வட்டார மருத்துவ அலுவலரைக் கண்டித்து கரூரில் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஊழியர் விரோதப் போக்குடன் செயல்படும்
கரூர், மே 30- கரூர் மாவட்டம் சின்னதாரபுரம் வட்டார மருத்துவ அலுவலரின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்தும், அவர் மீதும், அவருக்குத் துணையாக செயல்பட்டு வரும் கரூர் மாவட்ட சுகாதார அலுவலர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் போராட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட இணைச் செயலாளர் ஆ. சங்கர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பொன்.ஜெயராம், தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் மாநில பொருளாளர் கே. இளங்கோ ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் எல். பாலசுப்பிரமணி நன்றி கூறினார். போராட்டத்தின் முடிவில் கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை வழங்கினர். விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணையை விரைந்து முடித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கரூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அடுத்த கட்டப் போராட்டமாக ஜுன் 10 ஆம் தேதி, கரூர் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் அனைத்து துறை ஊழியர்கள் மாபெரும் அளவில் கலந்து கொள்ள உள்ளனர் என சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தெரிவித்துள்ளார்.