tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுதில்லி, மார்ச் 25 - பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் அமைச்சர் பதில் அளிக்க மறுப்பு தெரிவித்ததால் மக்களவையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். திமுக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறித்து அரசு விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

மீனவர்களை திருப்பி அழைத்துவர முயற்சி

புதுதில்லி, மார்ச் 25 - இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை, திருப்பி அழைத்துவர இந்திய அரசு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக மக்களவையில் வெளியுறவு இணையமைச்சர் பதில் அளித்துள்ளார். ஒவ்வொரு முறையும் இதே பதிலைத்தான் கேட்க வேண்டியதுள்ளது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

3 மாநகராட்சிகளை இணைக்க மசோதா

புதுதில்லி, மார்ச் 25 - தில்லியின் 3 மாநகராட்சிகளை ஒன்றாக இணைப்பதற்கான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நித்தியானந்த ராய் மக்களவையில் தாக்கல் செய்தார். தில்லி கிழக்கு, வடக்கு, தெற்கு, மாநகராட்சிகளை ஒன்றாக இணைக்க ஒன்றிய அரசு முடிவு செய்து மசோதா தாக்கல் செய்யப்பட்டது. புதுதில்லி மாநகராட்சி மட்டும் தனியாக செயல்படும்; மற்ற 3 மாநகராட்சிகள் ஒன்றாக இணைக்கப்படுகிறது.

பிஎம் கேர்ஸ் : மனு தள்ளுபடி

புதுதில்லி, மார்ச் 25 - பி.எம்.கேர்ஸ் நிதியின் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் வரும் பணம் தவறாக பயன்படுத்துவதாக கூறி தொடர்ந்த இம்மனு நிராகரிக்கப்பட்டது. ஏற்கெனவே அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.   

இந்தாண்டு இறுதியில் 5ஜி

புதுதில்லி, மார்ச் 25 - இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் 5ஜி தொலைத்தொடர்பு சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருக்கிறது. மாநிலங்களவையில் ஒன்றிய தொலைத் தொடர்புத்துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் தகவல் தெரிவித்திருக்கிறார். பிஎஸ்என்எல்  நிறுவனம் 4ஜி சேவையை விரைவில் தொடங்கும் எனவும் ஒன்றிய அமைச்சர் தகவல் அளித்துள்ளார்.

மே 5ல் உதகை மலர் கண்காட்சி

உதகை, மார்ச் 25 - நீலகிரி மாவட்டம் உதகையில் 124-வது மலர் கண்காட்சி மே மாதம் 20-ம் தேதி தொடங்கி 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாக தோட்டக்கலைத் துறை ஆணையர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார். மலர் கண்காட்சி நடக்கும் நாட்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருவர்  என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. இந்தாண்டு 124-வது மலர் கண்காட்சி நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.