நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஏப்.22- தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கம் சார்பில், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலக வளாகத்தில் செவ்வாய் அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீதிமன்ற தீர்ப்பை காரணம் காட்டி, அரசியல் சாசன சட்ட உரிமை! தொழிற்சங்க கூட்டு பேர உரிமையை பறிப்பதையும், ஜனநாயக படுகொலை நிகழ்த்து வதையும், தொழிற்சங்கத்தின் மீது வன்மத்துடன் கொடி மரங்களை அகற்றி, சங்கத்தின் மாநில துணை தலைவர் ச.மகேந்திரன் உள்ளிட்ட திருச்சி மாவட்ட நிர்வாகிகளை, கைது செய்து மிரட்டல் விடுக்கும் திருச்சி கண்டோன்மெண்ட் காவல் நிலைய காவல்துறை ஆய்வாளர் அன்பழகனை வன்மையாக கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் மகேந்திரன், கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்பாண்டி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணைத் தலைவர் பெரியசாமி, வட்டக்கிளை நிர்வாகி சுரேஷ்பாபு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.