பணி தொடர்பாக சென்றிருக்கிறேன். தேவைப்படும் போது எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் கற்றுக் கொள்ள முடியும். திருப்பூரை தேடி உடுத்துகின்றன தேசங்கள். நமது தொழில் முனைவோரும் உழைப்பாளிகளும் பல கண்டங்களில் வாழ்கிறார்கள். அதனால் தான் தமிழ் மொழி பல நாடுகளில் அலுவல் மொழியாக உள்ளது. எனவே தமிழ் கற்றால் தமிழ்நாட்டு எல்லையைத் தாண்ட முடியாது என்றெல்லாம் பேசுவது உள்நோக்கம் உள்ளதே!
ஆர்.பாலகிருஷ்ணன் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி