tamilnadu

img

தூத்துக்குடியைப் புரட்டிப்போட்ட கனமழை உப்பளங்கள்-உப்புத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு

தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இயல்பு நிலை மெல்ல... மெல்ல... திரும்பிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாட்கள் விடாது பெய்த கனமழையால் வெகுவாகப் பாதிக்கப்பட்டது தூத்துக்குடி மாவட்டம் தான். குறிப்பாக திருவைகுண்டம் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இங்கு மட்டும் 31 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழைகள் பாதிக்கப்பட்டுள்ளன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவைகுண்டம் ஒன்றியச் செயலாளர் நம்பிராஜன்  தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், திருவைகுண்டம் பகுதி சாலைகள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் துண்டிக்கப்பட்டதால் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது என்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த மழை உப்பளங்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் உப்பளத் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி நகரமே தண்ணீரில் தத்தளித்த நிலையில் உப்பளங்கள் நிலை என்னவாகியிருக்கும் எனக் கேள்வியெழுப்புகின்றனர் உப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள்.  மழை நீர் வடியத் தொடங்கினாலும் உப்பளங்கள், இன்னும் சீரடையவில்லை. மழையால் பாதிக்கப்பட்டுள்ள உப்பளங்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம். தூத்துக்குடியில் ஆண்டுதோறும் பல லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் கொண்டு செல்லப்படுகிறது. மாவட்டத்தில் வேம்பார், வேப்பலோடை, தருவைகுளம், அய்யனார்புரம், முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான உப்பளங்கள் உள்ளன.

உப்பளங்களில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.  மழை நீர் மட்டுமல்ல சேறு, கற்கள் கலந்த தண்ணீரால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சேகரித்து வைக்கப்பட்டிருந்த உப்பு மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதாகக் கூறுகிறார் தூத்துக்குடி லதா உப்பு நிறுவனத்தின் உரிமையாளர் முத்துலதா. மேலும் அவர் கூறுகையில் எங்கள் நிறுவனத்திற்கு அருகிலிருந்த சாலையே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. ஆழ்துளைக் கிணறுகளில் சேறு படிந்து, மோட்டார்களும் பழுதடைந்துள்ளன.  உள்கட்டமைப்பு சேதமடைந்த மோட்டார்-பம்புகளை சரி செய்ய கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் செலவழிக்க வேண்டியிருக்கும் என்றார். மற்றொரு உப்பு நிறுவன உரிமையாளர் கூறுகையில், இப்பகுதியில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டதும், உற்பத்தியை நிறுத்திவிட்டு, தார்ப்பாய் கொண்டு உப்பை பாதுகாத்தோம்.  நாங்கள் எதிர்பார்த்ததைவிட மழை  தீவிரமாக, இடைவிடாது பெய்ததால் உப்பு அடித்துச் செல்லப்பட்டது என்றார்.  தூத்துக்குடி முத்தையாபுரம் புல்லாவெளி கிராமத்தைச் சேந்த சரவணக்குமார் கூறுகையில்,  “எங்கள் கிராமத்தில் 500 குடும்பங்கள் உள்ளன. மூன்றில் ஒரு பகுதியினர் உப்பளங்கள் மற்றும் விவசாய நிலங்களில் வேலை செய்கின்றனர். வெள்ளத்தில் எங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்துவிட்டோம், உப்பளங்கள் இன்னும் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும்” என்றார்.