மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியிலிருந்து வெளியேற பிரான்சும், அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் முடிவெடுத்துள்ள நிலையில் நைஜருடன் ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவெடுத்திருக்கிறார்கள். அங்குள்ள தனது படைகளின் எண்ணிக்கையை பிரான்ஸ் உயர்த்துகிறது. மதத் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் நைஜரில் தொடரும் என்று பிரான்சின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
“புதுப்பிக்கப்பட்ட உறவை” ஏற்படுத்துவது என்று ஐரோப்பிய யூனியன் மற்றும் ஆப்பிரிக்க யூனியன் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இருதரப்பு விவாதங்களுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த செனகலின் ஜனாதிபதியும், ஆப்பிரிக்க யூனியனின் தலைவருமான மேக்கி சால், “ஒரு புதிய, புதுப்பிக்கப்பட்ட, உறவை உருவாக்குவதற்கான வரலாற்று வாய்ப்பு கிடைத்துள்ளது. ஒற்றுமையுடன் இதைக் கட்ட நாங்கள் விரும்புகிறோம்” என்று குறிப்பிட்டார். கொரோனா தடுப்பூசி காப்புரிமை தொடர்பான ஆப்பிரிக்க யூனியன் கோரிக்கையை ஐரோப்பிய யூனியன் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு என்ற அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தாராள வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு தாராள வர்த்தக ஒப்பந்தங்கள் முக்கிய காரணங்களாக இருந்தன என்று கம்போடியா தெரிவித்துள்ளது. குறிப்பாக, சீனா மற்றும் தென் கொரியாவுடனான உடன்பாடுகளை சுட்டிக்காட்டுகிறார்கள். 2022ல் கம்போடியாவின் பொருளாதாரம் 5.6 விழுக்காடு வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.