செட்டிக்குளம் சின்ன வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு வழங்கல்
பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் சின்ன வெங்காயத்திற்கு ஒன்றிய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆயிரத்து 500 ஹெக்டேர் நிலப்பரப்பில் 70 ஆயிரம் டன் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்திலேயே அதிகளவில் சாகுபடி பெரம்பலூர் மாவட்டத்தில் தான், சின்ன வெங்காயம் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக செட்டிக்குளம், பாடாலூர், இரூர், பொம்மனம்பாடி, சத்திரமனை, வேலூர் உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விளைவிக்கப்படும் சின்ன வெங்காயம் அதிக காரத்தன்மை, முளைப்பு திறன், மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது. அதிக கந்தக உள்ளடக்கம் இருப்பதால், இந்த குறிப்பிட்ட வெங்காயம் மற்ற வகைகளுடன் ஒப்பிடும்போது அதிக காரமான சுவை கொண்டது. இது சுமார் 15-18 அடுக்கு உலர்ந்த வெளிப்புற செதில்களைக் கொண்டுள்ளது. மேலும் 8-9 மாதங்கள் வரை சேமிக்கும் காலம் கொண்டது. மேலும், ஓராண்டு வரை பட்டறைகளில் இருப்பு வைக்க முடியும். இந்த சின்ன வெங்காயம் சுவை அதிகளவில் உள்ளதால் சமையலுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், வெங்காயத்தை விதைக்காக வாங்கிச் செல்கின்றனர். செட்டிக்குளம் சின்ன வெங்காயம் சுவை அதிகம் என்பதால் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. புவிசார் குறியீடு விண்ணப்பித்தல் இதுபோன்ற தனித்துவமிக்க செட்டிக்குளம் சின்ன வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு வழங்கக் கோரி, கடந்த 2022 ஆம் ஆண்டு மாவட்டத் தோட்டக்கலை மற்றும் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்கள், செட்டிக்குளம் பகுதி விவசாயிகளைக் கொண்டு குழு அமைத்து, செட்டிக்குளம் சின்ன வெங்காயத்தின் தரச் சான்றிதழுடன் புவிசார் குறியீடு கேட்டு ஒன்றிய அரசிடம் விண்ணப்பித்தனர். அதன்படி, ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க, வெங்காயத்தின் சாகுபடி பரப்பளவு, விவசாயிகளின் எண்ணிக்கை மற்றும் ஓராண்டில் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயத்தின் அளவு உள்ளிட்ட தகவல்களை மாவட்ட வேளாண் விற்பனை துறையினர் அளித்திருந்தனர். இதனிடையே, அண்மையில் பெரம்பலூர் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையினர், செட்டிக்குளம் பகுதியில் விளைந்த சின்ன வெங்காயத்தின் சாம்பிள், ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்திருந்தனர். புவிசார் குறியீடு: ஒன்றிய அரசு ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த தனித்துவமாக உற்பத்தியாகக் கூடிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கி வருகிறது. ஒரு பொருட்களின் தனித்தன்மை, தயாரிக்கும் முறை, விளைவிக்கப்படும் செயல் முறை உள்ளிட்ட பல்வேறு விதமான தகவல்களை ஆவணங்களாக சேகரித்து, ஒன்றிய அரசிடம் விண்ணப்பிக்கப்படும். அதனை அவர்கள் ஆராய்ந்து, அதற்கான குறியீட்டை ஒன்றிய அரசு வழங்கி வருகிறது. கடந்த 1 ஆம் தேதி முதல்முறையாக கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதற்கு அடுத்தாக வியாழக்கிழமை விவசாய விளை பொருளான செட்டிக்குளம் சின்ன வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த குறியீடு பெறப்படுவதன் மூலம், அந்த குறிப்பிட்ட பொருட்களை தனித்துவமாக விற்பனை செய்ய சட்டப் பாதுகாப்பு கிடைத்து விடுகிறது. இதனால் உலக அளவில் செட்டிக்குளம் சின்ன வெங்காயம் சந்தைப்படுத்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், செட்டிக்குளம் சின்ன வெங்கய சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.