tamilnadu

img

தமிழ்நாடு பருத்திக் கழகம் உருவாக்குக: நாகை மாலி வலியுறுத்தல்

சென்னை, ஏப்‌.6- ஒன்றிய அரசின்  பருத்திக் கழகம்  தனது நோக்கத்திலிருந்து விலகி இருப்பதால்  தமிழ்நாடு அரசு “தமிழ்நாடு பருத்திக் கழகம்” ஒன்றை அமைத்து கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை மற்றும் ஜவுளித் தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை மற்றும்  குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  மானிய கோரிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின்  சட்டமன்ற குழுத் தலைவர் நாகை மாலி பேசியதாவது:- அவசர கோலத்தில் அமல்படுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. வரியும், அதைத் தொடர்ந்து வந்த  கொரோனா பாதிப்பும் இந்த தொழிலை மிகவும் பாதித்துள்ளது. பெரிய தொழில்கள் சமாளிக்க முடிந்தது. குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஏற்கனவே நலிவடைந்துள்ள நிலையில், இது மேலும் மோசமாகி வருகிறது.  இதை மனதில் கொண்டு அரசு இந்த தொழிலை  அணுக வேண்டும்.

கந்து வட்டிக்குள் சிக்கிய  சிறு நிறுவனங்கள்

இத்தொழிலுக்கான முக்கிய பிரச்சனை முதலீடு மற்றும் நடைமுறைச் செலவுக்கான பணம். வங்கிகளில் இவர்களுக்கு சரியான கடன்  வசதி இல்லை. தேவையற்ற ஆவணங்களை கேட்டு கடன் தராமல் வங்கிகள் இவர்களை அலைக்கழிப்பதும், திருப்பி அனுப்புவதும் என்ற  நிலை உள்ளது. இதனால் வட்டிக்கும், கந்து வட்டிக்கும் வாங்கி சிக்கிக் கொள்கிறார்கள்.  அலைக்கழிப்பு குறு-சிறு தொழில் நிறுவனங்கள் தங்கள்  உற்பத்தி பொருட்களை பெரிய நிறுவனங்க ளுக்கு தருகிறார்கள். காலத்தில் அவர்கள் இதற்கான பணத்தை கொடுப்பதில்லை. 6 மாதம், 1 வருடம் என அலைக்கழிக்கிறார்கள். இதனால் குறு-சிறு தொழில்கள் மிகவும் பாதிப்படைகின்றன. 45 நாட்களுக்குள் பணத்தை தர வேண்டுமென சட்டம் சொல்லுகி றது. ஆனால் அவ்வாறு கொடுப்பதில்லை. இதை கறாராக அமலாக்க வேண்டும்.

நிலைக்கட்டணத்தை ரத்து செய்க!

சிறு-குறு தொழில் நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்களை அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வேண்டும். சில உற்பத்தி பொருட்களை சிறு-குறு தொழில்களுக்கு ஒதுக்கீடு செய்ய  வேண்டும். சிறு-குறு தொழில்கள் மற்றும் விசைத்தறி போன்றவற்றிற்கு நாம் குறிப்பிட்ட  அளவு மின்சாரம் வழங்க வேண்டும். தற்போது  வழங்குவது போதாதது என்பதும், சமீபத்திய  மின் கட்டண உயர்வு அந்த தொழில்முனை வோருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை அரசு கவலையோடு பரிசீலிக்க வேண்டும். சிறு-குறு தொழில்களுக்கு மின்கட்டணத்தில் நிலைக்கட்டணம் என்ற கட்டணம் நிர்ணயிக் கப்படுகிறது. சமீபத்தில் அந்த நிலைக்கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. இதை பழைய கட்டண முறையிலேயே வசூலிக்க வேண்டும். சிறிய மைக்ரோ தொழில்களுக்கு தனியான தொழிற்பேட்டை அமைத்து கட்டமைப்பு வசதி கள் செய்து தர வேண்டும். நமது மாநிலத்தில்  கிடைக்கிற மூலப்பொருட்களை கொண்டு சிறு - குறு தொழில்கள் உருவாக நாம் ஊக்கப்படுத்த வேண்டும். தனியார் தொழிற்பேட்டைக்கு ‘தொழிற்பேட்டை’ என்ற ஒப்புதல் தர வேண்டும்.  இதனுடைய கட்டமைப்பு வசதிக்கு அரசு உதவ வேண்டும்.

