tamilnadu

பள்ளிகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்

சென்னை, டிச.3- ஒமைக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கண்டிப்பாக சுழற்சி முறையில் மட்டுமே வகுப்புகள் நடைபெற வேண்டும். பள்ளிகளில் வகுப்புகள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ நடத்தலாம். பள்ளிக்குள் நுழையும் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வெப்பநிலை பரிசோதனை மேற்கொண்டு, அதிக வெப்பநிலை இருப்போரை அனுமதிக்கக் கூடாது. மாணவர்கள் முகக் கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்வதுடன், ஆசிரியர்களும் முகக் கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன் மாதிரியாக திகழ வேண்டும். மாணவர்கள் பள்ளிக்குள் நுழையும் போது கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது, சமூக இடைவெளி ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். தளவாடப் பொருட்கள், கைப்பிடிகள், கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றை சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும். கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கும் இறை வணக்கம், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.  பள்ளிகளில் நீச்சல் குளம் இருப்பின் அதனை மூட வேண்டும். நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது போன்ற அரசின் வழிகாட்டுதல்களை அனைத்து வகை பள்ளிகளிலும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

;