சென்னை, ஜூன் 6- கட்டாய பணியிட மாறுதல் உத்தரவினை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் சென்னையில் உள்ள இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை அலுவலக (டிஎம்எஸ்) வளாகத்தில் மாநில அளவிலான பெருந்திரள் கோரிக்கை முறையீடு திங்களன்று (ஜூன் 6) நடைபெற்றது. மாநிலத் தலைவர் வே.விஜயகுமரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் தெ.வாசுகி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார். சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் அ.விஸ்வேஸ்வரன், மாநிலப் பொருளாளர் ச.ஹேமலதா, தமிழ்நாடு மருத்துவத்துறை தொழில்நுட்ப ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் ம.அந்தோணிசாமி, மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மணிமாலா, அரசு கண் மருத்துவ உதவியாளர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் க.அன்பழகன், அரசு ஊழியர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் நா.வினோத்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில் மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை காவல்துறையினர் அரசு ஊழியர்கள் என்று கூட பார்க்காமல் இழுத்துச்சென்றும், குண்டுக்கட்டாக தூக்கிச் சென்றும் கைது செய்தனர். அரசாணை 131-இன் படி விருப்ப மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். இந்த அரசாணையின் படி கடந்த காலங்களில் ஆண்டுக்கு ஒருமுறை விருப்ப பணியிட மாறுதல் நடைபெற்று வந்தது. இந்நிலையில் அரசாணைக்கு புறம்பாக, தமிழக முதல்வருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்த கட்டாய பணியிட மாறுதல் உத்தரவை இயக்குநர் வழங்கியுள்ளார்.
கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்களுக்கு மருந்தாளுநர்கள் மருந்தியல் சேவையை செய்து வருகிறார்கள். கண் மருத்துவர்கள் உதவியாளர்கள் கண் புரை போன்ற நோய்களை கண்டுபிடித்து மக்களுக்கு கண்ணொளி வழங்கி வருகிறார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய மருந்தாளுநர்களுக்கு மட்டும் இதுவரை ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. மேலும் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இயக்குநர் காலம் கடத்தி வருகிறார். நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண்பதற்கு பதிலாக காவல் துறை மூலம் அச்சுறுத்தி எங்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளனர். காவல்துறையின் இந்த செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்த கட்டாய பணியிட மாறுதலால் கிராமப்புற மருந்தியல் சேவை கடுமையாக பாதிக்கப்படும். எனவே அரசும், நிர்வாகமும் உடனடியாக சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார். கிராமப்புற மருந்தியல் சேவையை மேம்படுத்த வேண்டும், மக்கள் நலன் கருதி காலியாகவுள்ள 1200க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், கொரோனா ஊக்கத் தொகையை உடனே வழங்க வேண்டும், 39 நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும், பேச்சு வார்த்தையில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.