சென்னை,பிப்.25- தேசிய பங்கு சந்தையில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் வருமான வரி சோதனை நடைபெற்றது. தேசிய பங்கு சந்தையில் தலைமை நிர்வாக அதிகாரி பணியாற்றிய சித்ரா ராமகிருஷ்ணன் வீட்டில் இந்த சோதனை நடை பெற்றது. இமயமலையில் உள்ள முகம் தெரியாத சாமியார் ஒருவரிடம் சித்ரா ராமகிருஷ்ணன் ஆலோச னைகள் கேட்டு செயல்பட்ட தாகவும், பங்கு சந்தை ரகசியங்களை சட்ட விதிகளுக்கு முரணாக அவருடன் பகிர்ந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தது. இதன் அடிப்படையிலேயே இந்த சோதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பங்கு சந்தை முறைகேடு தொடர்பாக செபி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சாமியாரின் ஆலோசனைப்படி சென்னையைச் சேர்ந்த ஆனந்த் சுப்பிரமணியன் என்பவர் செயலாக்க அதிகாரியாகவும், ஆலோசகராகவும் சித்ரா ராமகிருஷ்ணன் நியமித்தது கண்டுபிடிக்கப்பட்டது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிக்கு முறைப்படி விளம்பரங்கள் செய்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். ஆனால் அது தொடர்பான எந்த செயல்களிலும் ஈடுபடாமல் சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியத்தை அந்த பதவியில் அமர்த்தி உள்ளார். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் ஆனந்த் சுப்பிரமணியன் நியமிக்கப்பட்டதிலும் முறைகேடு நடந்தது தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மும்பை சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். பங்கு சந்தை தலைமை அலுவலகம் மும்பையில் செயல்பட்டு வருவதால் அதன் அடிப்படையில் மும்பை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து சிபிஐ அதிகாரிகள் பங்கு சந்தை முறைகேடு குறித்து பல்வேறு ஆதாரங்களை திரட்டினர். இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆனந்த் சுப்பிரமணியத்தின் வீட்டுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தி பல்வேறு தகவல்களை சேகரித்தனர். இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டார். சென்னையிலிருந்து உடனடியாக மும்பைக்கு அழைத்து சென்றனர். அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்தனர். ஆனந்த் சுப்பிரமணியம் வீட்டில் இருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தும் டிஜிட்டல் ஆவணங்கள் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாமியார் ஒருவரிடம் ஆலோசனை கேட்டு சித்ரா ராமகிருஷ்ணன் செயல்பட்டு வந்த நிலையில் அவரது ஆலோசனையின் பேரிலேயே ஆனந்த் சுப்பிரமணியன் செயல்பட்டுள்ளார். தேசிய பங்கு சந்தை தலைமை நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணன் கடந்த 2016 ஆம் ஆண்டு பணிபுரிந்தபோது தான் இந்த முறைகேடுகள் கண்டு பிடிக்கப்பட்டது. அப்போதுதான் ஆனந்த் சுப்பிரமணியம் செயலாக்க அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணால் பணி நியமனம் செய்யப்பட்டிருந்தார். இதுவரை அந்த பதவியில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்டதை விட அதிகளவில் ஆண்டுக்கு ரூ. 4 கோடி சம்பளம் ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பங்கு சந்தை ரகசியங்களை விதிமுறைகளை மீறி சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரமணியத்துடன் பகிர்ந்து கொண் டதும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து சித்ரா ராமகிருஷ்ணன் பதவி விலகினார். ஆனந்த் சுப்பிரமணியன் கைதாகி இருப்பதையடுத்து அடுத்த கட்டமாக இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணனும் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.