tamilnadu

கைத்தறி நெசவாளர் கூலியை வங்கியில் செலுத்தாமல் நேரடியாக வழங்க வேண்டும்

கைத்தறி நெசவாளர் கூலியை வங்கியில்  செலுத்தாமல் நேரடியாக வழங்க வேண்டும்

கும்பகோணத்தில் நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், ஜுன் 3-  தமிழ்நாடு கைத்தறி சம்மேளனம் சார்பில், கும்பகோணம் பேரறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க அலுவலகம் முன்பு, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் கே‌.ஆர். சந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சம்மேளன பொதுச் செயலாளர் என்.பி நாகேந்திரன், சிஐடியு தஞ்சை மாவட்ட தலைவர் எம். கண்ணன், மாவட்டச் செயலாளர் சி. ஜெயபால், சங்கச் செயலாளர் எஸ்.ஜே. சுப்பிரமணியன், திருபுவனம் சங்கர் பக்கிரிசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். சங்கப் பொருளாளர் எம்.பி. கிருஷ்ணன் நன்றி தெரிவித்தார்.  11 ரக ஒதுக்கீடு சட்டத்தை கறாராக அமல்படுத்த வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் நெசவாளர் கூலியினை வங்கியில் செலுத்தாமல் நேரடியாக நெசவாளர்களிடம் ரொக்கமாக வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள பட்டுப்புடவை, கைலி ரகங்களுக்கு நிபந்தனையற்ற சிறப்பு மானியத் திட்டம் மூலம், 25 சதவீதம் தள்ளுபடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.