மதுரை:
தமிழகத்திலுள்ள மூன்று துணை மின்நிலையங்களை தனியாருக்கு தாரை வார்த்து மின் நிலையங்களை சூறையாடவும், நிரந்தர, தற்காலிக, ஒப்பந்த மின் ஊழியர்களையும் வீட்டிற்கு விரட்டவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
மதுரை சமயநல்லூர் துணை மின் நிலையம், சங்காரபுரம் துணை மின் நிலையம், சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் உள்ள துணை மின் நிலையம் ஆகியவற்றை தனியாருக்கு தாரை வார்க்க தமிழக அரசு கொள்கை ரீதியாக முடிவெடுத்துள்ளது. ஒவ்வொரு நிலையத்திலுத்திலும் முது நிலை மின் பொறியாளர் தொடங்கி லைன்மேன், வயர்மேன் என ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை வீட்டிற்கு அனுப்புவது மட்டும் அரசின் நோக்கமல்ல. மின்வாரியத்தை சிதைப்பதே அரசின் நோக்கமாக உள்ளது. ஒவ்வொரு துணை மின் நிலையத்தையும் சுமார் ரூ.93.67 லட்சத்திற்கு தாரை வார்க்க பேரம் பேசப்பட்டு பேரம் முடிவடைந்துவிட்டது.
ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் குறைந்தது ரூ.20 கோடி மதிப்பிலான பல்வேறு பொருட்கள் உள்ளன. இதை வெறும் ரூ.93.6 லட்சத்திற்கு வழங்க தமிழக அரசு துணிந்துவிட்டது.துணை மின்நிலையங்கள் தனியாரிடம் போனால் மின் விநியோகம், மின் பழுது ஆகியவை கேள்விக்குறியாகும். மின் மாற்றியில் பழுது ஏற்பட்டோ, வழித்தடத்தில் மின் பழுது ஏற்பட்டோலோ, பழுதின் தன்மையை முழுமையாக உள்வாங்கி அதை சரி செய்வதற்கு குறைந்தது நான்கு நாட்களாகும்.ஒவ்வொரு மின்மாற்றியின் விலையும் குறைந்தது ரூ.10 கோடி பெறும். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு மின் மாற்றி வெடித்துவிட்டால் அதை சரி செய்தவதற்கு குறைந்தது ரூ. ஐந்து கோடி செலவாகும். மிகவும் பாதுகாப்பான, நுணுக்கமான இந்தத் துறையில் தனியாரை அனுமதிப்பது ஆபத்தானது. அரசின் தளவாடப் பொருட்கள் குறித்து அரசே அவர்களிடம் கேள்வியெழுப்பமுடியாது. லாபம் ஒன்றே தனியாரின் குறிக்கோளாக அமையும். தமிழக அரசு மின்வாரியத்தையும், ஊழியர்களையும் பாதுகாக்க துணை மின் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
இது குறித்து நம்மிடையே பேசிய தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சிஐடியு) மாநிலத் தலைவர் ஜெய்சங்கர் “அரசின் அந்த முயற்சியைக் கண்டித்து இரண்டாயிரம் பேரை திரட்டி தர்ணா நடத்த உள்ளோம் என்றார்.