tamilnadu

img

பாடும் கிளிகள் பயமுறுத்த ஆரம்பித்தால்?

அர்ஜெண்டினாவின் கிழக்கு அட்லாண்டிக் கடலோர ஹிலாரியோ அஸ்கஸுபி (Hilario Ascasubi) நகரில் வாழும் மக்களுக்கு ஒரு விசித்திரமான பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கிளிகளின் தொல்லைதான் அது. சுற்றியுள்ள குன்றுகளில் இருந்த காடுகள் அழிக்கப்பட்டதால் பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறமுள்ள ஆயிரக்கணக்கான கிளிகள் அங்கு ஊடுருவுகின்றன. நகரின் மின்சார கேபிள்களை அவை கடிக்கின்றன. மின் தடையை ஏற்படுத்துகின்றன. அவை எழுப்பும் சத்தங்களும் அவற்றின் கழிவுகளும் நகர மக்களுக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. “சுற்றுவட்டாரத்தில் இருந்த காடுகள் காணாமல்போய்க்கொண்டிருக்கின்றன. இதனால் கிளிகள் உணவு, வாழிடம் மற்றும் நீர் தேடி நகருக்கு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் அர்ஜெண்டினாவில் பெரும்பாலான இடங்களில் காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன” என்று சூழலியலாளர் டயானா லிரா (Daiana Lera) கூறுகிறார்.

கடந்த சில ஆண்டுகளாக இலையுதிர்காலம், குளிர்காலங்களில் கிளிகள் நகருக்கு அடைக்கலம் தேடி வரத்தொடங்கின. சில சமயங்களில் நகரில் வாழும் ஐயாயிரம் பேருக்கு ஆளுக்கு பத்து கிளிகள் என்ற விகிதத்தில் இவற்றின் எண்ணிக்கை பெருகிவிட்டது. கோடைகாலத்தில் இவை இனப்பெருக்கத்திற்காக தெற்கில் உள்ள பட்டாகனியா (Patagonia) மலைச்சரிவுகளுக்கு செல்கின்றன. ஆயிரக்கணக்கான கிளிகள் கட்டிடங்கள், தேவாலயம், மின் கேபிள்கள் போன்றவற்றில் அமர்ந்து கொள்கின்றன. நகரை ஆக்கிரமிக்கின்றன. திகில் பட இயக்குனர் ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் “Alfred Hitchcock ) பறவைகள்” (The birds) என்ற படத்தில் வரும் காட்சிகளை இது நினைவூட்டுகிறது என்று மக்கள் கூறுகின்றனர். இவை மின் கேபிள்களை கடித்து சேதப்படுத்துகின்றன. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் மின் கம்பிகளுக்குள் புகுந்து மின் விநியோகத்தை பாதிக்கிறது. “இது அன்றாட வாழ்வில் நகர மக்களுக்கு பொருட்செலவை ஏற்படுத்துகின்றன” என்று ரேடியோ டாக்சி எஃப் எம் வானொலியின் உள்ளூர் செய்தியாளர் ரமொன் அல்வெரஸ் (Ramón Alvarez) கூறுகிறார். கிளிகளை விரட்ட ஒலி, லேசர் போன்ற பல வழிகளை மக்கள் பயன்படுத்தினர். என்றாலும் எதுவும் பலன் தரவில்லை. “இயற்கையை மீட்கவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் தீர்வு ஏற்படுவது கடினம். கூடியமட்டும் இயற்கையுடன் இணைந்து வாழ உதவும் வேறு வழிகளை செயல்படுத்தவேண்டும்” என்று டயானா லிரா கூறுகிறார். இயற்கையை சீரழிக்கும்போது நியூயார்க்கில் எலிகள், பாரிஸில் நுண்ணுயிரிகள், ஹவாயில் கொசுக்கள், ஆஸ்திரேலியாவில் நெருப்பு எறும்புகள் என்று இது போல உயிரினங்கள் மனிதன் வாழும் பகுதிகளுக்குள் நுழைகின்றன. யானை, புலி, முள்ளம்பன்றி போன்றவை காடுகளில் இருந்து நாட்டிற்குள் நுழைவது போல இது நிகழ்கிறது. இயற்கையை மீட்டு அதனுடன் இணைந்து வாழ்வது ஒன்றே இதற்கு சிறந்த தீர்வு என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.