என்ன ஆச்சு... கைல பிளாஸ்திரி..
கத்தி வெட்டிருச்சு., அங்கிள்.. நல்லவேளை, கொஞ்சம் தரமில்லாத கத்தியா இருந்துச்சு..
தரம்னா.. எதச் சொல்ற..
கூர்மையா இல்லேனு சொல்ல வந்தேன்... உடனே உங்க மனசுல டமாஸ்கஸ் பிளேடு ஓடிருக்குமே..
பரவாயில்லையே... மனசப் படிக்க ஆரம்பிச்சுட்டே..
மனசப் படிக்குறது பயிற்சிதானே அங்கிள்... முதல்ல உங்களப் பத்தி எனக்குத் தெரிஞ்சுருக்கணும்.. திடீர்னு ஒரு ஆளக் காட்டி இவர் என்ன நினைக்குறார்னு கேட்டா சொல்ல முடியாதே..
உண்மைதான்... ஒருத்தர் கிட்ட பேசுறப்ப சில சிக்னல்கள் கிடைக்கும்.. அத வெச்சுக் கண்டுபிடிச்சுரலாம்.. பயிற்சி வேணும்தான்..
ஆமா, அங்கிள்... பேசாத வார்த்தைகள் உடல் மொழில வெளிவரும்னு சொல்வாங்க..
அப்படித்தான்.. என் மனசுல டமாஸ்கஸ் பிளேடு ஓடுதுன்னு எப்படி உணர்ந்த..?
பேசாத வார்த்தைகள் சொல்லுச்சு என்று சிரித்தாள்.
சரி.. சரி... டமாஸ்கஸ் பிளேடு செய்யுறதுக்கு நாமதான் காரணம்னு தெரியுமா..?
நல்லாத் தெரியும், அங்கிள்... பொ.ஆ.மு.600னு சொல்றாங்க.. நீங்கள்லாம் கி.மு.னு படிச்சீங்க... எங்களுக்கு அத இப்போ பொது ஆண்டுக்கு முன்(பொ.ஆ.மு)னு சொல்லித் தர்றாங்க.. கி.பினு சொன்னத, பொது ஆண்டு(பொ.ஆ)னு சொல்றோம்..சேர நாட்டுல இருந்து எகிப்து, ரோம், சீனானு பல நாடுகளுக்கு அனுப்புன வுட்ஸ் எஃகுதான் அந்த பிளேடு செய்யுறதுக்கு உதவுச்சு.
அடேங்கப்பா... வரலாற்றுக்கு முந்தைய தமிழ்நாடு இது..
உலகத்துலயே ரொம்ப நேர்த்தியான இரும்பு எஃகு இதுன்னு சொல்றாங்க.. இரும்போட கரியையும் சேத்துதான் டமாஸ்கஸ் பிளேடு தயாராச்சு..
அதுலயும் அந்த எஃகுல செஞ்ச வாட்களப் பாத்து ஐரோப்பியர்கள்லாம் அசந்து போயிட்டாங்களாம்.. ஊருக்குப் போய் அதப்பத்தி சொல்லிட்டே இருந்ததா வரலாற்றுல பதிவாயிருக்கு..
ஆமா... காதலிகளைக் கவர அந்த வாளை வாங்கிகிட்டு போய் சுழற்றிக் காட்டுவார்களாம்..
ஓ... நல்ல உத்தியாயிருக்கே..
ம்ம்ம்.. அந்த வாள் 90 டிகிரி அளவுக்கு வளைஞ்சு குடுக்குமாம்... விட்டா மறுபடியும் பழைய நிலைக்கு வந்துரும்..
காதலிகள் மயங்கி விழுந்துருப்பாங்களே..
புதிய காதல்களும் உருவாயிருக்கும்.. இதுக்கு அடித்தளம் போட்டதே நம்மளோட இரும்பு எஃகுதான்.. இப்போ கீழடி ஆய்வுகள் நமக்குப் பல புதிய, புதிய தகவல்களத் தருது..
சங்ககாலத்துக்கும் முன்னாடி இந்த வைகை நாகரீகம்... சரிதான அங்கிள்..
அதுல சந்தேகமே இல்ல.. முழுமையான ஆய்வு நடந்தாதான் இந்த நாகரீக காலத்தைச் சொல்ல முடியும்.. இதுவரையில் நமக்குத் தெரிய வந்த இந்திய நாகரீகங்களில் மிகவும் தொன்மையானதாக இருக்கவும் வாய்ப்புருக்கு... இப்ப கூட, கீழடில நடந்த ஆய்வு தொடர்பான அறிக்கை, அப்புறமா இரண்டாம் கட்ட ஆய்வுல கிடைச்ச பொருட்கள்லாம் தமிழக அரசுகிட்ட கொடுக்கணும்னு உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டுருக்கு..
ஆதிச்சநல்லூர் பத்தி படிச்சுருக்கேன் அங்கிள்.. சங்க கால வாழ்க்கை பத்தி நிறையத் தகவல்கள் நமக்குக் கிடைச்சுருக்கு..
வெளிநாடுகள்லருந்து வந்த கிரேக்க பயணிகள் மெகஸ்தனிஸ், பிளினிலாம் நிறையப் பதிவு பண்ணிருக்காங்க.. அசோகருடைய பிரகடனங்கள்ல கூட சேர, சோழ, பாண்டியர்களப் பத்தி குறிப்பிட்டிருக்கு.
தலைநகரக்கூட மாத்திருக்காங்களே... நல்லவேளை, முகமது பின் துக்ளக் மாதிரி பண்ணிரல..
ஆமா.. சோழர்களுக்கு முதல்ல உறையூர்தான் தலைநகர்... அப்புறமா பூம்புகாரா மாத்துனாங்க..
தஞ்சாவூர், அது பிற்காலச் சோழர்களோட தலைநகர்தான அங்கிள்.. சேரர்களுக்கு வஞ்சி, பாண்டியர்களுக்கு மதுரை.. அவங்க மாத்திக்கல.. சேர நாடுதான் இப்போ இருக்குற கேரளா..
உங்ககூட பேசிட்டே பாடத்த ஒரு திருப்பு, திருப்பிட்டேன்.. திருப்புதல் இல்லேனா ரொம்ப கஷ்டம்தான் அங்கிள்... வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்துல ஒரு வசனம் வரும்ல... “அன்னிக்குக் காலைல ஆறு மணி இருக்கும்... “னு... அது மாதிரிதான் நமக்கும் பாடம் வராம போயிடும்..
சரி... முதல்ல நீ என்ன சொன்ன?
கத்தி வெட்டிருச்சுனு சொன்னேன்..
அதென்ன கத்தி வெட்டிருச்சு...அதுவா வெட்டுச்சு..
அப்புடித்தான நாம சொல்றோம்... முள்ளு குத்திருச்சு.. கல் தட்டிடுச்சு.. அதுமாதிரிதான்..
நிறைய மாறிருக்கோம்... இதுலயும் மாறனும்ல..
ஆமா அங்கிள்... சரி, கிளம்புறேன்..