tamilnadu

அனுபவம் கை கொடுக்கும்! - கோவி.பாலமுருகு

அம்மா அப்பா கோபப் பட்டால்
 அழக்கூ டாது கண்ணே!-அவர் 
இம்மா நிலத்தில் அடைந்த துன்பம்
 எடுத்துச் சொல்வார் பெண்ணே!

ஆசான் பள்ளியில் கோபப் பட்டால் 
 ஆத்திரம் வேண்டாம் கண்ணே!- அவர்
தூசாய் உன்னை நினைக்க மாட்டார்
 தொண்டாய்ச் செய்வார் பெண்ணே! 

நண்பர் உன்னிடம் கோபப் பட்டால்
 நடுங்கி டாதே கண்ணே!-அவர்
அன்பால் மறுநாள் அணைப்பார் உன்னை
 ஆக்கிடு பொறுமை பெண்ணே!

மூத்தோர் சொல்லை மதித்து நடந்தால்
 முதிர்ந்திடும் அனுபவம் கண்ணே!-உன்
தாத்தா பாட்டி சொல்வதைக் கேட்டால்
 தாங்கிடும் வாழ்வைப் பெண்ணே!

கல்வியில் கேள்வியில் நல்லதைத் தேடிக்
 கருத்தில் கொள்வாய் கண்ணே!-வாழ்வில்
சொல்லில் வாய்மை‌ செயலில் தூய்மை
 சூழ்ந்திட வாழ்ந்திடு பெண்ணே! 

வாழ்ந்திடத் தேவை வாழ்க்கைக் கல்வி
 வளமாய் ஆக்கிடும் கண்ணே!-உனக்கு
வையம் தந்திடும் அனுபவக் கல்வி
 வாழ்வை நடத்தும் பெண்ணே!