tamilnadu

img

செங்கொடி இயக்கத்தின் வரலாற்றுப் படக்காட்சி நாளை திறப்பு

மதுரை, மார்ச் 27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டையொட்டி மார்ச் 29 (நாளை) மதுரையில் செங்கொடி இயக்கத்தின் வரலாற்றுப் படக்காட்சி துவங்குகிறது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 23வது மாநாடு மதுரையில் மார்ச் 30, 31, ஏப்ரல் 1 தேதிகளில் இராஜாமுத்தையா மன்றத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற உள்ளது. மாநாட்டின் துவக்கமாக முந்தைய நாள் (மார்ச் 29) செவ்வாய் மாலை 4 மணியளவில் இராஜா முத்தையா மன்ற வளாகத்தில் அமையவுள்ள பெண்ணுரிமை இயக்கத்தின் மறைந்த மகத்தான தலைவர் தோழர் மைதிலி சிவராமன் நினைவரங்கில் ‘தமிழ்ச் சமூகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம்’ எனும் செங்கொடி இயக்கத்தின் வரலாற்றுப் படக்காட்சி துவங்குகிறது.  மேலும் அதே வளாகத்தில் மறைந்த முதுபெரும் எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் நினைவரங்கில் புத்தகக் காட்சியும் துவங்குகிறது. 

கட்சியின் மூத்த தலைவரும் மாநிலக்குழு உறுப்பினருமான எஸ்.ஏ.பெருமாள் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் படக்காட்சியை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி திறந்து வைக்கிறார். தமிழகத்தில் செங்கொடி இயக்கம் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டங்கள், பாட்டாளி வர்க்கத்தின் நலன்காக்க நடைபெற்ற கள இயக்கங்கள், மகத்தான வெற்றிகள், தியாகங்கள் உள்ளிட்ட பல அம்சங்கள் இப்படக்காட்சியில் இடம்பெறுகின்றன. படக்காட்சி திறப்பு நிகழ்ச்சியில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

பிரதிநிதிகளுக்கு அழைப்பு துவக்க மாநாட்டிற்கு முந்தைய நாள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மாநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.  இந்நிகழ்ச்சியில் அனைத்துப் பகுதி பொதுமக்களும் பங்கேற்று செங்கொடி இயக்கத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், ஆதரவு அளிக்கவும் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மார்ச் 29 அன்று மாலை 6 மணி அளவில் மாநாட்டு அரங்கில் வரவேற்புக்குழுவிடம், மாநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் பார்வையாளர்கள் தங்களது பெயர்களை பதிவு செய்து மாநாட்டு அறிக்கைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமெனவும் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.