அங்கிள் எப்புடி இருக்கீங்க..
காலைலயே எங்க கிளம்பிட்ட
அண்ணனோட பொண்ணு படிக்குற ஸ்கூலுக்குப் போய்ட்டு வர்றேன்.. அண்ணன், அண்ணி ரெண்டு பேரும் போக முடியல... அதான் நான் போனேன்..
ஏதாவது நிகழ்ச்சியா..?
ஆமா... இங்கிலீஷ் நல்லா வந்துரும்.. பேச வெச்சுர்றாங்க.. ஆனா, அவங்க குடுக்குற புக்ஸ் எல்லாம் பாத்தா எனக்கு சரியாத் தோணல..
அப்புடியா?
எங்களுக்குலாம் நீதிக்கதைனு இருக்கும்.. அதுல இதனால் கிடைக்கும் நீதி என்னவென்றால்னு ஒரு நல்ல விஷயத்தச் சொல்வாங்க..
நாங்க படிக்குறப்பயும் இருந்துச்சு..
ஒரு கதையப் படிச்சேன்... யானை போற வழில மரத்தோட கிளைய ஒடிச்சுருது.. அதுலருந்த சிட்டுக்குருவியோட பறவைக்கூடு கலைஞ்சு கீழே விழுது... அதுல இருந்த முட்டை உடைஞ்சு போய் குஞ்சு செத்துப் போகுது..
இதனால பழிவாங்குற உணர்வு கொழுந்து விட்டு எரியுதாம்... நண்பர்களச் சேத்துக்கிட்டு அம்மாக் குருவி பழிவாங்குற படலத்தை ஆரம்பிக்குது.. அது வெற்றிகரமா நிறைவேறுதாம்... நண்பர்கள் குருவி, மரங்கொத்தி, தவளைனு மூணுபேரும் சேர்ந்து யானையக் கொலையே பண்றாங்க.. இதுதான் கதை..
அடடே... இதுல குழந்தைகளுக்கு என்ன நீதி கிடைக்கப்போகுது..?
அவங்க சொல்றது என்னன்னா, வீரத்தை விட புத்திசாலித்தனம்தான் பெரிசாம்.. தேவையான நேரத்துல கை குடுக்குறவங்கதான் நண்பர்களாம்..
ஆனா, கதையோட கரு ரொம்பத் தப்பாருக்கே..
இது ரொம்ப ஆபத்து வேற... வகுப்புல ஒரு பையனோ, பொண்ணோ தெரியாம ஒரு தப்பு பண்ணிட்டா, நண்பர்கள் சில பேரு சேர்ந்து பழிவாங்குறது சரின்னு ஆயிடுமே, அங்கிள்... ஆனா, இத யாருகிட்ட சொல்றது..
அந்தப் புத்தகத்த வெளியிட்டவங்களுக்கு கடிதம் போடலாம்.. ஸ்கூல் நிர்வாகத்துல நம்ம கருத்த சொல்லலாம்.. சும்மா இருக்கக்கூடாது..
இது மாதிரிலாம் நாங்க படிக்குறப்ப இல்லை..
அப்படிச் சொல்ல முடியாது.. நேரடியா இல்லாம இருக்கலாம்... தெனாலி ராமனுக்கு அரசர்..
கிருஷ்ணதேவராயர்தான அங்கிள்..? அவரும், பாபரும் சமகாலத்தவங்க வேற.. அதோட இவங்களுக்கு முன்னாடியே அரபிக்கடல் முழுசையும் போர்ச்சுக்கீசியர்கள் கைப்பற்றிக்கிட்டாங்க..
ஆமா.. நல்லா நினைவுல வெச்சுருக்கியே.. கிருஷ்ணதேவராயர் தெனாலி ராமனுக்கு மரண தண்டனை விதிக்குற கதை நினைவுல இருக்கா..?
இருக்குதே... மண்ல புதைச்சு, தலையை யானையோட காலை வெச்சு இடறி விடனும்னு தீர்ப்பு குடுத்துருவாரு... கழுத்து வரைக்கும் அவர மண்ல இறக்கி விட்டுட்டு, யானையைக் கூட்டிட்டு வர வீரர்கள் போயிருவாங்க. அப்போ...
கூன் விழுந்த வண்ணான் ஒருத்தர் வருவாரு..
ஆமா... அவரு வந்து என்னாச்சுனு கேட்டவுடன, எனக்கும் உன்ன மாதிரி கூன்தான்.. 3 மணிநேரம் இபபுடி மண்ல புதைஞ்சு கிட்டா சரியாயிரும்னு சொன்னாங்க... 3 மணி நேரம் ஆச்சு.. எனக்கு சரியாயிருக்கும்.. என்ன வெளில எடு, பார்க்கலாம்..
அவரும் தெனாலி ராமன் சொன்னத நம்பி, மண்ணத் தோண்டுவாரு... வெளில வந்த தெனாலி ராமன தன்னோட முதுகக் காட்டி, பாத்தியா சரியாயிடுச்சு... நீ இப்போ புதைஞ்சுக்கோ.. உனக்கும் சரியாயிடும் என்று சொல்லி, குழியில் அவரை இறக்கிவிட்டுட்டு போயிடுவார்..
ஆமா, இதுல என்ன அங்கிள் இருக்கு..
இதுல நீதின்னு எதச் சொல்வாங்கன்னா, புத்திசாலித்தனமாம்…
என்ன இது… கதை, கதையாம் காரணமாம்னு சொல்வாங்க… ஆனா, கதை, கதையாம் காரணமில்லாமல் மாதிரில இருக்கு..
சரியான காரணமில்லாமன்னு சொல்லலாம்.. இதுல சாதிய வேறச் சொல்றாங்க.. ஏமாந்தவரு ஒடுக்கப்பட்ட பிரிவு… இந்த தெனாலி ராமன் உயர்சாதியச் சேர்ந்தவரு..
ஒ… அப்புடினா, கதை, கதையாம் காரணமில்லாமலானு சொல்லணும்.. காரணமில்லாம இந்தக் கதைகள் உருவாகல. கதைகள்ல கூட சாதி ஏற்றத்தாழ்வச் சொல்லிருக்காங்கனு எடுத்துக்கலாமே..
சரியாச் சொன்ன.. இதுதான் நமக்குக் கிடைக்குற நீதி.. என்றவாறே நகர்ந்தார் அங்கிள்.