புதுதில்லி,பிப்.9- தமிழக மீனவர்கள் பிரச்சனையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். இரண்டு நாள் அரசு முறை பயணமாக தில்லி வந்திருந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் உடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அமைச்சர் ஜெய்சங்கர், மீனவர்கள் விவகாரத்தில் வன்முறை தவிர்க்கப்பட வேண்டும். இது தொடர்பாக இரு தரப்பு மீனவர் குழுக்களிடையே விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும் புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு, அவர்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது தொடர்பான நடவடிக்கைகளை விரைவுப்படுத்த வேண்டும் . சம உரிமை, அமைதி, நீதி மற்றும் மரியாதை, இலங்கை தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.