விவசாயத்திற்கு அடுத்தப்படியாக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறை. சுமார் 50  லட்சம் சிறு-குறு தொழில்கள் இயங்கு கின்றன. இதில் சுமார் 1.5 கோடி பேர்  தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.  2008க்கு பிந்தைய தொழில்மந்தத்தை வெற்றிகரமாக சமாளித்த நாடுகள் சிறு-குறு தொழில்களின்  பங்களிப்பை பிரதான காரணமாக கூறுகின்றனர். பெரும் முதலீட்டு தொழில் நிறுவனங்களை விட வேலைவாய்ப்பு அளிப்பதில் சிறு-குறு தொழில்கள் முன்னணியில் இருக்கின்றன. சிறு-குறு தொழில் அடர்த்தியாக உள்ள மாவட்டங்களில் அவர்கள் தயாரிக்கும் பொருட் களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் வளாகங்களை ஏற்படுத்தித் தர வேண்டும்.  ஒன்றிய அரசின் காட்டன் கார்ப்பரேசன் தான்  அமைக்கப்பட்ட நோக்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது. எனவே, தமிழ்நாடு  அரசு “தமிழ்நாடு பருத்திக் கழகம்” ஒன்றை  அமைத்து கைத்தறி, விசைத்தறி, பின்னலாடை  மற்றும் ஜவுளித் தொழிலையும், தொழிலாளர் களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அலுமினியம், தாமிரம், இரும்பு உள்ளிட்ட மூலப்பொருட்களின் நிலையற்ற ஏற்ற, இறக்க விலைகளை சமாளிக்கும்வகையில் அரசு தொழிற்பேட்டை உள்ள மாவட்டங்களில் மூலப் பொருட்களை தமிழ்நாடு அரசே நிலையான விலையில் விநியோகிக்க முன்வர வேண்டும். 

பெரும் சிக்கலில் ஜவுளி தொழில்!

தமிழ்நாடு, இந்தியாவின் ஜவுளித் தேவை யில் 50 விழுக்காட்டை பூர்த்தி செய்கிறது. ஆனால், இதன் மூலப்பொருளான பஞ்சுக்கு வெளிமாநிலத்தை நம்பியுள்ளோம். பஞ்சு, நூல்விலை தாறுமாறாக உயர்வதால் இத்தொழி லில் பாதிப்பு ஏற்படுகிறது. 10 லட்சத்திற்கும் மேல் வேலை தரக்கூடிய இத்தொழில் பெரும்  சிரமத்தில் உள்ளது.  விசைத்தறி தொழிலில் ஈடுபடக் கூடிய வர்கள் சமீப காலங்களில் சொல்ல முடியாத துயரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நூல் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பருத்தி உற்பத்திக்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

தென்னை விவசாயத்தில்  கூடுதல் கவனம் !

தமிழ்நாட்டில் தென்னை விவசாயம் பெரும்  தொழிலாக உள்ளது. இந்தியா தென்னை உற்பத்தியில் முதலாவது இடத்தைப் பிடித் துள்ளது. வருடத்திற்கு 4000 கோடி ரூபாய் வரை தமிழ்நாட்டில் நார் தொழிலில் வருமானம் ஈட்டப்படுகிறது. இந்த தொழிலையொட்டி நிறைய சிறு தொழில்களையும் தென்னை நார்,  கயிறு போன்ற தொழில்களையும் மேலும் அபிவிருத்தி செய்யலாம். நமது அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பாரம்பரிய தொழில்கள்

தமிழ்நாட்டில் 68 வகையான பாரம்பரிய தொழில்கள் உள்ளது. இதை கண்டறிந்து வளர்த்தெடுக்கவும், ஊக்கப்படுத்தவும் வேண்டும். காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை,  மாலை 6 மணியிலிருந்து மறுநாள் காலை 10 மணி வரை பீக் ஹவர் என்று சொல்கிறார்கள். இதற்கு  வழக்கமான கட்டணத்தை விட 15 விழுக்காட்டிற் கும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இது சிறு-குறு தொழில்களை மிகவும் பாதிக்கிறது.

தமிழ்வளர்ச்சி

பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆங்கிலம்  - தமிழ் அகராதியை இருமொழி வல்லுநர் குழு அமைத்து தற்காலப்படுத்த வேண்டும். மாவட்டம்தோறும் வழக்குச்சொல் அகராதியை  உருவாக்கத் திட்டமிட வேண்டும். வட்டார மொழி  இலக்கியத்திற்கான ஆய்வு மையங்களை உருவாக்க வேண்டும். வாய்மொழி இலக்கி யத்தைப் பதிவு செய்ய குழு அமைக்க வேண்டும்.   பாரம்பரிய கலை வடிவங்களை மக்களிடம்  கொண்டுசெல்லும் நிகழ்வுகளுக்கும் கலை  இலக்கிய விழாக்களுக்கும் நேரக்கட்டுப் பாடின்றி முழுஇரவும் அனுமதி அளிக்க வேண்டும். இசைப் பல்கலைக்கழகம் போல் நாடகம் மற்றும் நாட்டுப்புறக் கலைகளுக்குப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டும். தமிழை ஒரு மொழிப்பாடமாக கற்றுத்தருகிற  புதிய காணொளிப் பாடங்கள் வேண்டும். மழலை யர் கல்வியிலிருந்து இதனைத் தொடங்கலாம்.  எழுதுவது உச்சரிப்பது இவற்றைக் கற்றுத்தரு கிற வகையில் இவை அமைய வேண்டும். ஆங்கில மொழியைக் கற்றுத்தருகிற எண்ணற்ற காணொளிகள் நமக்கு இணைய வெளியில் காணக்கிடைக்கின்றன. அவற்றை முன்னுதாரணமாகக் கொண்டு நாம் இக்காணொளிகளை உருவாக்கலாம்.  இவ்வாறு நாகை மாலி பேசினார்.