திண்டுக்கல், அக்.22 - திண்டுக்கல் அருகே கோபால்பட்டியில் இடிந்து விழும் நிலையில் உள்ள அரசுப் பள்ளியை திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் அருகே பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தின் நீர்ப்பிடிப்பு பள்ளியை பாதிக்கிறது. இதனால் பள்ளியில் கட்டடங்கள் மிகுந்த சேதத்திற்குள்ளாகின்றன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிதியில் ரூ.43 லட்சம் வரை ஒதுக்கப்பட்டு, சில கூடுதலாக பள்ளிக் கட்டங்கள் கட்டப்பட்டன. 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த கட்டடங்கள்கூட, தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இதேபோல் 1998 ஆம் ஆண்டு பழனி நாடாளுமன்ற உறுப்பினர், உள்ளூர் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்ட கட்டடங்களும் கடுமையாக சேதமடைந்திருந்தன. பள்ளியின் மேற்கூரை மற்றும் சுவர்கள் பெயர்ந்தும், நீர் கசிந்தும் உள்ளன. தளங்கள், படிக்கட்டுக்கள் உடைந்துள்ளன. அருகில் பெரியகுளம் இருப்பதால் பள்ளியின் உட்புறம் மைதானத்திலும், வகுப்பறையில் மேற்கூரையிலிருந்து நீர் கசிந்து ஒழுகும் நிலை உள்ளன. பள்ளியின் சுற்றுப் பகுதியிலும் நீர்த் தேங்கி உள்ளது. பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் அவ்வப்போது வந்துவிடுகிறது. இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இந்தப் பள்ளிக்கு திங்களன்று திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் சென்று ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டார். கிட்டத்தட்ட 18 வகுப்பறைகள் மழையின் காரணமாக சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. பள்ளி நிர்வாகிகளிடம் கூறுகையில், “பள்ளியின் அருகில் பெரியகுளம் உள்ளதால் குளத்தின் நீர்ப்பிடிப்பு பள்ளியை பாதிக்கிறது. இப்பள்ளியின் 18 வகுப்பறைகளும் அவசியத் தேவையாக உள்ளன. எனவே பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட வேண்டும். மைதானத்தை உயர்த்தி வடிகால் செய்திட வேண்டும். இதுகுறித்து திண்டுக்கல் ஆட்சியரிடம் பரிந்துரைத்து நிதி ஒதுக்கி, பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தார். இந்நிகழ்வின் போது பள்ளியின் தலைமை ஆசிரியை இரா.மரியாள், உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெயச்சந்திரன், அங்கையர்கன்னி, இரா.பிரேமா மற்றும் உடல் கல்வி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உடனிருந்தனர். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பாலகுரு கலந்து கொண்டார். சிபிஎம் தலைவர்கள் ஜி.ராணி, என்.பெருமாள், எஸ்.வெள்ளைக்கண்ணன், பாப்பாத்தி, எம்.கே.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.க்கு பள்ளியின் சார்பாக என்.சி.சி. மாணவிகள் மரியாதை செய்தனர். - இலமு, திண்டுக்கல்