அம்மா அப்பா கோபப் பட்டால்
அழக்கூ டாது கண்ணே!-அவர்
இம்மா நிலத்தில் அடைந்த துன்பம்
எடுத்துச் சொல்வார் பெண்ணே!
ஆசான் பள்ளியில் கோபப் பட்டால்
ஆத்திரம் வேண்டாம் கண்ணே!- அவர்
தூசாய் உன்னை நினைக்க மாட்டார்
தொண்டாய்ச் செய்வார் பெண்ணே!
நண்பர் உன்னிடம் கோபப் பட்டால்
நடுங்கி டாதே கண்ணே!-அவர்
அன்பால் மறுநாள் அணைப்பார் உன்னை
ஆக்கிடு பொறுமை பெண்ணே!
மூத்தோர் சொல்லை மதித்து நடந்தால்
முதிர்ந்திடும் அனுபவம் கண்ணே!-உன்
தாத்தா பாட்டி சொல்வதைக் கேட்டால்
தாங்கிடும் வாழ்வைப் பெண்ணே!
கல்வியில் கேள்வியில் நல்லதைத் தேடிக்
கருத்தில் கொள்வாய் கண்ணே!-வாழ்வில்
சொல்லில் வாய்மை செயலில் தூய்மை
சூழ்ந்திட வாழ்ந்திடு பெண்ணே!
வாழ்ந்திடத் தேவை வாழ்க்கைக் கல்வி
வளமாய் ஆக்கிடும் கண்ணே!-உனக்கு
வையம் தந்திடும் அனுபவக் கல்வி
வாழ்வை நடத்தும் பெண்ணே!